Thursday, April 2, 2026

நிழலில் மறைந்த நிஜம்

 நிழலில் மறைந்த nijam


சென்னையின் டைடல் பார்க் பகுதியில் இருந்தது அந்தப் பிரம்மாண்டமான ஐடி பூங்கா. அதன் பதினோராவது தளத்தில் இருந்த அந்தக் கண்ணாடி அறைக்குள், ஏசியின் சத்தம் மட்டும் ஒரு BGM போல ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால், கார்த்திக்கின் செவிகளில் மட்டும் ஒரு மெலடி எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தது - அதுவும் பிரியா அந்த அறைக்குள் நுழையும் போதெல்லாம்.


இருவரும் 'சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்' பிரிவில் ஒரே டீம். சமமான படிப்பு. சமமான பதவி. அதனாலேயே அவர்களுக்குள் ஒரு இன்ஸ்டன்ட் பாண்டிங் ஏற்பட்டது. ஆரம்பத்தில் வேலை சம்பந்தமாக ஆரம்பித்த பேச்சுகள், மெள்ள மெள்ள கேண்டீனில் அரட்டைகளாகவும், வாட்ஸ்அப்பில் குட் மார்னிங், குட் நைட் மெசேஜுகளாகவும் ஜோக்குகளாகவும் வளர்ச்சி அடைந்தன. அவர்களுக்கேத் தெரியாமல் அவர்களது அந்த நட்பு ஓரிரு மாதங்களிலேயே காதலாக மலர்ந்தது. அந்தக் காதலைச் சொன்னது கூட ப்ரியா தான்.


கார்த்திக் காதலித்த விதம் வழக்கமான ஆண்களைப் போல இல்லை. அது ஒரு விசித்திரமான, அதே சமயம் ஆபத்தான பாணி. அதை ‘காதல்’ என்று சொல்வதை விட ‘சரணாகதி’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அவள் "இந்த ப்ராஜெக்ட் டெட்லைன் கஷ்டம்டா கார்த்திக்" என்று சொன்னால், "ஆமாம் பிரியா, ரொம்ப கஷ்டம்" என்பான். அடுத்த நிமிடமே அவள், "இல்ல இல்ல.. பிளான் பண்ணி முடிச்சிடலாம்டா" என்று மாற்றிக் கூறினால், "கண்டிப்பா பிரியா.. உன் பிளானிங் பத்தி கேக்கணுமா? ஆல்வேஸ் கரெக்டா இருக்கும்" என்பான்.


ஒரு வருடம் கழித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணப் புடவை எடுப்பதில் தொடங்கி, மண்டபம் புக் செய்வது வரை அனைத்திலும் பிரியாவின் ராஜ்யம்தான். திருமணம் முடிந்து முதல் ஆறு மாதங்கள் ஒரு கனவுப் பயணம் போல நகர்ந்தது. அப்புறம்தான் அந்த மாற்றம் கார்த்திக்கிடம் தெரிய ஆரம்பித்தது.


ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, பிரியா உற்சாகமாக சைனீஸ் ரெஸ்டாரண்ட் போகலாம் என்று அழைத்தபோது, வார முழுதும் உழைத்த களைப்பில் இருந்த கார்த்திக் முதல் முறையாக மறுத்தான். "பிரியா.. இன்னைக்கு வேண்டாம்மா. எனக்கு உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு. நாம வீட்ல ரசம் சாதம் சாப்பிடலாம்.. ப்ளீஸ்," என்றான். பிரியா அதிர்ச்சியடைந்தாள். "நீ மாறிட்ட கார்த்திக்! முன்னமாதிரி இல்ல!" என்று கத்தினாள்.


நிலைமை கைமீறிப் போனதை உணர்ந்த இருவரும், தங்கள் முன்னாள் மேனேஜர் சேதுராமன் சாரைச் சந்திக்கச் சென்றார்கள். அவர் இருவருக்கும் உண்மையை விளக்கினார். "பிரியா, கார்த்திக் உன்னை காதலிச்சப்ப, அவன் உன்னை அடையணும்ங்கிற ஆசைல உனக்கு பிடிச்ச மாதிரி நடந்துகிட்டான். அது உன்னை மயக்க அவன் போட்ட ஒரு அழகான வேஷம். அந்த 'அடிமைத்தனம்' அவனோட நிஜ குணம் இல்ல. இப்போ அவன் இயல்பான கார்த்திக்கா மாறிட்டான்."


அவர் கார்த்திக்கிடமும் சொன்னார்: "நீயே அவளை ராணி மாதிரி பழக்கப்படுத்திட்டு, இப்ப திடீர்னு 'இனிமே நீ ராணி இல்ல'ன்னு சொன்னா அவ எப்படி ஏத்துப்பா? நீ உன் இயல்புக்கு மாறா இல்லாத ஒருத்தனா நடிச்சிருக்க."


இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்தார்கள். கார்த்திக் "பிரியா, உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்கும். நீ என்னை விட்டு போயிடுவியோங்கிற பயத்துல தான் நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினேன்" என்றான். பிரியாவும் "காதலை விட அதிகாரம் ருசியா இருந்தது, அதுல நான் என்னை மறந்துட்டேன். இனிமே நாம ரெண்டு பேரும் சமமா இருப்போம்" என்றாள்.


வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது. வானம் தெளிவாகத் தெரிந்தது. பைக்கில் ஏறியதும் கார்த்திக் கேட்டான், "பிரியா.. இப்ப சைனீஸ் ரெஸ்டாரண்ட் போலாமா?" பிரியா சிரித்துக்கொண்டே சொன்னாள், "இன்னைக்கு எனக்கு டயர்டா இருக்குடா. வீட்ல போய் ரசம் சாதம் சாப்பிடலாம்." அந்தச் சிரிப்பில் எந்தப் பொய்யும் இல்லை. நிழல் விலகி, நிஜம் அங்கே நிலைத்தது.


வீயார்

No comments: