Saturday, April 18, 2026

தேடல்

 தேடல்


ஒரு புழுக்கமான சென்னை மாலை. வெளியே வேப்ப மரத்துக் கிளைகள் மெல்ல அசைந்து கொண்டிருக்க உள்ளே அந்த அறையில் ஒரு போர்க்களத்துக்கு உரித்தான அமைதி இருந்தது. 


ராகவன்  ஈசி சேரில் உட்கார்ந்து இருந்தான். அவன் கையில் இருந்த அந்த டேப்லட் ஸ்க்ரீனில்  சில எண்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவனது கண்கள் அந்த வேலையில் பிஸியாக இருந்ததா இல்லை அந்த வேலையை ஒரு கேடயம் போல் பயன்படுத்திக் கொண்டிருந்ததா என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.  மாலதி டைனிங் டேபிளில் உட்கார்ந்து ஒரு பழைய வார இதழை புரட்டிக் கொண்டிருந்தாள். 


கொஞ்ச நேரம் முன்பு தான் அந்த சலசலப்பு வெடித்தது. 


"ராகவ்!  நெக்ஸ்ட் வீக் என்னோட தம்பி வரான். நாம மூணு பேரும் ஒரு நாள் வெளியில போகலாமா எங்கேயாவது ? " என்று மாலதி கேட்டாள்.


ராகவன் தலையை நிமிர்த்தாமலேயே "பார்க்கலாம்" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான். அந்த ஒற்றை சொல் தான் வெடிகுண்டு திரியில் வைத்த நெருப்பை போல் மாறியது. 


"உனக்கு எப்பவும் உன் வேலை தான் முக்கியம்... நான் இந்த வீட்டில ஒரு வேஸ்ட்... எப்பவும் உன்னோட அதிகாரம் தான்.." என்றெல்லாம் ஆரம்பித்த பேச்சு இப்பொழுது இந்த மௌனத்தில் வந்து நின்றது. 


அப்பொழுது மாலதியின் மொபைலில் ஒரு whatsapp மெசேஜ் வந்தது . அவள் நெருங்கிய தோழி சித்ராவின் மெசேஜ் தான். 


'என்னடி மாலதி அடுத்த வாரம் தம்பியோட வெளியில அவுட்டிங்கா?' 


'இல்லடி ராகவ் மாட்டேன் என்று சொல்லிவிட்டான்' என்று பதில் அனுப்பினாள். 


உடனே சித்ராவிடம் இருந்து ஒரு மெசேஜ். 'தயவு செஞ்சு விட்டுக் கொடுக்காதடி மாலதி!  நீ இப்படி ஆரம்பத்திலேயே மௌனமா இருந்தா அது அவனுக்கு இன்னும் வசதியா போயிடும்.  உனக்குன்னு ஒரு ஸ்பேஸ் வேணும். உன்னுடைய தேவைகள் உன்னுடைய ஆசைகள் நீதான் உறக்க சொல்லணும். இல்லன்னா காலம் முழுக்க நீ அவனோட ஒரு நிழலாவே இருக்க வேண்டியதுதான்'. 


ராகவனின் மனதிலும் ஒரு புயல் வீசிக் கொண்டிருந்தது. அன்று மத்தியான்னம்  அவன் தன் அண்ணாவுடன் பேசியது அவனது நினைவில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது.


'ராகவா வீட்ல நம்ம பிடி கொஞ்சம் தளர்ந்தாலும் அப்புறம் எதுவும் பண்ண முடியாதுப்பா. அவங்க கேட்கறதுக்கு எல்லாம் சரின்னு சொன்னா அப்புறம் உனக்குன்னு ஒரு மரியாதை இருக்காது. ஆம்பளைன்னா ஒரு கிரிப் வேணும்.'


எங்கிருந்தோ வேறு எவரோ பேசிய அந்த வார்த்தைகள் ராகவன் மாலதிக்கு இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவரை எழுப்பி இருந்தன. அண்ணன் சொன்னது தான் சரி என்று ராகவனும்  சித்ரா சொன்னது கரெக்ட் என்று மாலதியும் நம்பினார்கள். 


கொஞ்சம் நேரம் ஏதோ சித்தனையில் இருந்த ராகவன் திடீ எழுந்து மாலதியின் அருகே வந்தான். அவன் முகம் இறுகிப்போயிருந்தது. 


"மாலதி ஏன் நீ ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு ஈகோ விஷயமா பாக்குறே? நான் வேலை பார்க்கிறது நமக்காக தானே? ஆனா நீ அதை என்னவோ நான் உன்ன உதாசீனப்படுத்துவதற்காக செய்யற மாதிரி மாத்தி பேசுற. உனக்கு இன்னும் என்ன தான் வேணும்?"


மாலதி அந்த வார இதழ்களை தள்ளி வைத்துவிட்டு எழுந்தாள்.


"எனக்கு வேணுங்கறது உன் பணம் வசதி இல்லை  ராகவ்! உன்னோட  அக்கறை.  ஆனா நீ எப்பவும் ஒரு முதலாளி மாதிரி பேசுற.  நீ சொல்றது தான் சரி நீ செய்யறது தான் முறை அப்படின்னு நினைக்கிறே.  என்னுடைய ஆசைகளுக்கு விருப்பங்களுக்கு இங்க என்ன மதிப்பு இருக்கு?"


இப்படி ஆரம்பித்த அந்த பேச்சு மீண்டும் ஒரு சண்டையில் சென்று முடிந்தது. சற்று நேரம் பிறகு இருவரும் களைப்படைந்தார்கள். இந்த சண்டையினால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்று இருவருக்கும் தோன்றியது. 


ராகவன் அப்படியே தரையில் உட்கார்ந்தான்.  அவன் அப்படி உட்கார்ந்தது மாலதி மனதை என்னவோ செய்தது. அவளும் அவன் அருகில் சென்று உட்கார்ந்தாள்.


"மாலதி கொஞ்ச நேரம் நாம நமக்காக பேசலாமா?" ராகவனுக்கு குரலில் இப்பொழுது அந்த அதிகார த்வனி  இல்லை. ஒரு விதமான கெஞ்சுதல் இருந்தது. 


"இப்ப நீ சொன்னியே நான்  முதலாளி மாதிரி பேசுறேன்னு. யோசிச்சு பார்த்தா அது உண்மைதான். ஆனால் அது நான் உன்கிட்ட காட்டுற அதிகாரம் இல்லை மாலதி.  என்னோட சின்ன வயசுல எங்க அப்பா முன்னாடி நான் ஒரு ஜடமா தான் இருந்தேன்.  'ஏன்டா இதை செஞ்ச ஏண்டா இதை செய்யல யார கேட்டு இத தொட்ட'  அப்படின்னு அவர் ஒவ்வொரு விஷயத்துக்கும் என்ன திட்டியது என்ன ஒரு மூலையில் சுருட்டி போட்டுடுத்து.


எனக்குள்ள ஒரு சின்ன ராகவன். அவன் ரொம்ப பயந்தவன். அவனுக்கு எப்பவுமே ஒரு comfort zone  வேண்டியிருக்கும் அவன சுத்தி இருக்குற எல்லா அவனுடைய கண்ட்ரோல்ல இருக்கணும்னு நினைப்பான். அந்த பழைய பயம்   தான் இப்போ உன்கிட்ட அதிகாரமா வருதுன்னு  நினைக்கிறேன்.  நான் உன்ன அதிகாரம் பண்ணற மாதிரி என்னை பாதுகாக்க பாத்துக்குறேன்." 


அவன் பேச்சைக் கேட்ட மாலதி  உறைந்து போனாள் . ராகவனின் கண்களில் ஒரு சின்ன குழந்தையின்  தவிப்பை அவள் முதன்முறையாக பார்த்தாள்.


"எனக்கும் அப்படித்தான் ராகவ்! எங்க வீட்ல நான் மூணாவது பொண்ணு . எப்பவும் ஒரு ஓரத்தில் தான் இருப்பேன்.  எனக்கு புது டிரஸ் வேணும்னாலோ   ஒரு கஷ்டம்னாலோ அதை சொல்ல எனக்கு தைரியம் கிடையாது. ' நீ சமத்து பொண்ணு எதுக்கும் அடம்பிடிக்க மாட்டே' ன்னு சொல்லிச்  சொல்லி என்னுடைய விருப்பங்களை எல்லாரும் புதைச்சிட்டாங்க.  அதனாலதான் இப்ப நீ சின்னதா ஒரு மாட்டேன் சொன்னா கூட எனக்கு அந்த பழைய வேண்டாத மாலதியா  மாறிடுவேனோன்னு  ஒரு பயம் வருது.அதுதான் கோவமா வெடிக்குது." 


இருவரும் பேசி முடித்ததும் அந்த அறையில் ஒரு அமைதி நிலவியது ஆனால் அது கசப்பான அமைதி அல்ல. அவர்கள் ஒருவரை ஒருவர் புதிதாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டார்கள். இதுவரையில அவர்கள் பார்த்தது ராகவனையும் மாலதியையும் அல்ல தங்களுக்குள் இருந்த அந்த ஆறாத காயங்களைத்தான். 


தன் அப்பாவிடம் இழந்த அந்த ஆளுமையை மாலதியிடம் தேடிக் கொண்டிருந்தான்  என்று ராகவனுக்கு புரிந்தது. தன் பெற்றோர்களிடம் இழந்த அந்த பாசப்பிணைப்பை ராகவனிடம் தேடிக் கொண்டிருந்தாள் என்று மாலதிக்கு புரிந்தது. 


அவர்களுக்குள் இருந்த வெற்றிடம் மற்றவர்களால் அல்ல. ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே அந்த வெற்றிடம் இருந்து இருக்கிறது 


ராகவன் மாலதியின் கைகளை பற்றிக்கொண்டான். 


"மாலதி நம்மை இத்தனை நாள் ஒருத்தர ஒருத்தர் டார்ச்சர் பண்ணிக்கிட்டது நமக்காக இல்லை. நமக்குள்ள இருக்கிற அந்த குழந்தைகளுக்காகன்னு   இப்ப புரியுது.  எனக்குள் இருக்கற அந்த பயத்தைப் போக்கி தைரியத்தை நானேதான் வளர்க்துக்கணம்." 


மாலதி அவன் தோளில் தலை சாய்த்து கொண்டாள்.  


"ஆமாம் நமக்குள்ள இருக்கிற இந்த ஏக்கத்தை தீர்க்கிறதுக்கு  நாம ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கணும். ஆனால் ஒருத்தரோடு வலிக்கு இன்னொருத்தர் முழுமையான தீர்வு ஆக முடியாது அப்படிங்கிறது புரிஞ்சுது ராகவ்." 


அன்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து சமைத்தார்கள். பெரிய பேச்சுக்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு செயலிலும் ஒரு புரிதல் இருந்தது. வெளியே மழை மீண்டும் மெல்ல பெய்யத்  தொடங்கியது ஆனால் அவர்களுக்குள் இருந்த அந்த புயல் ஓய்ந்து இருந்தது.


வீயார் 


Monday, April 13, 2026

உத்தரா (க்கள்)

 உத்தரா (க்கள்)


திருவல்லிக்கேணியின்  சந்துகளில் இப்போதும் என் இளமையின் நினைவுகள் கவிதை பாடிக்கொண்டிருக்கலாம். பார்த்தசாரதி கோவில் மணியோசை  மாட வீதிகளில் கோலங்கள், குளத்தைச் சுற்றி காய்கறி கடைகள், என் வீட்டுக்குப் பக்கத்துல இருந்த உத்தரா என்று என் நினைவை விட்டு அகற்ற முடியாத பல சித்திரங்கள்.


உத்தரா. என் மனதை, இளமையை, நினைவுகளை, கனவுகளை ஆக்ரமித்தவள். என் மனதில் ஆழமாக காதலிக்கத் தெரிந்த எனக்கு, லேசாகக் கூட அவளிடம் சொல்லத் தெரியவில்லை. கடைசியில்  ஒரு சுபயோக சுப தினத்தில் அவளிடம் சொல்லியதும்  எவ்வித ஆரவாரமும் இன்றி அவள் என் காதலை ரிஜெக்ட் செய்ததும் என் இதயம் சுக்குநூறாக உடைந்ததும். இன்று நினைத்தாலும் வலிக்கும். 


But I don't love you da என்ற அந்த ஒற்றை வரி என் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் யாரோ சூறையாடிய உணர்வைத் தந்தது. அவளைத் தினசரி சந்திப்பதே ஒரு நரக வேதனையாக மாறிவிட்டது. அந்தச் சமயத்தில் தான் ஒரு வரப்பிரசாதமாக லக்னோவில் எனக்கு வங்கி உத்தியோகம் கிடைத்தது.


காயப்பட்ட இதயம் இளைப்பாற ஒரு புது இடம் தேடி சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பிய ரயிலில் நான் ஏறியபோது, என் டைரிக்குள் ஒரு காய்ந்த மல்லிகைப் பூவைப் போல அவள் நினைவையும் அவளைப் பார்த்து அவளுக்குத் தெரியாமல் நான் வரைந்த அவளது drawing இரண்டை மட்டும் ஒளித்து வைத்திருந்தேன்.



1990-களின் லக்னோ. நவாபிய  கலாச்சாரம் இன்னும் வீதிகளில் மிச்சமிருந்த காலம். அந்த நகருக்கே உரிய ஒரு கம்பீரம், ஒரு நிதானம் என்னை மெல்ல வசீகரிக்கத் தொடங்கியது. நான் தங்கியிருந்தது மகாநகர் ஏரியா. அங்கே ஒரு சிறிய குளிர்பானக் கடை இருந்தது. அது ஒரு வீட்டின் முன்புறம் இருந்தது. அதன் உரிமையாளர் வீடும் அங்கேயே கடைக்குப் பின்னர் இருந்தது. பெரிய வீடு. அங்கு மில்க் ஷேக்குகளைக் காட்டிலும், ‘சாஸ்’ என்று அழைக்கப்படும் மசாலா மோர் மிகவும் பிரசித்தம். சீரகமும், புதினாவும் மணக்க, அந்த மோர் தொண்டையை நனைக்கும்போது, லக்னோவின் கொதிக்கும் வெயில் கூட ஒரு சுகமான அனுபவமாகத் தெரியும்.


அங்குதான் அவளைச் சந்தித்தேன். விதி எவ்வளவு வலிமையானது என்பதை அந்தப் பெண் தன் பெயரைச் சொன்னபோதுதான் உணர்ந்தேன். "உத்தரா சர்மா."


முதல்முறை அவளைப் பார்த்தபோது யாரோ வெள்ளைப் பனியைத் திரட்டி ஒரு சிலையாகச் செதுக்கி வைத்தது போல இருந்தாள். அந்த நளினம், அந்தப் பார்வை,  இதுவரை நான் எழுதிய அத்தனை கவிதைகளையும் அவளது காலடியில் வைத்துவிட்டு எழுதிய பேனாவை உடைத்து எறிந்துவிடலாம் என்று தோன்றும் அளவிற்கு ஒரு பேரழகு. ஆனால் திருவல்லிக்கேணி காயப்படுத்திய வடு இன்னும் ஆறாததால் மிகவும் ஜாக்கிரதையாகவே அவளிடம் நெருங்கினேன்.


என் மாநிறமும், கூர்மையான முகமும் அவளைக் கவர்ந்ததா அல்லது நான் சரளமாகப் பேசத் தொடங்கியிருந்த ஹிந்தி அவளுக்குப் பிடித்திருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் உத்தரா சர்மா எனக்கு மிக நெருக்கமான friend ஆனாள் .


லக்னோவின் சரித்திரப் புகழ்பெற்ற லால் பாக் கைசர் பாக் மற்றும் ஹஜ்ரத் கஞ் வீதிகளில் நாங்கள் சுற்றித் திரிந்தோம். நவாப்களின் கோட்டைகளும், பழங்காலக் கட்டிடங்களும் எங்களுக்கு மௌன சாட்சிகளாய் அமைந்தன. 1990-களின் அந்த அந்திப் பொழுதுகள் இன்றும் என் நெஞ்சுக்குள் வர்ணங்களை அள்ளித் தெளிக்கின்றன. பழைய உத்தராவின் காயத்தை இந்தப் புது உத்தரா மெல்ல ஆற்றி வந்தாள். அவளுடன் பழகிய  ஒவ்வொரு நொடியும் கடவுள் எனக்குத் தந்த ஒரு பரிசு போலத் தெரிந்தது.


அப்படியான ஒரு மாலைப் பொழுது. நானும் அவளும் Bara Imambara வில். அவளுக்காக நான் ஹிந்தியில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். என் மனதின் ஆழத்தைப் புரிய வைக்க என் டைரியை அவளிடம் காட்ட விரும்பி எடுத்தேன். இந்த டைரியின் ஒவ்வொரு பக்கமும் கவிதைகளாலும் கோட்டோவியங்களாலும் நிறைந்திருக்கும்.


கவிதை இருக்கும் பக்கத்தைத் தேடி நான் வேகவேகமாகப் புரட்டியபோது தான் விதி சிரித்தது. ஒரு  காகிதம் நழுவி அவள் மடியில் விழுந்தது.  அது நான்  திருவல்லிக்கேணியில்  உத்தரவைப் பார்த்து ரசித்து அவளுக்கே தெரியாமல் வரைந்து வைத்த கோட்டோவியம்.



அவள் அதைக் கையில் எடுத்தாள். அந்த ஓவியத்தில் இருந்த பெண்ணின் படத்துக்கு கீழே இருந்த பெயரைப் பார்த்தாள் . அவளது பெயரான உத்தரா என்று  இருப்பதைப் பார்த்துத் திகைத்தாள்.


"யார் இது?" (ஹிந்தியில் தான்)


நான் உண்மையை மறைக்காமல் அது என் பழைய காதலின் நினைவு  என்பதையும் தற்செயலாக அவளது பெயரும் உத்தரா என்பதையும்  சொல்லிவிட்டேன்.


அவ்வளவுதான். அந்த விநாடி உத்தரா சர்மாவின் கண்களில் ஒரு சொட்டு நீர் திரண்டு அந்தக் காகிதத்தில் விழுந்தது. ஓவியத்தில் இருந்த உத்தராவின் கண் அருகே அந்தக் கண்ணீர்த்துளி விழுந்து அந்த முகத்தையே லேசாகச் சிதைத்தது.


"ஓ... அப்படியானால் என் பெயருக்காகத் தான் என்னிடம் பழகினாயா?" என்று அவள் வாய் திறந்து கேட்கவில்லை, ஆனால் அவள் கண்கள் (ஹிந்தியில் தான் ) அதையே பல  முறை கேட்டன.


அதன் பிறகு அவள் என்னைப் பார்க்க வரவே இல்லை. பல நாட்கள் தவித்துப் போன நான் ஒருநாள் அவளது கடைக்கே தேடிச் சென்றேன். அங்கே மௌனமாக நின்றிருந்த அவளிடம்"ஏன் என்னைச் தவிர்க்கிறாய்? நான் உன்னை உண்மையில் நேசிக்கிறேன்" என்று சொன்னேன்.


அவள் என்னைப் பார்த்த பார்வை இன்றும் என் தூக்கத்தைக் கலைக்கிறது.


"நீ என்னிடம் பழகியது உன்னுடைய அந்த உத்தராவின் நிழலைத் தேடித் தானே? உனக்கு என் மேல் ப்ரத்யேக  காதல் இல்லை. உன் காயத்திற்கு ஒரு மருந்தாகத்தான் என்னை நீ பயன்படுத்திக் கொண்டாய். உன் டைரியில் இருக்கும் அந்த ஓவியம் சொல்லாத கதையை உன் மௌனம் சொல்கிறது" என்றாள்.


நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். 


"இல்லைமா அவள் என் கடந்த காலம். நீ தான் என் நிகழ்காலமும் எதிர்காலமும். உன்னை நான் உனக்காகத் தான்  காதலித்தேன்" என்று சொன்னேன் . ஆனால், அவளது மனதில் விழுந்த சந்தேகம் போகவில்லை. 


நான் அவளைக் காதலிக்கவில்லை என் பழைய காதலின் பிம்பத்தைத் தான் அவளிடம் தேடுகிறேன் என்று அவள் தீர்க்கமாக முடிவு செய்துவிட்டாள்.


சில உணர்வுகளை நிரூபிக்க மொழியறிவு மட்டும் போதாது; காலமும் ஒத்துழைக்க வேண்டும். அங்கே அந்த இரண்டுமே எனக்கு  எதிராகச் சதி செய்தன .


மகாநகர் சாலைகளில் இப்போதும் மசாலா மோரின் வாசத்தைப் போல  எனக்கும் உத்தரா சர்மாவுக்குமான அந்த அழகிய பந்தமும் ஒரு மெலிதான சோகத்துடன் அங்கேயே உறைந்து போனது. இரண்டு உத்தராக்கள் என் வாழ்வில் வந்தார்கள். ஒருத்தி என் காதலைப் புரியாமல் போனாள், இன்னொருத்தி என் காதலைச் சந்தேகப்பட்டுப் போனாள்.


அந்த ஓவியம் இன்றும் என்னிடம் இருக்கிறது. முகத்தில் ஒரு கண்ணீர்த் துளியின் தழும்போடு.


வீயார் 

Thursday, April 2, 2026

நிழலில் மறைந்த நிஜம்

 நிழலில் மறைந்த nijam


சென்னையின் டைடல் பார்க் பகுதியில் இருந்தது அந்தப் பிரம்மாண்டமான ஐடி பூங்கா. அதன் பதினோராவது தளத்தில் இருந்த அந்தக் கண்ணாடி அறைக்குள், ஏசியின் சத்தம் மட்டும் ஒரு BGM போல ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால், கார்த்திக்கின் செவிகளில் மட்டும் ஒரு மெலடி எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தது - அதுவும் பிரியா அந்த அறைக்குள் நுழையும் போதெல்லாம்.


இருவரும் 'சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்' பிரிவில் ஒரே டீம். சமமான படிப்பு. சமமான பதவி. அதனாலேயே அவர்களுக்குள் ஒரு இன்ஸ்டன்ட் பாண்டிங் ஏற்பட்டது. ஆரம்பத்தில் வேலை சம்பந்தமாக ஆரம்பித்த பேச்சுகள், மெள்ள மெள்ள கேண்டீனில் அரட்டைகளாகவும், வாட்ஸ்அப்பில் குட் மார்னிங், குட் நைட் மெசேஜுகளாகவும் ஜோக்குகளாகவும் வளர்ச்சி அடைந்தன. அவர்களுக்கேத் தெரியாமல் அவர்களது அந்த நட்பு ஓரிரு மாதங்களிலேயே காதலாக மலர்ந்தது. அந்தக் காதலைச் சொன்னது கூட ப்ரியா தான்.


கார்த்திக் காதலித்த விதம் வழக்கமான ஆண்களைப் போல இல்லை. அது ஒரு விசித்திரமான, அதே சமயம் ஆபத்தான பாணி. அதை ‘காதல்’ என்று சொல்வதை விட ‘சரணாகதி’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அவள் "இந்த ப்ராஜெக்ட் டெட்லைன் கஷ்டம்டா கார்த்திக்" என்று சொன்னால், "ஆமாம் பிரியா, ரொம்ப கஷ்டம்" என்பான். அடுத்த நிமிடமே அவள், "இல்ல இல்ல.. பிளான் பண்ணி முடிச்சிடலாம்டா" என்று மாற்றிக் கூறினால், "கண்டிப்பா பிரியா.. உன் பிளானிங் பத்தி கேக்கணுமா? ஆல்வேஸ் கரெக்டா இருக்கும்" என்பான்.


ஒரு வருடம் கழித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணப் புடவை எடுப்பதில் தொடங்கி, மண்டபம் புக் செய்வது வரை அனைத்திலும் பிரியாவின் ராஜ்யம்தான். திருமணம் முடிந்து முதல் ஆறு மாதங்கள் ஒரு கனவுப் பயணம் போல நகர்ந்தது. அப்புறம்தான் அந்த மாற்றம் கார்த்திக்கிடம் தெரிய ஆரம்பித்தது.


ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, பிரியா உற்சாகமாக சைனீஸ் ரெஸ்டாரண்ட் போகலாம் என்று அழைத்தபோது, வார முழுதும் உழைத்த களைப்பில் இருந்த கார்த்திக் முதல் முறையாக மறுத்தான். "பிரியா.. இன்னைக்கு வேண்டாம்மா. எனக்கு உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு. நாம வீட்ல ரசம் சாதம் சாப்பிடலாம்.. ப்ளீஸ்," என்றான். பிரியா அதிர்ச்சியடைந்தாள். "நீ மாறிட்ட கார்த்திக்! முன்னமாதிரி இல்ல!" என்று கத்தினாள்.


நிலைமை கைமீறிப் போனதை உணர்ந்த இருவரும், தங்கள் முன்னாள் மேனேஜர் சேதுராமன் சாரைச் சந்திக்கச் சென்றார்கள். அவர் இருவருக்கும் உண்மையை விளக்கினார். "பிரியா, கார்த்திக் உன்னை காதலிச்சப்ப, அவன் உன்னை அடையணும்ங்கிற ஆசைல உனக்கு பிடிச்ச மாதிரி நடந்துகிட்டான். அது உன்னை மயக்க அவன் போட்ட ஒரு அழகான வேஷம். அந்த 'அடிமைத்தனம்' அவனோட நிஜ குணம் இல்ல. இப்போ அவன் இயல்பான கார்த்திக்கா மாறிட்டான்."


அவர் கார்த்திக்கிடமும் சொன்னார்: "நீயே அவளை ராணி மாதிரி பழக்கப்படுத்திட்டு, இப்ப திடீர்னு 'இனிமே நீ ராணி இல்ல'ன்னு சொன்னா அவ எப்படி ஏத்துப்பா? நீ உன் இயல்புக்கு மாறா இல்லாத ஒருத்தனா நடிச்சிருக்க."


இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்தார்கள். கார்த்திக் "பிரியா, உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்கும். நீ என்னை விட்டு போயிடுவியோங்கிற பயத்துல தான் நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினேன்" என்றான். பிரியாவும் "காதலை விட அதிகாரம் ருசியா இருந்தது, அதுல நான் என்னை மறந்துட்டேன். இனிமே நாம ரெண்டு பேரும் சமமா இருப்போம்" என்றாள்.


வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது. வானம் தெளிவாகத் தெரிந்தது. பைக்கில் ஏறியதும் கார்த்திக் கேட்டான், "பிரியா.. இப்ப சைனீஸ் ரெஸ்டாரண்ட் போலாமா?" பிரியா சிரித்துக்கொண்டே சொன்னாள், "இன்னைக்கு எனக்கு டயர்டா இருக்குடா. வீட்ல போய் ரசம் சாதம் சாப்பிடலாம்." அந்தச் சிரிப்பில் எந்தப் பொய்யும் இல்லை. நிழல் விலகி, நிஜம் அங்கே நிலைத்தது.


வீயார்

Wednesday, April 1, 2026

அந்த பதினைந்து நிமிடங்கள்

 அந்த பதினைந்து நிமிடங்கள் 


அண்ணா சாலை சிக்னலில் அந்த 90 செகண்ட் கவுண்ட்டவுன் ஓடிக்கொண்டிருந்தது. கார்த்திக் ஸ்டீயரிங்கை இறுக்கப் பிடித்திருந்தான். இருவது வருஷத்துக்கு முன்ன இதே இடத்துல ஆர்.எக்ஸ் 100-ல தம்  அடிச்சுட்டு பறந்த நாட்கள் நினைவுக்கு வந்தது.இப்போ இந்த நாற்பத்திரண்டு வயசு மனசுக்குள்ள வீட்டுக்கு போகணுமேங்கிற அலுப்பும்,  போய் என்ன பண்ணப்போறோம்ங்கிற ஒரு சலிப்பும் தான் மிச்சமிருந்தது.


கார்த்திக்கோட வாழ்க்கை ஒரு perfect excel sheet  மாதிரி. கைநிறைய சம்பளம் தரும் ஐடி வேலை சென்னையில் சொந்த வீடு அன்பான மனைவி ரெண்டு பசங்க. ஆனா இந்த perfect  வாழ்க்கைக்குள்ள அவன் ஒரு வெறும் operating system மாதிரி ஆகிட்டான்.


ஆபீஸ்ல அவன் வயதானவன் என்ற காரணத்தால்  'ஜி' . புது டெக்னாலஜி பத்தி ஜூனியர்ஸ் பேசும்போது, உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்தாலும் மேனேஜர் முகமூடியை மாட்டிக்கிட்டு எல்லாம் தெரியும்னு நடிக்கணும். வீட்டுக்கு வந்தா அவன் அப்பா - அதாவது  wifi fix  பண்றவர் fees கட்டுறவர் அப்புறம் வரும்போது பால் பாக்கெட் வாங்கிட்டு வர்றவர். அவ்வளவுதான். பசங்க அவங்க ஸ்மார்ட்போன் உலகத்துல இருக்காங்க. மனைவி நித்யா அவளோட ஆபீஸ் டார்கெட்ல ஓடிக்கிட்டு இருக்கா. எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்டுல இருந்தாலும் எல்லாரும் தனித்தனி தீவுல இருக்கிற மாதிரி ஒரு உணர்வு.


வீட்டு பார்க்கிங்ல காரை நிறுத்திட்டு ஒரு  15 நிமிஷம் கார்த்திக் இறங்க மாட்டான். இளையராஜாவோட பழைய பாட்டை வச்சிட்டு அப்படியே கண்ணை மூடி உட்கார்ந்திருப்பான். அந்த 15 நிமிஷம் மட்டும்  அவன் மேனேஜரும் இல்லை அப்பாவும் இல்லை. அவன் பழைய கார்த்திக்.


அன்னைக்கும் அப்படித்தான். ஒரு வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சான். "இந்தா நித்யா பால் பாக்கெட்" அப்படின்னு சொல்லிட்டு சோபால உட்கார்ந்தான். அப்போ அவன் பதினேழு  வயசு பொண்ணு அக்ஷயா மெதுவா வெளில வந்தா. இவன் சோபால உட்கார்ந்து இருக்கிறதை பார்த்துட்டு நின்னவ "என்னப்பா, டயர்டா இருக்கியா "ன்னு கேட்டா.


"இல்ல மா கண்ணா லேசா தலைவலி அதான்" கார்த்திக் பொய் சொன்னான்.


அக்ஷயா அவன்கிட்ட வந்து உட்கார்ந்தா. "அப்பா, ஒரு ஹெல்ப் வேணும். நாளைக்கு ஸ்கூல்ல எனக்கு ஒரு அசைன்மென்ட் இருக்கு. எனக்குப் பிடித்த நான் பார்த்தி வியந்த ஒரு ஹீரோ பத்தி எழுதணும். எல்லாரும் ஸ்பைடர் மேன் விராட் கோலின்னு எழுதுறாங்க. ஆனா எனக்கு உங்களை பத்தி எழுதணும் போல இருக்கு."


கார்த்திக் ஆச்சரியமா பார்த்தான். "என்னை பத்தியா? நான் என்ன பண்ணிட்டேன்?"


"அதுதான் அப்பா விஷயமே. நீங்க டெய்லி காலையில எழுந்து அதே டிராபிக்ல போய் பிடிக்காத மேனேஜர் கிட்ட திட்டு வாங்கிட்டு எதுவுமே நடக்காத மாதிரி வீட்டுக்கு வந்து எங்க எல்லாரையும் பாத்துக்குறீங்களே,  அந்த சகிப்புத்தன்மை இருக்கில்லையா அதுதான் சூப்பர் பவர். நான் ஒரு தடவை பார்த்தேன்ப்பா. நீங்க கார்ல உட்கார்ந்து கண்ணை மூடிட்டு பாட்டு கேட்டுட்டு இருந்தீங்க. அப்போ நீங்க ரொம்ப தனியா இருக்கீங்கன்னு எனக்கு தோணுச்சு. ஆனா  நீங்க காரை விட்டு இறங்கும் போது மறுபடியும் எங்களுக்காக சூப்பர் மேன் முகமூடியை மாட்டிக்கிறீங்க. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ப்பா!"


அவ அப்படி சொல்லிட்டு உள்ள போகும்போது, கார்த்திக் அப்படியே உறைஞ்சு போயிட்டான். தான் ஒரு இயந்திரம்னு நினைச்சிட்டு இருந்தவனுக்கு தன் பொண்ணு கண்ணுக்கு தான் ஒரு ஹீரோவா தெரிஞ்சது ஒரு பெரிய பாரத்தை இறக்கி வச்ச மாதிரி இருந்தது.


அப்போதான் அவன் மகன் ராகுல் உள்ளே வந்தான். "அப்பா உங்க போன் லிவிங் ரூம்ல இருக்கு. ஒரு மெசேஜ் வந்துட்டே இருந்தது அதான் குடுக்க வந்தேன் " என்றான் ராகுல்.


கார்த்திக் போனை வாங்கினான். அது ஒரு வாட்ஸ்அப் மெசேஜ். நித்யா அனுப்பியிருந்தாள். மெசேஜைத் திறந்து பார்த்தான். அதில் ஒரு பழைய புகைப்படம் இருந்தது. பல  வருஷங்களுக்கு முன்னால  அவர்கள் ஒரு சின்ன வாடகை வீட்டில் வெறும் தரையில் உட்கார்ந்து  சிரித்துக் கொண்டே சாப்பிடும் படம். அது அவன் நண்பன் வெங்கட் எடுத்த படம். 


அதற்குக் கீழே அவள் எழுதியிருந்தாள்.


"கார்த்திக் நீ கார்ல உட்கார்ந்து  பழைய பாட்டு கேக்குறது எனக்குத் தெரியும். அக்ஷயாசொன்னதையும் நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்.  நீ அவளுக்கு ஹீரோவா இருக்கலாம் ஆனா எனக்கு நீ அந்த பழைய கார்த்திக்கா தான் வேணும். நமக்காக ஓடி ஓடி நாம ரெண்டு பேரும் அப்பா-அம்மாவா ஜெயிக்கிறதுல பிஸியாகி, கார்த்திக்-நித்யாவா தோத்துட்டோமோன்னு பயமா இருக்கு. இன்னைக்கு பால் பாக்கெட் வாங்கிட்டு வந்த கார்த்திக்கா இல்லாம  அந்த ஆர்.எக்ஸ் 100-ல சுத்துன  கார்த்திக்கா உள்ளே வா. நான் உனக்காகக் காத்திருக்கேன்"


கார்த்திக் திகைத்து நின்றான். தான் மட்டுமே ஒரு தீவில் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அந்தத் தீவில் அவனது மகளும், மனைவியும் அவனுக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவன் உணரவே இல்லை. அவன் இத்தனை காலம் தேடிய நிசப்தத்திற்கான மருந்து அவனது வீட்டிலேயே அவர்கள் அன்பிலேயே இருந்தது.


கார்த்திக் மெதுவா எழுந்தான். அவனுக்கு இப்போ தலைவலி இல்லை. நாளைக்கும் அதே டிராபிக் தான், அதே மேனேஜர் தான்.ஆனா நாளைக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வந்த பின்  அவன் கார் பார்க்கிங்ல  தனியா உட்கார மாட்டான். ஏன்னா வீட்டுக்குள்ளேயே அவனுக்காக காத்திருக்கும்  ஒரு உலகம்  இருக்கு.


நித்யாவின் அறை நோக்கி நடந்த கார்த்திக் அந்த மேனேஜர் முகமூடியை அங்கேயே கழற்றி எறிந்திருந்தான். நித்யாவின் கார்த்திக்காக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.


வீயார் 

Saturday, March 28, 2026

பழகிய நிழல்

 பழகிய நிழல்


அடையாறில் அந்த ஸ்கை லைன் அப்பார்ட்மெண்ட்ஸில் 14வது மாடியில் அந்த காலை எப்பொழுதும் போல தான் விடிந்தது. அந்த மிகப்பெரிய படுக்கை அறையில் ஏசியின் சப்தத்தை தவிர வேறு எந்த சப்தமும் இல்லை.


ராகவன் மெதுவாக கண்ணை திறந்தான். அவன் புரண்டு  படுக்கும் முன்னரே விண்டோ கர்ட்டன்ஸ் மென்மையாக விலகி இருந்தன. அடுத்து அவன் பாத்ரூமுக்குள் நுழையும் பொழுது அவனுக்காக விளாவி வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் அவன் விரும்பும் சுடு பதத்தில் இருந்தது.


அவன் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை. அவனது டர்க்கி டவல், துவைத்து மடித்து வைக்கப்பட்ட அண்டர் கார்மெண்ட்ஸ் ஆபீசுக்கு அணிய  பொருத்தமான கருநீலச் சட்டை என்று எல்லாமே மாயாபஜார் படக் காட்சி போல மாயமாக அங்கே அவனுக்காக காத்துக்கொண்டு இருந்தன. 


ஜனனி கிச்சனில் இருந்தாள். ஆனால் கிச்சனில் அவள் வேளை செய்து கொண்டிருப்பது போல எந்த சத்தமும் கேட்கவில்லை. கடுகு கூட அவளுக்கு பயந்து சத்தமில்லாமல் தான் வெடிக்கும் போல என்று நினைத்துக் கொண்டான். 


ஆபீஸ் போக ரெடியான ராகவன் டைனிங் டேபிளுக்கு வந்தான். அவனது தட்டில் மூன்று இட்லி ஒரு சிறிய கிண்ணத்தில்  இரண்டு கரண்டி சாம்பார் பக்கத்தில் இஞ்சி மணக்கும் சட்னி. அவன் அமர்ந்த நொடியில் காபி டபரா அவன் முன்னே வைக்கப்பட்டது.


"ஜனனி..." என்றான் ராகவன்.


அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.  "சொல்லுங்க..?"


"இன்னைக்கு evening  ஒரு presentation  இருக்கு. வர லேட்டாகும்."


"சரிங்க. லஞ்ச் பாக்ஸ்ல லெமன் ரைஸ் வச்சிருக்கேன். கூடவே கொஞ்சம் நட்ஸ் இருக்கு. மறக்காம சாப்பிடுங்க."



அவள் சொல்லிவிட்டு உள்ளே போனாள். ராகவனுக்குத் தொண்டையில் இட்லி சிக்கியது போலிருந்தது. சரிங்க, சாப்பிடுங்க, மறக்காதீங்க - இந்த மூன்று ஆண்டு மேரீட் லைப்ல இவகிட்ட வேற வார்த்தைகளே இல்லையா? அவன் ஒரு குழந்தையைப் போல கவனிக்கப் படுகிறான் . ஆனால்  ஒரு ஆணாக எங்கே இருக்கிறான்? 


ராகவன் வளர்ந்த வீடும் இப்படித்தான். அவன் அம்மா அவனது ஷூஸ்  துடைத்து வைப்பதிலிருந்துஅவன் கேட்காமலேயே தட்டில் நெய் ஊற்றுவது வரை எல்லாம் தானாக நடக்கும். இந்த தானாக நடக்கும் விஷயங்கள் ராகவனுக்குப் பழகிப் போய்விட்டது. ஒரு கட்டத்தில், இந்த  கவனிப்பு அவனுக்கு ஒரு பாரமான மௌனமாகத் தோன்றியது. இந்தப் Familiarity அவனுக்கு Neglect போல உருமாறியது. 


அன்றைக்கு அந்த மீட்டிங் போது தான் ரிஸ்க் டிபார்ட்மென்ட் சேர்ந்த நிஷாவைப் பார்த்தான். 


அன்று மாலை மீட்டிங் முடிந்து எல்லாரும்  கிளம்பிய போது, நிஷா அவன் அறைக்குள் வந்தாள். அவளுக்கு ராகவனைப் பற்றி எதுவும் தெரியாது. அவள் கையில் இரண்டு காபி கப்கள் இருந்தன. 


ஜி  உங்களுக்கு காபில சுகர் எவ்வளவு போடணும்னு தெரியல. அதான் தனியா சாஷே கொண்டு வந்திருக்கேன். நீங்களே போட்டுப்பீங்களா?


ராகவன் ஒரு வினாடி ஸ்தம்பித்துப் போனான். பத்து வருடத்தில் ஜனனி ஒருநாள் கூட அவனிடம் சர்க்கரை அளவு கேட்டதில்லை. அவளுக்குத் தெரியும் என்பதால் அவள் போடுவாள். ஆனால் நிஷா கேட்கிறாள். அந்த கேள்வி ராகவனுக்கு ஒரு பெரிய கௌரவத்தைத் கொடுத்தது . அவன் likes and dislikes அங்கே மதிக்கப்படுவதாக உணர்ந்தான்.


"நிஷா... எனக்கு சர்க்கரை கம்மியாத்தான் பிடிக்கும். தேங்க்ஸ்," என்றான் 


நிஷா சிரித்தாள். "உங்க presentation சூப்பர் சார். ஆனா நடுவுல  நீங்க கொஞ்சம் டயர்டா தெரிஞ்சீங்க. ஏதாச்சும்  டென்ஷனா?"


ராகவன் பேச்சை நிறுத்தினான். அவனுக்கு நிஷா கேட்டது புதுசா இருந்தது. ஜனனி அவன் சோர்வைப் பார்த்தால்  ஒரு கிளாஸ் ஜூஸ்  தருவாள். ஆனால் நிஷா என்ன ஆச்சு என்று  கேட்கிறாள். அந்த கேள்வி  ராகவனுக்குப் புதிதாக இருந்தது. யாரோ ஒருவர் தன்னை உற்று நோக்குகிறார்கள் தன் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்கிறார்கள்  என்பது அவனுக்கு ஒரு கிளர்ச்சியைத் தந்தது. 


நிச்சயமாக ராகவன் ஜனனியை வெறுக்கவில்லை . அவனுக்குத் தேவைப்பட்டது கவனிப்பு . ஆனால், அது பழகிப்போன கவனிப்பு அல்ல. அதுவும்  ஒரு அந்நியப் பெண்ணிடமிருந்து வந்த இந்த  புதுமையான தாகத்தைத் தூண்டுகிற கவனிப்பு அவனை புரட்டிப் போட்டுவிட்டது. மேலும் விவரிக்கத் தேவை இல்லாத படிக்கு அவனுக்கு நிஷா மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அது மிக வேகமாக வளர்ந்து நெருக்கமாகவும் காதலாகவும் பரிணமித்தது. 


மூன்று மாதங்கள் கழித்து ஒரு மழை பெய்த இரவு. ஜனனி ஹாலில் அமர்ந்திருந்தாள். அவள் கையில் ராகவனின் மொபைல் இருந்தது. அதில் நிஷாவின் குறுஞ்செய்திகள் கொட்டிக் கிடந்தன. 


"ராகவன், இது என்ன?" ஜனனியின் குரலில் நடுக்கமில்லை, ஆனால் ஒரு ஆழம்  இருந்தது.


ராகவன் தற்காப்புக்காகத் தன் கோபத்தை ஆயுதமாக எடுத்தான். "ஆமாம் ஜனனி. நான் நிஷாவை விரும்புறேன். அவளோடு இருக்கும்போதுதான் நான் நானா இருக்கேன். ஏன்னா, அவளுக்கு நான் யாருன்னு தெரியுது.என்னைப் பத்தி ஒவ்வொண்ணா ஒவ்வொரு நாளும் புதுசா தெரிஞ்சுக்கறா. எனக்கு அது பிடிச்சிருக்கு "


ஜனனி ஏளனமாக ஒரு புன்னகை பூத்தாள். "உங்களுக்கு என்னைப் பற்றி எதுவும் feelings இல்லையா ராகவன்? இந்த வீட்டுல இருக்கற  ஒவ்வொரு அணுவிலும் உங்கள் விருப்பங்கள்  தானே படிந்திருக்கிறது?"


"அதுதான் தப்பு ஜனனி!" என்று கத்தினான் ராகவன். "இந்த வீடு, இந்தச் சாப்பாடு... இது எதுவுமே எனக்காக இல்லை. இது உன் கடமைக்காக. நீ ஒரு மெஷின் மாதிரி இயங்குற. இதுல அன்பு எங்க இருக்கு? எனக்கு எப்போதாவது ஒரு முக்கியத்துவம்  கொடுத்திருக்கிறாயா? நீ எனக்கு முக்கியத்துவம் கொடுக்காததால்தான் நான் இப்படி ஆனேன்."


ஜனனி மெதுவாக அவன் அருகில் வந்தாள். "முக்கியத்துவம்னா என்ன ராகவன்? ஒரு புதுப் பொண்ணு உங்களைப் பார்த்து உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்கிற அந்தச் சிலிர்ப்பு மட்டும்தான் கவனமா? மூணு வருஷமா நீங்க கேட்காமலேயே உங்களுக்குப் பிடிச்சதை நான் செஞ்சேனேஅது கவனிப்பு இல்லையா?"


"இல்லை!" ராகவன் ஆவேசமானான். "அது ஒரு பழக்கம்  பழகிப்போன எதிலுமே சுவாரஸ்யம் இருக்காது ஜனனி. எனக்கு வேண்டியது ஒரு தேடல். நிஷா என்கிட்ட கேட்கிறா. ஏன் டல்லா இருக்கீங்கன்னு. நீ கேட்கமாட்டே. நான் கேக்காமயே  ஒரு மாத்திரையைக் கொண்டு வந்து தருவ . எனக்குத் தேவை மாத்திரை இல்லை ஜனனி, என் வலியை நீ உணரணும்கிற அந்த ஒரு நிமிஷப் பேச்சு."


ஜனனியின் கண்கள் லேசாக பனித்தன. 


"உணர்ந்ததால்தானே மாத்திரை கொண்டு வந்து தர்றேன் ? நீங்களா தலை வலிக்குதுன்னு சொல்ற வரைக்கும் காத்திருக்கிறதா அன்பு? அந்த வலி உங்க முகத்துல தெரியுறதுக்கு முன்னாடியே என் மனசுக்குத் தெரிஞ்சுடுதே.. அதுதான் உண்மையான அன்பு "


"ஜனனி stop your sermons "


"நான் நிறுத்தமாட்டேன். நீங்க கேட்டுதான் ஆகணும்" என்ற  ஜனனி தொடர்ந்தாள். 


"நிஷா உங்களுக்குத் தர்றது ஒரு guest attention. நான் உங்களுக்குத் தந்தது உயிரின் கவனிப்பு. நீங்க நிஷாகிட்ட ஏன் போறீங்க தெரியுமா? அங்கேதான் நீங்க ஒரு ஹீரோவா தெரியுறீங்க. அங்கே உங்க ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு ரியாக்ஷன் கிடைக்குது. இங்கே நான் உங்களை என் உடம்பின் ஒரு பகுதியா பார்த்தேன்ராகவன் . நம்ம கைகளுக்கு நம்ம மூளை  கட்டளை போடுறது இல்லை ராகவன் அது தானா இயங்கும். அதே மாதிரிதான் உங்களுக்கான என் அன்பும். ஆனா, உங்களுக்கு அந்தத் தடையற்ற அன்பு போர் அடிச்சுடுச்சு ."


ராகவன் மௌனமானான். 


ஜனனி தொடர்ந்தாள். "புதுசா கிடைக்கிற கவனம் போதை மாதிரி. கொஞ்ச நாள்ல நிஷாவும் உங்க தேவைகளைப் புரிஞ்சுக்க ஆரம்பிப்பா. அப்போ அவளும் நான் செய்யற மாதிரிதான் செய்வா. அன்னைக்கு அவளையும் விட்டுட்டு இன்னொருத்திய  தேடிப் போவீங்களா? ஏன்னா உங்களுக்கு அன்பு முக்கியமில்லை.உங்களை ஹீரோவா நினைக்கற ஒரு புது ரசிகை தான் வேணும்"


ஜனனி அந்த மொபைலை  மேஜையில் வைத்தாள். "அன்புங்கிறது தேடிக்கிட்டே இருக்கிறது இல்லை ராகவன். ஒரு இடத்துல தங்கிப் போறது.  உங்களுக்கு அது தெரியல."


ஜனனி அந்த இடத்தை விட்டு எழுந்து தன் பெட்ரூமுக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். தன் மனதையும் கூட.


ராகவன் இப்போது ஒரு ஆதரவற்ற அநாதையைப் போல நடு ஹாலில் நின்றிருந்தான். அவனுக்குப் பிடித்த காபி வாசனை சமையலறையில் இருந்து வந்தது. ஆனால் அதைக் குடிக்க இப்போது அவனுக்கு ஆசையில்லை. பழகிப்போன அந்த அன்பின் உன்னதம் புரியாமல் புதுமையைத் தேடிப் போன அவனது அறியாமை அவனைச் சுட்டது.


அவனுக்கு இப்போது வேண்டிய கவனம் கொடுக்க அங்கே யாரும் இல்லை. நிஷாவுக்கு அங்கே இடமில்லை. ஜனனிக்கு இனி மனமில்லை.


மறுநாள் காலை பெட்ரூம் கதவைத் திறந்துகொண்டு வரப்போகும் ஜனனி நேராக இயந்திரம் போல கிச்சனுக்குப் போவாளா இல்லை தன் துணிமணிகளோடு வீட்டை விட்டுப் போவாளா என்னும் கேள்வி அவன் மனதை துளைக்க ஆரம்பித்தது. 


வீயார் 

Wednesday, February 4, 2026

உன் கையின் ரேகையாய்

 உன் கையின் ரேகையாய்....


இரவு ஒன்றரை மணி. 


கௌதமின் அறைக்குள் நிலவிய நிசப்தத்தை லேப்டாப் திரையின் மெல்லிய ரீங்காரம் மட்டுமே கலைத்துக் கொண்டிருந்தது. 21 வயதில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைப்பதென்பது வரம் தான், ஆனால் அந்த நள்ளிரவுப் பணி அவனது உறக்கத்தையும், ஒரு விதத்தில் அவனது நிதானத்தையும் திருடிவிட்டிருந்தது. 


சலிப்புடன் முகநூல் பக்கங்களை உருட்டிக் கொண்டிருந்த கௌதமின் கண்கள், ‘கவிதைச் சோலை’ எனும் குழுவில் நிலைகுத்தி நின்றன. ‘ஆதிரா’ என்ற பெயரில் இருந்து ஒரு பதிவு. அது ஒரு பெண்ணின் உள்ளங்கை. புகைப்படம் மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டிருந்தது. அந்த ரேகைகளின் ஆழம் அவனை என்னமோ செய்தது. புகைப்படத்தின் கீழே ஒரே ஒரு வரி:


“உன் கையின் ரேகையாய் என்னை நீ மாற்றிக்கொள்...


அந்த வரியைப் பார்த்ததும் கௌதமிற்குள் ஒரு  மின்சாரம் பாய்ந்தது. அவன் கவிஞன் அல்ல; ஒரு கவிதை புத்தகத்தைக் கூட முழுமையாகப் படித்ததில்லை. ஆனால், அந்த வரியின் முடிவை யாரோ அவனது காதுக்குள் ரகசியமாகச் சொன்னது போல இருந்தது. அவனது விரல்கள் விசைப்பலகையில் தாளமிட்டன:


“நான் உன்னவன்... உன்னவன்... உன்னவன்... என்னை நீ ஏற்றுக்கொள்!”


அவன் பதிவிட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம், மெசஞ்சரில் ஒரு பச்சை நிறப் புள்ளி மின்னியது. ஆதிராவிடமிருந்து மெசேஜ். 


“யார் நீ? உனக்கு எப்படித் தெரியும்? இந்த வரியை நான் எங்கும் பதிவிட்டதில்லை. என் டைரியின் கடைசிப் பக்கத்தில், என்னால் எழுதப்பட்ட வரி இது. உனக்கு எப்படித் தெரியும்?”


கௌதமிற்கு பதில் தெரியவில்லை. அவனது இதயம் வழக்கத்திற்கு மாறாக வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அந்த நள்ளிரவு, அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஆதிராவிற்கு 50 வயது என்பது தெரிய வந்தபோது கௌதமிற்கு அது ஒரு தடையாகத் தெரியவில்லை. மாறாக, அவளது குரலில் இருந்த அந்த முதிர்ச்சியும், அதிலிருந்த சோகமும் அவனை ஈர்த்தன.


அடுத்த பத்து நாட்கள் ஒரு கனவைப் போலக் கடந்தன. கௌதமிற்கு வேலையில் கவனம் செல்லவில்லை. ஆதிராவுடன் பேசுவதே அவனது முழு நேர வேலையாக மாறியது. பழகிய இரண்டு நாட்களில் அவளைப் பெயர் சொல்லி ஒருமையில் பேசும் அளவுக்கு நெருக்கம் வந்து விட்டது. ஒரு நாள்  ஆதிரா அவனை தன் வீட்டுக்கு அழைத்தாள் .


“ஆதிரா, அந்தத் தெருவில் நுழையும்போது ஒரு பழைய வேப்பமரம் இருக்குமே, அதன் அடியில் ஒரு உடைந்த சிமெண்ட் பெஞ்ச்... இப்போதும் இருக்கிறதா?” என்று கௌதம் போனில் கேட்டான்.


போனின் மறுமுனையில் ஆதிராவின் மூச்சுக்காற்று கனத்தது. “கௌதம்... அந்தப் பெஞ்ச் இருபது வருஷத்துக்கு முன்னாடியே உடைஞ்சு போச்சு. இப்போ அங்கே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வந்துடுச்சு. நீ... நீ அந்தத் தெருவுக்கு வந்ததே இல்லைன்னு சொன்னியே?”


கௌதம் கண்கள் மூடிச் சொன்னான், “எனக்குத் தெரியல ஆதிரா. ஆனா, அந்தத் தெருவின் ஒவ்வொரு வாசனைக்கும் என் மூளைக்குள்ள ஒரு அர்த்தம் இருக்கு. ஏதோ ஒரு சக்தி  என்னை அங்கே இழுக்குது.”


கௌதமின் நண்பன் கார்த்திக் அவனை எச்சரிக்கத் தவறவில்லை. “டேய் கௌதம், இது நார்மலாவே இல்லைடா. அந்தப் பொம்பளைக்கு உன் அம்மா வயசு இருக்கும். அவங்க ஏதோ பழைய நினைவுகள்ல இருக்காங்க. நீ எதுக்கு அதுல போய் சிக்கிக்கிற?”


“இது வயசு சம்பந்தப்பட்ட விஷயம் இல்லடா  கார்த்திக். நான் அவங்க கூட இருக்கும்போது மட்டும்தான் ‘முழுமையா’ இருக்கிற மாதிரி உணர்றேன். மத்த நேரம் எல்லாம் நான் ஒரு ஜடம் போல இருக்கேண்டா ,” என்றான் கௌதம் ஒரு விதமான பித்துப்பிடித்த நிலையில்.



இறுதியாக அடையாறில்  ஒரு அமைதியான சந்தில் இருந்த ஆதிராவின் வீட்டிற்கு கௌதம் சென்றான். அந்தத் தெருவிற்குள் நுழைந்தபோதே கௌதமிற்கு உடல் சிலிர்த்தது. அவனது பாதங்கள் அந்தச் சாலையின் கரடுமுரடான தன்மையை ஏற்கனவே அறிந்திருந்தது போலச் செயல்பட்டன.


ஆதிராவின் வீட்டு வாசலில் நின்றபோது, அவனுக்கு மூச்சு வாங்கியது. அவன் கதவைத் தட்டவில்லை. வாசலில் இருந்த ஒரு பழைய, களிமண் செடித்தொட்டியின் அடியில் கை நுழைத்தான். அங்கே ஒரு துருப்பிடித்த சாவி இருந்தது. 


கதவைத் திறந்து கௌதம் உள்ளே நுழைந்தபோது, ஹாலில் கையில் ஒரு புத்தகத்துடன்  நின்றிருந்த ஆதிரா ஒரு கணம் அலறியே விட்டாள். “கௌதம்! அந்தச் சாவி அங்கே இருப்பது... இருபத்தி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இருந்த என் கணவருக்குத் தவிர வேற யாருக்கும் தெரியாது. நீ... நீ எப்படி?”


கௌதம் பதில் சொல்லாமல் அந்த வீட்டைச் சுற்றி வந்தான். “ஆதிரா, அந்த இடது பக்கம் இருந்த அந்தப் பெரிய தேக்கு மர அலமாரி எங்கே? அதில் ஒரு சிறிய ரகசிய அறை இருக்குமே?” 


ஆதிராவின் கையில் இருந்த புத்தகம்  கீழே விழுந்தது. அவளது குரல் நடுங்கியது. “கௌதம்... அந்த அலமாரி கரையானால் அரித்துப்போய் நான் அதை அப்புறப்படுத்தி பல  வருஷம் ஆச்சு. நீ 21 வயசு பையன்...உனக்கு இதை பத்தி  எப்படித் தெரியும்?”


அவர்கள் சோபாவில் அமர்ந்தார்கள். ஜன்னல் வழியாக வந்த மாலை நேர வெளிச்சம் ஆதிராவின் நரைத்த கூந்தலில் பட்டுத் தெரித்தது. கௌதம் மெல்ல அவளது கையைப் பற்றினான். அப்போதுதான் ஆதிரா அந்த ரகசியத்தைச் சொன்னாள்.


“கௌதம், நான் அந்தப் போட்டோவைப் போட்டதுக்குக் காரணம், அந்த வரியை முடிப்பவன் என் பழைய கௌதமாக இருப்பான் என்றுதான். சரியாக 22 வருடங்களுக்கு முன்னால், இதே பிப்ரவரி 4-ஆம் தேதி, ஒரு விபத்தில் என் கணவர் கௌதம் என் மடியிலேயே உயிரை விட்டார். அவர் சாகும் போது என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு பாதியாக விட்டுச் சென்ற வரிதான் நீ முடித்த அந்த வரி.”


ஆதிராவின் கண்கள் கலங்கின. “அந்த விபத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, அந்த ரத்தம் என் கைகளில் படிந்து என் ரேகைகளோடு கலந்தது. ‘உன் கையின் ரேகையாய் என்னை மாற்றிக்கொள்’ என்று அவர் சொன்னது சும்மா கவிதை இல்லை... அது ஒரு ஒப்பந்தம் . அன்று முதல் நான் அந்த வரியைச் சொல்லும் ஒரு உயிருக்காகக் காத்திருக்கிறேன்.”


கௌதமிற்கு இப்போது எல்லாம் புரிந்தது. அவனது 21 வயது உடலுக்குள் ஒரு 22 வருட பழைய ஆன்மா விழித்துக் கொண்டது போல அவன் உணர்ந்தான்.


இன்று, பிப்ரவரி 4, 2026.


கௌதமின் பிறந்தநாள். ஆதிரா மிகவும் பதற்றமாக இருந்தாள். “கௌதம், இன்னைக்கு வெளியே போக வேண்டாம். அதே நாள், அதே தேதி... எனக்கு ஏனோ பயமா இருக்கு.”


கௌதம் அவளது கைகளைத் தடவினான். “ஆதிரா, அன்னைக்கு நான் உன்னை  விட்டுட்டுப் போயிட்டேன். ஆனா இன்னைக்கு நாம ஒண்ணா இருப்போம். இந்த விதியை நாம உடைப்போம்,” என்று பிடிவாதமாக அவளைத் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டான்.


ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலத்தில் பைக் ஏறியபோது, கௌதமிற்கு ஒரு விசித்திரமான ‘டிஜா வூ’ ஏற்பட்டது. காதுகளில் பழைய விபத்தின் சத்தம் கேட்கத் தொடங்கியது. அவன் வேகத்தைக் குறைக்க முயன்றான், ஆனால் பைக் அவனது கட்டுப்பாட்டை இழந்தது. எதிரே ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதைக் கண்டும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.


எல்லாம் ஒரு நொடியில் நடந்தது. பைக் மோதியது. கௌதம் தூக்கி வீசப்பட்டான். அவன் தட்டுத்தடுமாறி எழுந்தபோது, அவனுக்குச் சின்ன காயங்கள் தான். ஆனால் ஆதிரா...? அவள் சில அடி தூரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். கௌதம் அலறிக்கொண்டு ஓடினான். அவளைத் தூக்கித் தன் மடியில் கிடத்தினான். 


இப்போது பாத்திரங்கள் மாறின. 22 வருடங்களுக்கு முன்னால் ஒரு இளம்பெண் இதே இடத்தில் ஒரு இளைஞனை மடியில் வைத்திருந்தாள். இன்று ஒரு இளைஞன், 50 வயதுப் பெண்ணைத் தன் மடியில் வைத்திருக்கிறான்.


ஆதிராவின் மூச்சு பலவீனமாகியது. அவளது வலது கை கௌதமின் உள்ளங்கையை இறுகப் பற்றிக் கொண்டது. அவளது நகங்கள் கௌதமின் சதையில் அழுத்தமாகப் பதிந்தன. ரத்தமும் கண்ணீரும் கலந்த குரலில் அவள் சொன்னாள்:


“உன் கையின் ரேகையாய்... என்னை நீ மாற்றிக்கொள்...”


அவளது கண்கள் நிலை குத்தின. ஆதிராவின் உயிர் பிரிந்தது.


ஆதிரா இறந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. கௌதம் இப்போது அந்தப் பழைய வீட்டிலேயே வசிக்கிறான். ஒரு நாள் வீட்டின் பரணில் இருந்த ஒரு பழைய பெட்டியைத் தற்செயலாகத் திறந்தான். 


அதில் 1982 மற்றும் 2004 ஆண்டுகளின் புகைப்படங்கள் இருந்தன. சரியாக 22 வருடங்களுக்கு ஒருமுறை அந்தச் சாலை ஒரு பலியைக் கேட்கிறது. ஒருமுறை அவன் இறக்கிறான், அவள் வாழ்கிறாள். மறுமுறை அவள் இறக்கிறாள், அவன் பிறக்கிறான். இது ஒரு முடிவில்லாத ஓட்டம். 


கௌதம் தன் வலது உள்ளங்கையைப் பார்த்தான். ஆதிரா சாகும்போது அழுத்திப் பிடித்த அந்த இடத்தில், இப்போது ஒரு புதிய ரேகை முளைத்திருந்தது. அது அவளது கையெழுத்தைப் போலவே வளைந்து நெளிந்து இருந்தது.


அவன் மெல்லச் சிரித்தான். ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்தச் சாலையைப் பார்த்தான். அவனுக்குத் தெரியும், எங்கோ ஒரு மூலையில் ஆதிரா இப்போது ஒரு குழந்தையாகப் பிறந்திருப்பாள். இன்னும் 22 வருடங்கள் கழித்து, அவள் வளர்ந்து ஒரு யுவதியாக இந்த வீட்டின் கதவைத் தட்டுவாள். 


அவன் அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடத் தொடங்கினான். 


“வா ஆதிரா... உனக்காக நான் காத்திருப்பேன்.” என்று முணுமுணுத்தான். அவனது உள்ளங்கையில் அந்தப் புதிய ரேகை லேசாகத் துடிப்பது போல அவனுக்குத் தோன்றியது.


வீயார் 


பி.கு.: 


இந்த வரிகள் உண்மையில் நான் ghazal ஸ்டைலில் எழுதிய ஒரு கவிதையின் வரிகள் தான். அந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு. 


உன் கையின் ரேகையாய் என்னை நீ மாற்றிக் கொள் 

நான் உன்னவன் உன்னவன் என்னை நீ ஏற்றுக் கொள் 


நான் ஒரு முள் எனில் உன்னுடை காத்துக் கொள் 

நான் ஒரு மலர் எனில் உன் குழல் சேர்த்துக் கொள் 


கனவிலும் நினைவிலும் உன் பெயர் பேசினேன் 

இன்னொரு வானத்தில் நீ ஒளி வீசினாய் 


உன் மனம் ஆழ்கடல் அதில் என்னை நான் தேடினேன் 

என்னை நீ அறியவே தினம் தினம் பாடினேன் 

நான் உன்னவன் உன்னவன் என்னை நீ ஏற்றுக் கொள் 


வீயார் 


Thursday, January 8, 2026

மறைந்த இடைவெளிகள்

 மறைந்த இடைவெளிகள் 


பெங்களூருவின் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பதினோராவது மாடியில், காலை நேரத்து பில்டர் காபி வாசனை கமகமத்தது. மீனாட்சி பித்தளை டபரா செட்டில் காபியை ஆற்றி, பூஜை அறையிலிருந்து வந்த சிவகுமாரிடம் நீட்டினாள்.


"இந்தாங்கோ... காபி. என்ன இன்னிக்கு காலம்பரமே பலத்த யோஜனை?"


சிவகுமார் காபியை உறிஞ்சிக்கொண்டே ஜன்னல் வழியாகத் தெரிந்த சிமெண்ட் கட்டிடங்களைப் பார்த்தார். 


"என்னமோ மீனாட்சி... மனசு ஒரு இடத்துல தங்க மாட்டேங்குறது. இந்த பெங்களூரு வந்தாச்சு, பையன் கூட இருக்கோம்ங்கிற திருப்தி இருக்கு. ஆனா, இந்த வீடு என்னமோ ஒரு ஜெயில் மாதிரி தோணறது. நமக்கோ வயசாயிடுத்து, கை கால் நடுக்கம் வந்துடுத்து. ஆத்துல ஒரு பிடிமானம் இல்லாத மாதிரி ஒரு பயம்."


அந்த நேரம் ரமேஷ் தன் லேப்டாப்போடு ஹாலுக்கு வந்தான். முகம் முழுக்க டென்ஷன். "அம்மா! அந்த முக்கியமான பைல்ஸ் இருந்த பென்டிரைவ் எங்க வெச்சேன்னு தெரியலை. சீக்கிரம் தேடுங்க, பத்து நிமிஷத்துல மீட்டிங் ஆரம்பிச்சிரும்!"


சிவகுமார் மெதுவாக எழுந்தார். "இருடா... நான் நேத்து அந்தப் பக்கம் பார்த்தேன். தேடித் தர்றேன்."


"அப்பா! நீங்க சும்மா இருங்கோ... நீங்க கை வெச்சா அது இன்னும் எங்கியாவது போயிரும். வித்யா! வித்யா... அந்தப் பென்டிரைவ் எங்கே?" என்று கத்தினான் ரமேஷ்.


சமையலறையிலிருந்து வந்த ரமேஷின் மனைவி வித்யா, அமைதியாகப் பென்டிரைவை எடுத்துக் கொடுத்தாள். ரமேஷின் கோபத்தைக் கண்டு அவள் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் மாமனாரின் வாடிய முகத்தைப் பார்த்தாள்.


அன்று மாலை ஒரு விபரீதம் நடந்தது. ரமேஷ் தன் ஆபீஸ் வேலையாக ஒரு புதிய 'டிஜிட்டல் டேப்லெட்' வாங்கியிருந்தான். அதன் ஸ்க்ரீன் மிக மெல்லியது. சிவகுமார் அதைத் துடைப்பதாக நினைத்து, அழுத்தமாகத் துணியை வைத்துத் தேய்க்க, 'சடக்' என்ற சத்தத்துடன் ஸ்க்ரீன் விரிசல் விட்டது.


மீனாட்சி பதறிப்போனாள். "ஐயோ... இதென்ன காரியம் பண்ணிட்டேள்? ரமேஷ் பார்த்தா கோவப்படுவானே !"


சிவகுமார் திகைத்து நின்றார். ரமேஷ் உள்ளே வந்தான். உடைந்த டேப்லெட்டைப் பார்த்தான். அவன் கண்கள் சிவந்தன. வித்யா ரமேஷின் கையை மெதுவாகப் பிடித்தாள். அவள் ரமேஷின் கண்களைப் பார்த்துத் தலையசைத்தாள். ரமேஷ் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.


"பரவாயில்லைப்பா... ஸ்க்ரீன் தானே மாத்திண்டா போச்சு ? Also ,இதோ பாருங்கோ, இன்னொரு டேப்லெட் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிட்டேன். நாளைக்கே வந்துரும். நீங்க காபி சாப்பிட்டேளா? வித்யா, அப்பாவிற்கு ஒரு காபி எடுத்துண்டு வா," என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டான்.


சிவகுமார் அப்படியே உறைந்து நின்றார். அந்த அறை முழுக்க ஒரு பயங்கரமான மௌனம் நிலவியது. அவர் எதிர்பார்த்த சண்டை வரவில்லை. 


அன்று இரவு சிவகுமார் தூக்கமில்லாமல் தவித்தார். விடியற்காலை வேளையில் மீனாட்சி அவர் அருகில் வந்து அமர்ந்து மெதுவாகப் பேசினாள்.


"என்னன்னா ... தூக்கம் வல்லையா? ஒங்க மனசுல என்ன ஓடிண்டு இருக்குன்னு நேக்கு தெரியாதா? ரமேஷ் நீங்க செஞ்ச காரியத்துக்கு ஒங்கள நாலு வார்த்தை கத்தணும்னு நீங்க காத்துண்டு இருந்தேள். அவன் கத்தினாக்க ' உனக்கு நான் பாரமா இருக்கேன், நாளைக்கே நான் பாலக்காட்டுக்கே கெளம்பறேன், அந்தப் பழைய வீட்ல ஒரு ஓரமா கிடப்பேன்'னு பழைய பல்லவியப் பாடி அவனைக் guilt feeling ல தள்ளணும்னு நீங்க மனக்கோட்டை கட்டி வெச்சிருந்தேள். இல்லையா?


உங்களுக்கு நிஜமாவே பாலக்காடு போகணும்னு ஆசை இல்லை. ஆனா அவன் உங்களைத் திட்டும் போதுதான் இவன் என் மேல அதிகாரமும் கோபமும் காட்டுறான், நான் இவனுக்கு அந்நியமாகல'ன்னு நீங்க ஒரு திருப்தி பட்டுக்கறேள். நேத்து அவன் திட்டாமப் போன உடனே, ஒங்களால அந்த டயலாக் சொல்ல முடியல . அதான் உங்களுக்கு இப்போ இவ்வளவு பதட்டமா இருக்கு. அவன் உங்களை மதிக்கிறான்னா , அதான் திட்டல."


சிவகுமார் மெதுவாகக் கண்களைத் துடைத்துக் கொண்டார். அப்போது ரமேஷ் அங்கே வந்தான். "என்னப்பா... என்ன பேச்சு காலம்பரமே?"


சிவகுமார் எழுந்து ரமேஷின் கைகளைப் பற்றிக் கொண்டார். "டேய்! சாரிடா ரமேஷ்... நான் வேணும்னே பண்ணல, ஆனா நீ திட்டலங்கிறப்போ நேக்கு ஒரு மாதிரி ஆயிடுத்துடா . இனிமே நான் பாலக்காடு போற பழைய பேச்சை எடுக்க மாட்டேன்."


ரமேஷ் சிரித்தான். "அப்பா... நீங்க எப்பவும் எங்களோட இங்கத்தான் இருப்பேள். இந்த weekend நாம எல்லாரும் பாலக்காடு போறோம்... ஆனா அங்க தங்குறதுக்கு இல்ல, நம்ம குலதெய்வம் கோவிலுக்கு ! என்ன சொல்றேள்?"


மீனாட்சி, அதைக் கேட்டுக்கொண்டே, உள்ளே இருந்து சூடாக காப்பி எடுத்துக்கொண்டு வந்தாள். "ஆஹா! குலதெய்வம் கோவில் போனதுக்கு அப்புறம் அப்படியே என்னோட பொறந்த ஊர் கல்பாத்திக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்துறலாம். என்னன்னா போயிட்டு வரலாமா ?"


சிவகுமார் புன்னகைத்தார். அந்தச் சிரிப்பில் பழைய வீட்டின்ஏக்கம் இல்லை மாறாக புதிய வீட்டின் உரிமை இருந்தது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இப்பத்தான் நிஜமான சந்தோஷம் குடிவந்தது.


வீயார்

Sunday, January 4, 2026

உன்னை அறிந்தால்

 உன்னை அறிந்தால்


சமையலறையில் ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரின் சத்தம், அந்த ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதின் அமைதியை ஒரு சீரான தாளத்துடன் கிழித்துக் கொண்டிருந்தது.


பிரியா தேங்காயைத் துருவிக் கொண்டிருந்தாள். நாற்பத்திரண்டு வயதான அவளுக்கு, தன்  வாழ்க்கையும் அந்த கிரைண்டரை போலவே தோன்றியது. ஒரே வட்டத்தில் சுழலும் வாழ்க்கை. அதன் ‘சுவிட்ச்’ அவள் கையில் இல்லை.


ஹாலில் ரவி ஹிந்து பேப்பரை விரித்து வைத்துக் கொண்டிருந்தான். அவன் அருகே காபி இருந்தது. சரியாக அறுபத்தி ஐந்து டிகிரி சூடு. அதிகம் சுடவும் கூடாது, ஆறிப்போகவும் கூடாது. இது அவனது சாம்ராஜ்யம். அவன் நினைத்தால்தான் அந்தப் பக்கம் திரும்ப முடியும்.


"ரவி..." கையை புடவைத் தலைப்பில் துடைத்துக்கொண்டே ஹால் வாசலுக்கு வந்தாள் பிரியா. 


"சுமதி போன் பண்ணினாள். அடையார் சிக்னல் கிட்ட ஒரு இடம் காலியா இருக்காம். நாம் பேசிக்கொண்டிருந்தோமே அந்த புட்டிக் (Boutique) ஆரம்பிக்க... ஓனர் அட்வான்ஸ் தொகையை குறைச்சிருக்காராம்."


ரவி பேப்பரிலிருந்து தலையை நிமிர்த்தவில்லை. பங்குச்சந்தை நிலவரத்தை படித்து முடித்துவிட்டு, ஒரு மிடறு காபியை குடித்தான். அந்த மௌனம் பிரியாவுக்குப் பழகிப்போன ஒன்று.


"பிரியா," அவனது குரலில் ஒரு நிதானம் இருந்தது. எல்லாம் தெரிந்த ஒரு பெரியவர், விவரம் அறியாத குழந்தைக்குச் சொல்லும் தொனி அது. "நாம இதை ஏற்கனவே பேசிட்டோம். அடையார் ரொம்ப தூரம். டிராபிக் பத்தி உனக்குத் தெரியாதா? அதுவுமில்லாம அடுத்த மாசம் அம்மாவுக்கு 

மூட்டு ஆபரேஷன் இருக்கு. வீட்ட யாரு கவனிச்சுப்பா? பிசினஸ்ங்கிறது பொழுதுபோக்கு இல்ல. அதுக்கு இருபத்தி நாலு மணிநேர உழைப்பு தேவை. உன்னால முடியாது."


பிரியாவின் நெஞ்சில் அந்தப் பழைய பாரம் ஏறியது. அது கோபம் மட்டும் அல்ல; விசித்திரமான ஒரு ஆறுதலும் கலந்த உணர்வு.


"என்னால சமாளிக்க முடியும் ரவி. சுமதி ஈவினிங் ஷிப்ட் பார்த்துப்பா. நான் ஃபேஷன் டிசைனிங் படிச்சுட்டு சும்மா இருக்கேன். எனக்கு மூச்சுத் திணறற மாதிரி இருக்கு ரவி," அவள் குரல் தழுதழுத்தது.


ரவி பெருமூச்சு விட்டான். பேப்பரை மடித்து டீப்பாய் மீது வைத்தான். "மூச்சுத் திணறுதா? டிரைவர், வேலைக்காரி, மயிலாப்பூர்ல சொந்த வீடு... உனக்கு டிராபிக்ல கஷ்டப்பட வேண்டாம், வாடகைக்கு அலைய வேண்டாம்னுதான் நான் பனிரெண்டு மணிநேரம் உழைக்கிறேன். எல்லாம் உன் நல்லதுக்குத்தான் பிரியா. ஏன் உனக்கு இது புரியல?"


பிரியா சமையலறைக்குத் திரும்பினாள். அவள் கண்கள் லங்கியிருந்தன. ஆனால் மனதின் ஒரு ஓரத்தில், ஒரு விசித்திரமான திருப்தி இருந்தது. "நான் முயற்சி செய்தேன், ஆனால் அவர் தடுத்துவிட்டார்" என்கிற ஒரு கவசத்தை அவள் மாட்டிக்கொண்டாள்.


கிரைண்டரின் சத்தத்தோடு போட்டியிடும் வகையில் தனக்குள் முணுமுணுத்தாள். "இவர் மட்டும் இல்லையென்றால்... இவருடைய இந்த பிடிவாதம் மட்டும் இல்லையென்றால், நான் இந்நேரம் ஒரு பெரிய ஃபேஷன் டிசைனராக ஆகியிருப்பேன். என் சிறகுகளை இவர்தான் வெட்டுகிறார்."


கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அந்த வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதை இது. இதில் ரவி வில்லன், அவள் தியாகி. அந்த வேடம் அவளுக்குப் பிடித்திருந்தது.



மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு செவ்வாய்க்கிழமை அந்த மாற்றம் நிகழ்ந்தது.


வழக்கத்திற்கு மாறாக ரவி மதியமே வீடு திரும்பினான். காபி கேட்கவில்லை. சோபாவில் அமர்ந்து டையை தளர்த்திக்கொண்டான். அவன் முகத்தில் இதுவரை பிரியா பார்த்திராத ஒரு சோர்வு இருந்தது. அதிகாரத்தின் சோர்வு அல்ல, இருப்பின் சோர்வு.


"நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்," என்றான் ரவி, சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி.


கரண்டி பிரியாவின் கையிலிருந்து நழுவியது. "என்னது? திடீரென்று?"


"ஆபீஸில் லேசான நெஞ்சுவலி வந்தது. ஸ்ட்ரெஸ் தான் காரணம்னு டாக்டர் சொல்லிட்டார். இப்படியே போனா இன்னும் அஞ்சு வருஷத்துல நான் காலி. நமக்குத் தேவையான சேவிங்ஸ் இருக்கு. அது போதும்." அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் இருந்த அந்த அதிகாரம் மறைந்து, ஒரு நிம்மதி குடிகொண்டிருந்தது.


"இப்போ என்ன செய்யப் போறீங்க?" பிரியா திகைப்புடன் கேட்டாள்.


ரவி புன்னகைத்தான். "நான் ஓய்வெடுக்கப் போகிறேன். இத்தனை வருஷம் ஓடினது போதும். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றப் போகிறேன். அப்புறம் நீ..." அவன் டைனிங் டேபிளில் தூசி படிந்திருந்த அவளது ஸ்கெட்ச் நோட்டுகளைக் காட்டினான். "நீ அந்த புட்டிக்கை ஆரம்பி. 

நாளைக்கே அடையார் போ. அட்வான்ஸ் கொடுத்துடு."


அந்த அறையின் காற்று மாறியது. இத்தனை வருடங்களாகத் தன்னை அழுத்தி வைத்திருந்ததாக பிரியா நினைத்த அந்தப் பாரம், திடீரென மறைந்துவிட்டது.


"உண்மையாவா?"


"உண்மையாகத்தான். இத்தனை நாள் என் பயத்தினால் உன்னைத் தடுத்துட்டேன். இனி எனக்கு அந்த அதிகாரம் வேண்டாம். நீ சுதந்திரப் பறவை. போ... ஜெயித்து வா."


கூண்டுத் திறக்கப்பட்டது. காவல் காத்துக்கொண்டிருந்த காவலாளியும் விலகிவிட்டான்.


மறுநாள் காலை.


பிரியா பட்டுப்புடவை கட்டிக்கொண்டு காரில் ஏறினாள். அடையார் சிக்னல் நெருங்க நெருங்க அவளுக்குள் உதறல் எடுத்தது. வெளியே வெயில் கொளுத்தியது. இரைச்சலான சாலைகள். இதுவரை இந்த உலகத்தை காரின் கண்ணாடியின் வழியாக மட்டுமே பார்த்துப் பழகியவள் அவள்.


திடீரென்று ஒரு  எண்ணம் அவளைத் தாக்கியது.


*யாராவது என் டிசைன்களை வாங்குவார்களா? சுமதி என்னை ஏமாற்றிவிட்டால்? எனக்குக் கணக்கு வழக்கோ, வரியை பற்றியோ எதுவுமே தெரியாதே! இவ்வளவு நாள் ரவிதான் எல்லாவற்றையும் 

பார்த்துக்கொண்டார். ஒருவேளை நான் பணத்தை இழந்தால்? என் தோல்வியைக் கண்டு உலகம் சிரிக்காதா? ரவி என்ன நினைப்பார்?*


அவள் நெஞ்சு படபடத்தது. ரவியிடம் சண்டை போடும்போது கூட இப்படித் துடித்ததில்லை. அந்தச் சண்டைகளில் ஒரு பாதுகாப்பு இருந்தது. "அவர் தடுக்கிறார், அதனால் நான் செய்யவில்லை" என்று சொல்வது எவ்வளவு வசதியாக இருந்தது! இத்தனை காலமும் தன் திறமையை ஒரு கற்பனை வானத்தில் பறக்கவிட்டிருந்தாள். அங்கே அவள் ஒரு வெற்றியாளர்—

ஏனென்றால் அந்தத் திறமை ஒருபோதும் பரீட்சிக்கப்படவில்லை.


*ஆனால் இப்போது? தடுப்பதற்கு யாரும் இல்லையே! அந்தப் பெரிய பூட்டு இப்போது திறந்திருக்கிறது. ஒருவேளை நான் வெளியே போய் சிறகுகளை விரிக்கும்போது, என்னால் பறக்க முடியாமல் 

போனால்? விழுந்து அடிபட்டால், பழிபோட ரவி இல்லையே! என் தோல்விக்கு நானே பொறுப்பாகி விடுவேனே! அந்தப் பாரத்தை விட, இந்தச் சிறையே மேல் என்று தோன்றுகிறதே...*


"மேடம், அடையார் வந்தாச்சு," டிரைவர் சொன்னார்.பிரியா வெளியே பார்த்தாள். அந்தக் கடைத் தெரியத் தொடங்கியது.


"வண்டியைத் திருப்புங்க," பிரியா உரத்தக் குரலில் சொன்னாள்.


"மேடம்?"


"வண்டியைத் திருப்புங்கன்னு சொன்னேன்! முக்கியமான டாகுமெண்ட்ஸை மறந்துட்டேன். அதுவுமில்லாம தலை வலிக்குது. வீட்டுக்குப் போங்க."



வீட்டிற்குள் நுழைந்தபோது, ரவி பால்கனியில் துளசிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான்.


"அட, இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? கையெழுத்து போட்டாச்சா?"


பிரியா சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள். அவளுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அவசரமாக ஒரு காரணத்தைத் தேடினாள்.


"அந்த இடம் போயிடுச்சாம் ரவி," அவள் பொய் சொன்னாள். குரலில் நடுக்கம் இருந்தது. "அதுவுமில்லாம... எனக்கு யோசனையா இருக்கு. உங்களுக்கு உடம்பு சரியில்லாதப்போ நான் பாட்டுக்கு பிசினஸ்னு வெளிய சுத்த முடியுமா? உங்களை யார் பார்த்துப்பா? அது சுயநலம்."


ரவி அவளை உற்றுப் பார்த்தான். கையில் இருந்த பூவாளியைக் கீழே வைத்தான். ஹாலுக்கு வந்து அவளுக்கு எதிரே அமர்ந்தான்.


அவன் முகத்தில் கோபமில்லை. ஆனால், ஒரு மெல்லிய சோகம் இருந்தது.


"பிரியா," அவன் மெதுவாகச் சொன்னான். "நான் நல்லா இருக்கேன். எனக்காக நீ வீட்ல இருக்க வேண்டாம்."


"இல்ல ரவி, அந்த டிராபிக்... என்னால தனியா..."


"நிறுத்து," ரவி இடைமறித்தான். அவன் குரல் மென்மையாக இருந்தாலும் உறுதியாக இருந்தது. 


"நீ டிராஃபிக்கை பார்த்து பயப்படல பிரியா. நீ தோற்றுப் போவேன்னு பயப்படுற."


அங்கு நிலவிய அமைதி, கிரைண்டர் சத்தத்தை விடப் பயங்கரமாக இருந்தது.


"இருபது வருஷமா, உன் கனவு நிறைவேறாததுக்கு என்னைக் காரணம் காட்டிட்டு இருந்த. நானும் 'நான் தான் இந்த வீட்டின் தலைவன்'ங்கிற மிதப்புல உன்னைத் தடுத்துக்கிட்டே இருந்தேன். அது எனக்கும் வசதியா இருந்தது, உனக்கும் வசதியா இருந்தது. நீ செய்யாத காரியங்களுக்கு என்னைக் காரணம் காட்டினாய். நான், என் அதிகாரத்தைக் காட்ட 

உன்னைப் பயன்படுத்தினேன்."


பிரியா தலை குனிந்தாள். கண்கள் கலங்கின. தான் கட்டி வைத்திருந்த பிம்பம் உடைவதை அவளால் தாங்க முடியவில்லை.


"ஆனா இனிமே அந்த விளையாட்டு வேண்டாம்," ரவி தொடர்ந்தான். "நீ அந்த பிசினஸை ஆரம்பிக்கலன்னா, அதுக்குக் காரணம் உன் பயம் தானே தவிர, என் கண்டிப்பு கிடையாது. உன் தோல்விக்கோ வெற்றிக்கோ இனி நீதான் பொறுப்பு. அந்தச் சுமையை இனிமேல் நான் சுமக்க விரும்பல."


பிரியா நடுங்கும் குரலில் கேட்டாள். "எனக்குத் தெரியல ரவி... என்னால முடியுமான்னு தெரியல. நான் இதுவரைக்கும் தனியா எதையும் செஞ்சதில்ல."


"எனக்குப் புரியுது," ரவி அவள் கையைப் பற்றினான். "இது பயமாத்தான் இருக்கும். சில சமயம் தோல்வியும் வரலாம். நஷ்டம் வரலாம். ஆனா பரவாயில்லை. நிழல்லயே சண்டை போட்டு ஜெயிக்கிறத விட, வெயில்ல நின்னு தோற்றுப் போறது எவ்வளவோ மேல்."


அவன் கையை அழுத்தியது ஒரு கணவன் என்பதாக அல்ல, ஒரு தோழனாக.


"நாளைக்கு வேற கடை பார்க்கலாம். சின்னதா ஆரம்பி. ஆனா, எனக்காகன்னு சொல்லி வீட்ல உக்காராதே."


பிரியா நிமிர்ந்து பார்த்தாள். ரவியின் கண்களில் இப்போது அதிகாரம் இல்லை. ஒரு தோழனின் நம்பிக்கை இருந்தது. இத்தனை வருடம் தான் ஒளிந்து கொண்டிருந்த அந்தப் பாதுகாப்பான குகை, உண்மையில் ஒரு சிறைச்சாலை என்பதை உணர்ந்தாள். ஆனால் சாவியை ரவி அவளிடமே கொடுத்துவிட்டான்.


"நாளைக்கு... மயிலாப்பூரிலேயே ஒரு இடம் பார்க்கலாம்," என்றாள் பிரியா மெல்லிய குரலில்.


ரவி புன்னகைத்துக்கொண்டே எழுந்து சமையலறைக்குச் சென்றான். "சரி, இன்னைக்கு காபி நான் போடறேன். எத்தனை டிகிரி சூடு வேணும்?"


சமையலறையிலிருந்து சிரிப்பொலி மெலிதாகக் கேட்டது. கிரைண்டர் ஓடவில்லை. ஆனால் வாழ்க்கை, இப்போதுதான் நகரத் தொடங்கியிருந்தது.


வீயார் 

Friday, January 2, 2026

இடம் பொருள் ஏவல்

 இடம் பொருள் ஏவல்


பொருள் :


சென்னை, அடையார்.


நவீன கட்டிடக்கலையின் உச்சமாக விளங்கிய அந்த 'ஆர்க்கிடெக்ட்ஸ் ஸ்டுடியோ'வின் மூன்றாவது மாடி. நேரம் நள்ளிரவு 11 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. வெளியே அடைமழை, ஜன்னல் கண்ணாடிகளைப் பிய்த்துத் தின்பது போல ஆக்ரோஷமாகப் பெய்து கொண்டிருந்தது.


அலுவலகத்தில் இருந்த அத்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டிருக்க, மூலையில் இருந்த சித்தார்த்தின் கேபினில் மட்டும் நீல நிற ஒளி கசிந்து கொண்டிருந்தது. இரண்டு பிரம்மாண்டமான 'வளைந்த மானிட்டர்களுக்கு' (Curved Monitors) நடுவே, சித்தார்த் மாய்ந்து போயிருந்தான். திரையில் ஒரு பிரம்மாண்டமான வணிக வளாகத்தின் '3D மாடல்' மெல்லச் சுழன்று கொண்டிருந்தது. கையில் இருந்த ஸ்டைலஸ் (Stylus) பேனாவால் டிஜிட்டல் பேடில் எதையோ திருத்திக் கொண்டிருந்தான்.


முப்பத்திரண்டு வயது. இந்தியாவின் தலைசிறந்த ஆர்க்கிடெக்ட். ஆனால், அவனது கண்கள் சோர்வில் சிவந்திருந்தன. வெற்றிடம். ஒரு தீராத வெற்றிடம் அவன் கண்களில் தெரிந்தது. அனாதை இல்லத்தில் வளர்ந்தவன் என்பதால், இந்த வெற்றிகளைக் கொண்டாடவோ, தோல்விகளைப் பகிரவோ அவனுக்கு ஒரு ஜீவன் கூட இல்லை. அந்தத் தனிமைதான் அவனது பலம், அதுவே அவனது சாபம்.


"மே ஐ கம் இன், மிஸ்டர் சித்தார்த்?"


திடுக்கிட்டுத் திரும்பினான் சித்தார்த். அந்த நள்ளிரவு நேரத்தில், பூட்டிய அலுவலகத்திற்குள் ஒரு பெண் குரல்.


வாசலில் ஒரு உருவம். சந்தன நிறம். மழையில் லேசாக நனைந்த கருமேகக் கூந்தல். அவள் அணிந்திருந்த அடர் நீல நிறப் புடவை, அந்த அரை இருட்டில் அவளை ஒரு தேவதை போலவும், அதே சமயம் ஒரு மர்ம உருவம் போலவும் காட்டியது.


"நீங்க...? செக்யூரிட்டி சிஸ்டம் லாக் ஆகியிருக்குமே... எப்படி உள்ள வந்தீங்க?" சித்தார்த் நாற்காலியை விட்டு எழுந்தான்.


"பூட்டின கதவுகள் என்னைத் தடுக்காது சித்தார்த்..." அவள் குரலில் இருந்த அந்த விசித்திரமான ஈர்ப்பு, சித்தார்த்தின் கேள்வியை பாதியிலேயே விழுங்கியது. அவள் மெல்ல நடந்து உள்ளே வந்தாள்.


அவள் நகர நகர, அந்த அறைக்குள் ஒரு விசித்திரமான நறுமணம் பரவியது. அது ஜவ்வாது அல்லது மல்லிகை வாசனை அல்ல. பல வருடங்களாகத் திறக்கப்படாத ஒரு பழைய மரப்பெட்டியைத் திறந்தால் வரும், பழமையின் நெடி கலந்த வாசனை.


"நான் மதுமிதா. தஞ்சாவூர்ல இருந்து வர்றேன்."


"மேடம், இது ஆபீஸ் ஹவர்ஸ் இல்ல. ப்ளீஸ் லீவ்," சித்தார்த் கறாராகச் சொல்லிவிட்டு, கணினியைத் திருப்ப முயன்றான்.


மதுமிதா அவன் மேஜையை நெருங்கினாள். திரையில் சுழன்று கொண்டிருந்த கட்டிடத்தைப் பார்த்தாள்.


"இந்தக் கட்டிடத்துல இருக்கற நேர்த்தி, உங்க வாழ்க்கையில இல்ல சித்தார்த். உங்க வலது தோள்பட்டையில ஒரு மச்சம் இருக்குமே... கவனிச்சிருக்கீங்களா?"


சித்தார்த் சிலையாகிப் போனான். சட்டைக்குள் மறைந்திருக்கும் அந்த மச்சம் பற்றி இவளுக்கு எப்படித் தெரியும்? அவனது தனிப்பட்ட மருத்துவரைத் தவிர யாருக்கும் தெரியாத ரகசியம் அது.


"எ... எப்படி?"


"புகழைக் கொடுக்கும் ராஜ மச்சம் அது. ஆனா, ராத்திரி நேரத்துல தீராத தனிமையைத்தான் அது உங்களுக்குத் தருது. சரியா?"


பேசிக் கொண்டே அவள் தனது வலது கையை நீட்டினாள். அவள் விரல்கள் பனிக்கட்டியை விடக் குளிர்ந்து இருந்தன. அந்த விரல்கள், மவுஸ் பிடித்திருந்த சித்தார்த்தின் கையைத் தொட்டன.


*ஷாக்!*


சித்தார்த்தின் உடலில் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. அடுத்த நொடியே, அவனது மூளையின் நரம்புகள் செயல் இழந்தன. அவனது தர்க்க அறிவு (Logic) அணைக்கப்பட்டு, ஒரு விதமான போதை தலைக்கு ஏறியது. கணினித் திரை மறைந்து, அவளது கண்கள் இரண்டு பெரிய சுழல்களாக மாறி அவனை உள்ளிழுப்பது போலிருந்தது.


"எங்க அப்பா 'சுந்தரமூர்த்தி' ஒரு பெரிய மாந்த்ரீகர். அவர் உபாசனை செய்யும் 'கர்ண பிசாசினி' தான் உங்க தனிமையைப் பத்திச் சொன்னுச்சு. எனக்கு ஒரு பழைய பங்களாவை புதுப்பிக்கணும். அதுக்கு நீங்க வரணும்..." அவள் ஒரு எஜமானியைப் போல ஆணையிட்டாள்.


சித்தார்த்தின் கண்கள் சொருகின. அவன் வாய், "வர்றேன்..." என்று தன்னிச்சையாக முணுமுணுத்தது.


"லேப்டாப்பை எடுங்க. இப்போவே கிளம்பலாம்."


சித்தார்த் ஒரு இயந்திரம் போலத் திரும்பினான். கணினியை அணைக்க வேண்டும் என்றோ, ஆபிஸை பூட்ட வேண்டும் என்றோ அவனுக்குத் தோன்றவில்லை. அவன் ஆன்மா இப்போது அவளிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது.



இடம் :


கார் சென்னையைத் தாண்டி, கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகப் பாய்ந்து கொண்டிருந்தது. மதுமிதா டிரைவிங் சீட்டில் அமர்ந்திருந்தாள். பின் இருக்கையில் சித்தார்த், உயிரற்ற பொம்மை போலச் சரிந்து கிடந்தான். அவனது மயக்கம் சாதாரணமானது அல்ல; அது ஒரு 'மாந்த்ரீகக் கட்டு'.


விடியற்காலை 5 மணி. கார் தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையைத் தொட்டது.


நடுக்காவேரி கிராமம். ஊருக்கு வெகு தொலைவில், காவிரி ஆற்றங்கரையை ஒட்டிய ஒரு அடர்ந்த சவுக்குத் தோப்பு. அதன் நடுவே நின்றது அந்தப் பங்களா.


நூறு வருடப் பழமையான கட்டிடம். காரை, பெயர்ந்து செங்கற்கள் வெளியே தெரிந்தன. வாசலில் நின்றிருந்த பிரம்மாண்ட வேப்பமரம், ஏதோ ஒரு ராட்சதக் கிழவி தலைவிரித்து ஆடுவது போலக் கிளைகளை ஆட்டிக் கொண்டிருந்தது.


வீட்டின் திண்ணையில் ஒருவர் அமர்ந்திருந்தார். ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். முறுக்கு மீசை, சிவந்த கண்கள், நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. கழுத்தில் ருத்திராட்ச மாலைகள். அவர்தான் சுந்தரமூர்த்தி.


காரிலிருந்து மதுமிதா இறங்கினாள். அவளைத் தொடர்ந்து, சித்தார்த்தும் தள்ளாடியபடியே இறங்கினான்.


சுந்தரமூர்த்தி சித்தார்த்தை ஏற இறங்கப் பார்த்தார். ஒரு ஆட்டை வெட்டப் போகும் கசாப்புக்காரன், அதன் கழுத்தின் தரத்தைச் சோதிப்பது போன்ற பார்வை அது.


"பொருள் வந்தாச்சு... ஆனா மயக்கம் தெளியறதுக்குள்ள காரியத்தை முடிச்சிரணும்," சுந்தரமூர்த்தி கரகரத்த குரலில் சொன்னார்.


"இவனை மாடி அறைக்குக் கூட்டிட்டு போங்க அப்பா. பகல் முழுக்கத் தூங்கட்டும். அமாவாசை பூஜை நள்ளிரவுல தான்," என்று சொல்லிவிட்டு மதுமிதா உள்ளே சென்றாள்.


சித்தார்த் மாடி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அந்த அறையில் 1920-ல் வரையப்பட்ட ஒரு ஓவியம் இருந்தது. அதில் இருந்த பெண் அச்சு அசல் மதுமிதாவைப் போலவே இருந்தாள். சித்தார்த்தின் மழுங்கிய மூளைக்கு அது விசித்திரமாகத் தோன்றினாலும், பயணக் களைப்பும், வசிய மருந்தின் வீரியமும் அவனை உடனடியாக ஆழ்ந்த உறக்கத்திற்குக் கொண்டு சென்றன.


சூரியன் உதித்து, மறைந்தது. அந்தப் பங்களாவில் பகல் பொழுதே ஒரு விதமான மங்கலான இருளோடுதான் கழிந்தது.


நள்ளிரவு.

சித்தார்த் திடுக்கிட்டு விழித்தான். அறை முழுக்க கும்மிருட்டு. ஜன்னல் வழியே நிலா வெளிச்சம் மட்டும் விழுந்து கொண்டிருந்தது. அவனது தலை பாரமாக இருந்தது. 'நான் எங்கே இருக்கிறேன்?' என்ற குழப்பம் வருவதற்கு முன்...


*ஜல்... ஜல்... ஜல்...*


கூர்மையான சலங்கை சத்தம். அது வெறும் சத்தம் அல்ல; காற்றில் மிதந்து வரும் ஒரு அழைப்பு.


அறைக்கதவு தானாகத் திறந்தது. வெளியே தாழ்வாரத்தில், ஒரு பெண் உருவம் நடந்து செல்வது தெரிந்தது. அது மதுமிதா. ஆனால், நேற்று பார்த்த நவீன உடை இல்லை. பட்டுப்புடவை, தலை நிறைய பூ, கையில் விளக்கு.


சித்தார்த் ஒரு இரும்புத் துண்டு போலவும், அந்த உருவம் ஒரு காந்தம் போலவும் உணர்ந்தான். படுக்கையை விட்டு எழுந்தான். கால்கள் தன்னிச்சையாக அவளைப் பின்தொடர்ந்தன.


ஏவல்:


வீட்டின் மையப் பகுதியில் இருந்த அந்தப் பெரிய முற்றத்தில் (Courtyard), வானம் திறந்திருந்தது. நடுவே ஒரு பெரிய யாக குண்டம் தீயினால் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதைச் சுற்றி மண்டை ஓடுகளும், எலுமிச்சம்பழங்களும் சிதறிக் கிடந்தன.


சுந்தரமூர்த்தி ஒரு நீண்ட கத்தியைத் தீயில் காட்டிக் கொண்டிருந்தார். அவர் வாய் ஏதோ விசித்திரமான மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது.


"ஓம்... க்ரீம்... ஹ்ரீம்... யக்ஷிணி ஆகர்ஷய... ஆகர்ஷய..."


மதுமிதா அந்த யாக குண்டத்தின் மறுப்பக்கம் போய் நின்றாள். தீயின் செந்நிற ஒளியில், அவள் கண்கள் இப்போது ரத்தச் சிவப்பாகத் தெரிந்தன.


"மதுமிதா... என்ன நடக்குது இங்க?" சித்தார்த் கத்தினான். பகல் முழுவதும் தூங்கியதில், அவனது சுயநினைவு லேசாகத் திரும்பியிருந்தது.


திடீரென காற்று வேகமாக வீசியது. விளக்குகள் அணைந்து எரிந்தன.


மதுமிதாவின் குரல் மாறியது. அது மென்மையான இசைக்குரல் அல்ல; கிணற்றுக்குள் இருந்து வரும் ஒரு அசுரக் குரல்.


"நான் மதுமிதா இல்லடா... யக்ஷிணி! மதுமிதாங்கறது நான் போட்டுக்கிட்ட வேஷம்."


சித்தார்த் பயத்தில் உறைந்து, பின்னால் நகர முயன்றான். ஆனால் கால்கள் தரையோடு ஒட்ட வைக்கப்பட்டிருந்தது போல இருந்தன.


சுந்தரமூர்த்தி சிரித்துக் கொண்டே நெருங்கினார். "சித்தார்த்... இந்த வீட்டுக்குத் தேவை ஆர்க்கிடெக்ட் இல்ல. ஒரு 'பலி'. **இடம்** - இந்த யக்ஷிணியின் மாளிகை. **பொருள்** - நீ. **ஏவல்** - இவளுக்கு இளமை கொடுப்பது."


"எ... என்னை ஏன்? என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க?" சித்தார்த் தழுதழுத்தான்.


சுந்தரமூர்த்தி விளக்கினார், "நீ எங்களைத் தேடி வரல சித்தார்த். நாங்க தான் உன்னைத் தூண்டில் போட்டு இழுத்தோம். இந்த உலகத்துல எங்கெல்லாம் ஒரு திறமைசாலி தனிமையில ஏங்கறானோ, அவங்க உடம்புல இருந்து ஒரு விதமான 'ஏக்க நெடி' (Scent of Loneliness) வரும். நான் ஏவி விட்ட **'கர்ண பிசாசினி'** அந்த வாசனையை நுகர்ந்து உன்னைக் காட்டிக் கொடுத்துச்சு. நான் உன் ஜாதகத்தையும், மச்ச சாஸ்திரத்தையும் வச்சு நீதான் சரியான ஆளுன்னு உறுதி பண்ணேன். அப்புறம் என்ன... எஜமானி மதுமிதா உருவத்துல நேர்ல வந்தாங்க... நீ சிக்கிட்ட!"


சித்தார்த் அதிர்ந்து போனான். அவனது வெற்றியும், தனிமையும் அவனுக்கு எமனாக மாறியதை உணர்ந்தான்.


"இன்னும் ஆறு வருஷத்துக்கு என் இளமையைத் தக்க வைக்க, ஒரு கலைஞனோட ரசனை மிக்க ரத்தம் வேணும்!" யக்ஷிணி கையை நீட்டினாள். அவளது விரல் நகங்கள் கூர்மையாக நீண்டு வளர்ந்தன.


சுந்தரமூர்த்தியின் கையில் இருந்த கத்தி, சித்தார்த்தின் நெஞ்சை நோக்கி இறங்கியது.


"அம்மா...!" என்ற சித்தார்த்தின் அலறல், இடியின் சத்தத்தோடு கரைந்து போனது. ரத்தம் யாக குண்டத்தில் சிந்தியதும், யக்ஷிணியின் முகத்தில் இருந்த சுருக்கங்கள் மறைந்து, மீண்டும் 25 வயதுப் பெண்ணாகப் பொலிவு பெற்றது.


அந்தப் பழைய பங்களா மீண்டும் அமைதியானது.



சுழற்சி (6 ஆண்டுகளுக்குப் பிறகு)


சுந்தரமூர்த்தி கையில் இருந்த பழைய ஓலைச்சுவடியைப் புரட்டிக் கொண்டிருந்தார். அவரது தலைமுடி நரைத்திருந்தது.


"தாயே... ஆறு வருஷம் முடியப் போகுது. சித்தார்த்தின் ரத்தம் தந்த சக்தி குறைய ஆரம்பிச்சிருச்சு. அடுத்த பொருள்...?"


யக்ஷிணி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். லேசான சோர்வு தெரிந்தது.


"சுந்தரமூர்த்தி... சித்தார்த்தோட ரத்தம் எனக்கு 'அழகை' (Beauty) மட்டும்தான் கொடுத்துச்சு. ஆனா இந்த நவீன உலகம் ரொம்ப மாறிடுச்சு. இங்க தாக்குப்பிடிக்க அழகு மட்டும் பத்தாது... 'அறிவு' (Intellect) வேணும். தந்திரம் வேணும்."


"அப்போ...?"


"அடுத்த பலி ஒரு கலைஞனா இருக்கக் கூடாது. ஒரு மகா புத்திசாலியா, அறிவுஜீவியா இருக்கணும். அவனோட மூளை பலி கொடுக்கப்படும் போது, அவனோட மொத்த அறிவும் எனக்குக் கிடைக்கும். அப்போதான் நான் இன்னும் வலிமையாவேன்."


சுந்தரமூர்த்தி வக்ரமாகச் சிரித்தார். "கர்ண பிசாசினி ஏற்கெனவே ஒருத்தனைக் கண்டுபிடிச்சுருக்கு தாயே. பெங்களூர்ல... ஒரு பெரிய மூளைக்காரன். ஆனா சுத்தமான அனாதை."



பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டி.


பிரபலமான ஒரு காபி ஷாப்பின் மூலையில் அமர்ந்திருந்தான் விவேக். அவன் ஒரு 'கிரிப்டோகிராஃபி' (Cryptography) எக்ஸ்பெர்ட். முப்பது வயது. விவாகரத்து ஆகித் தனியாக வாழ்பவன். லேப்டாப்பில் ஏதோ சிக்கலான குறியீடுகளை உடைக்க முயன்று கொண்டிருந்தான்.


"எக்ஸ்கியூஸ் மீ... விவேக்?"


விவேக் நிமிர்ந்து பார்த்தான். எதிரே சந்தன நிறத்தில், கருமேகக் கூந்தலுடன் ஒரு பேரழகி. கழுத்தில் ஒரு விசித்திரமான பதக்கம் மின்னியது.


"நான் மதுமிதா. தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்துல இருந்து வர்றேன்."


"சொல்லுங்க..." விவேக் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.


"உங்க உள்ளங்கையில இருக்கற அந்த மச்சம்... அது மகா அறிவுக்கு அடையாளம். ஆனா அது உங்களுக்கு தனிமையைத்தான் பரிசா கொடுத்திருக்கு. சரியா?"


விவேக் அதிர்ந்தான். "உங்களுக்கு எப்படி...?"


"எங்க அப்பா ஒரு கர்ண பிசாசினி உபாசகர்..." என்று சிரித்தவள், தன் பையில் இருந்து பழுப்பு நிறத்தில் இருந்த ஒரு பழைய ஓலைச்சுவடியை எடுத்தாள். அதில் விசித்திரமான எண்கள் மற்றும் எழுத்துக்கள் இருந்தன.


"சித்தர்கள் எழுதின ரகசியக் குறிப்பு இது. இதை 'டீகோட்' (Decode) பண்ண உங்களை மாதிரி ஒரு ஜீனியஸ் வேணும். பெரிய சன்மானம் உண்டு. வர்றீங்களா?"


அந்த ஓலைச்சுவடியின் மர்மமும், அவளது வசீகரப் பார்வையும் விவேக்கின் அறிவுக் கண்ணை மறைத்தன. சித்தார்த்தைப் போலவே, அவனும் அந்த வலையில் விழுந்தான்.


"கண்டிப்பா வர்றேன் மதுமிதா..."


வெளியே இடி இடித்தது. யக்ஷிணிக்குத் தேவையான 'அறிவுப் பசி'க்கான உணவு சிக்கிவிட்டது.


இடம் - அதே நடுக்காவேரி பங்களா.

பொருள்- விவேக்கின் அறிவு.

ஏவல் - இம்முறை அறிவிற்காக ரத்தம் சிந்தப்படப் போகிறது.