Friday, August 29, 2014

பஸ்ஸில் ஒரு குற்றம்.


பஸ் தேனாம்பேட்டையை நெருங்கும் போது நிறைந்து விட்டது. சரியாக நிற்கக் கூட இடமில்லை. ஒருத்தர் மூச்சுக்காற்று மற்றவர் மேல் படுமளவுக்கு நெருக்கம்.

எனக்கு என் பர்ஸைப் பற்றி கவலை. பத்தாவது முறையாகப் பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். பத்திராமாய் இருந்தது.

நீங்கள் சென்னைவாசி என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். தேனாம்பேட்டை அருகில் பிக் பாக்கெட் ஆவது தினசரி நடக்கும் ஒரு சம்பவம். அது என்னவோ தெரியவில்லை. எல்லா பிக் பாக்கெட்டுகளுக்கும் அது ஒரு சுவர்க்கம். அந்தவழியாகப் போகும் எல்லா பஸ்களிலும் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பது ஒரு காரணமோ என்னவோ! இருக்கலாம்.

டிவிஎஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை முடித்தப் பிறகு தான் பாக்கி வேலையெல்லாம். இப்படி என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்த போதுதான்
என் கண்கள் அவன் மீது விழுந்தன.

முப்பதுகளின் முடிவில் இருப்பான். நல்ல கலர். டீசெண்டாக டிரஸ் செய்திருந்தான். தோளில் ஒரு பேக். ஆபீஸ் போகிறான் போலும். பாவம் ஆள் வளமாகத் தான் இருக்கிறான். ஏன் ஒரு டூ வீலர் வைத்துக்கொள்ளவில்லை என்று யோசனை ஓடியது.

அதற்குப் பதில் சொல்வது போல அவனது அடுத்த நடவடிக்கை இருந்தது. தன் பக்கத்தில் நின்றிருந்த ஒரு நடுத்தர வயது மனிதரின் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்தான்! பாவி! பிக் பாக்கெட்டா இவன்? அதிலிருந்த பணத்தை எடுத்து விட்டு அதை யாரும் அறியாவண்ணம் கீழே நழுவ விட்டான். அப்புறம் அந்தப் பணத்தை யாருக்கோ பாஸ் செய்தான். யாருக்குச் செய்தான் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. பாஸ் செய்துவிட்டுத் திரும்பியவன் என்னைப் பார்த்து விட்டான்.

தெய்வமே! கண்ணில் ஒரு கோபத்தோடு என்னைப் பார்த்தான். பின்னர் ஏதோ முடிவு செய்தவன் போல என்னை நோக்கி வர முயன்றான். கூட்டம் அதிகம் என்பதால் அவ்வளவு சுலபமாக வர முடியவில்லை.

நெருக்கித் தள்ளிக் கொண்டு அவன் வர வர நான் ஒவ்வொரு அடியாக பின்னோக்கி நகர்ந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் போக முடியவில்லை.

அவன் என்னை நெருங்கி விட்டான். எனக்கும் அவனுக்கும் இடையில் ஒரு ஆள் மட்டும் தான்.

அங்கிருந்து என்னைப் பார்த்தான். நான் அவன் பார்வையைத் தவிர்த்தேன். “.... பொளந்துடுவேன்” என்று அவன் உதடுகள் அசைந்தது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. தலையைத் திருப்பிக் கொண்டேன். சரி நாம் அந்தப் பக்கம் பார்த்தால் இவனால் ஆபத்து இல்லை என்று போய்விடுவான் என்று நினைத்தேன். ஒரு இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் பார்த்தால் அவன் அங்கே இல்லை.

அப்போது தான் என் பின்னால் முதுகில் ஏதோ குத்துவது போல் இருந்தது. திரும்பிப் பார்க்க முயன்றபோது “ டேய்! திரும்பினா போட்டுத் தள்ளிருவேன்! கம்முனு ஒன் பர்ஸ தா. இல்லேனா இந்தக் கத்திய சொருவிடுவேன்” என்று ஒரு குரல் கேட்டது.

ஐயோ! என் பின்னாலேயே வந்துவிட்டானா? பயத்தில் முகத்தில் வேர்வை பெருக்கெடுத்தது.

“மாட்டேன்” என்றேன்.

“சாவு கிராக்கி! செத்துருவே” என்றான்.

கொஞ்சம் யோசித்தபோது ப்ளேடால் என் கையில் சிறிது போல கீறினான். ரத்தம் ஒரு கோடாக வந்தது. இனிமேல் யோசித்தால் நல்லதில்லை என்று அவனுக்கு என் பர்ஸை எடுத்துக் கொடுத்தேன்.

அதைக் கையில் வாங்கிய அவன் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, என்னைத் தள்ளி வழி ஏற்படுத்திக்கொண்டு வாசல் அருகில் சென்றான். பஸ் ஆனந்த் சிக்னலில் நின்றது. அதைப் பயன்படுத்திக்கொண்டு நிறைய பேர் இறங்கினார்கள். அவர்களோடு இவனும் இறங்கி மாயமானான்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் டிவிஎஸ் ஸ்டாப். நான் இறங்கினேன். என்னோடு இன்னும் பலரும் இறங்கினார்கள். கடைசியாக ஒரு பெண், இறங்கினாள். இறங்கியவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். என்னைக் கண்டதும் என் அருகில் வந்தாள். புன்னகைத்தாள்.

“என்ன மாமா? ஒன் டம்மி பர்ஸ லவட்டிட்டானா? இது என்ன கைல ரத்தம்?” என்று கைப் பிடித்துப் பார்த்தாள்.

“ஒண்ணும் பெரிசா இல்ல சரோ! ஆமாம், ஏதும் தேறிச்சா?”

“அவன் ஜோடி கிட்டேர்ந்து நான் அடிச்சிட்டேன். பத்து ரூவா தேறும்” என்று சிரித்தாள்.

“சரோவா கொக்கா?” என்ற என்னைப் பார்த்து செக்சியான குரலில், “இந்தப் பேச்செல்லாம் வேணாம். வாய் நமநமங்குது ஒரு பில்டரு குடு” என்று சொல்லி, சுவாதீனத்துடன் என் ஷர்ட் பாக்கெட்டில் கை விட்டாள்.  

Thursday, August 21, 2014

நீ எங்கே உன் நினைவுகள் இங்கே - அத்தியாயம் இரண்டு

வெங்கடராமன் தம்பதியினர் சீட்டுக்குப் பின்னாலிருந்த சீட்டில் மோகன் ராதாசுமார் இருபத்தைந்து வயது இருக்கும். அவர்கள் இருவரின் சீண்டல்களும் சிரிப்புகளும் சிலருக்குச் சந்தோஷத்தையும் சிலருக்கு எரிச்சலையும் தந்து கொண்டிருந்தன. குறிப்பாக வெங்கட்ராமன் தம்பதியினர் முகம் சுளித்தவாறே இருந்தனர்.

வீட்டில் காட்டிக்கொள்ள வேண்டிய காதலை வீதியில் காட்டுவார்களா?

மோகன் தற்போதைய நடிகர் ஒருவர் சாயலில் இருந்தான். நல்ல நிறம். நல்ல உயரம். அழகான முகம். அளவான மீசை. கட்டுமஸ்தான உடல். எந்தப் பெண்ணும் ஆசைப்படும் அளவுக்கு ஆணழகன். ராதாவும் ஆசைப்பட்டாள். என்ன ஒரே ஒரு சங்கடம் – மோகன் அவளது மைத்துனன்.

அதிர்ச்சியில் முகம் சுளிப்பவர்கள் அடுத்த அத்தியாயத்துக்குச் செல்லலாம். எந்தப் பெண்ணும் ஆசைப்படும் அளவுக்கு இருக்கும் அவனிடம்  வீட்டிலேயே இருக்கும் அவள் மயங்கியது தவறாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.

அவளும் ஒன்றும் அழகில் குறைந்தவள் இல்லை. உயரத்திலும் நிறத்திலும் முக லாவண்யத்திலும் அவனுக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை. கூடவே மதர்த்த இளமை.

இவ்வளவும் தனது சொத்து என்று அவள் கணவன் சங்கரன் நினைத்திருந்தான். ராதாவை நம்பினான். ஆனால் நடந்தது விபரீதம்.

இத்தனைக்கும் அவர்கள் இருவரும் வேண்டும் என்று எதுவும் திட்டமிட்டுச் செய்யவில்லை. அண்ணன் ரூமில் இருந்த தன் மொபைல் சார்ஜரை எடுக்க வந்த மோகன், திடீரென்று அங்கிருந்த இணைக்கப்பட்ட குளியறையில் இருந்து ஒரு டர்க்கி டவல் மாத்திரம் சுற்றிக் கொண்டு வெளியே வந்த ராதாவைப் பார்த்துவிட்டான்.

அதற்கப்புறம் நடந்தவற்றை எழுதினால் இன்று இணையத்தில் இருக்கும் அந்த மாதிரி தளங்களில் வரும் கதைகள் போன்று இருக்கும். வேண்டாம்.

இந்தத் தொடர்பை யாருக்கும் தெரியாமல் அவர்கள் சில காலம் தொடர்ந்தார்கள். இருந்தாலும் காதலும் காமமும் மறைக்க மறைக்க மலரும் என்னும் கூற்றுப்படி சங்கரனுக்கு மெதுவாகப் புரிந்தது.

பொறுமையாய் காத்திருந்து கவனிக்கத் தொடங்கினான்.

ஒரு விஷயம் தெரியுமா? ரொம்ப அற்புதமான விஷயம். நாம் எல்லாரும் பெரும்பாலும் நம் வாழ்க்கையை ஒரு நம்பிக்கையின் பேரில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இயற்கையில் ஆரம்பித்து பலவற்றைச் சரியாக கவனிப்பது இல்லை.  கவனித்தோமானால் ஒன்று புரிய வரும். நம்மைச் சுற்றி பல ஆச்சர்யங்கள் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலே இந்த முறை தவறிய காதல்களும் ஒன்று.

அந்தக் கோடி வீட்டில் வேலைக்காரி, வீட்டம்மா ஆபீஸ் சென்ற பிறகே வந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்துதான் திரும்பச் செல்வதை சாதாரணம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவள் திரும்பச் செல்லும்போது அவள் முகத்தைக் கவனித்தீர்களானால் அதிலே ஓடும் சுகிர்த பாவத்தையும் கவனிப்பீர்கள்.

தவறுகள் நடப்பதற்கு இன்ன இடங்கள் என்று நாம் வகுத்து வைத்திருப்பதாக நினைக்கிறோம். தவறுகள் எங்கும் நடக்கின்றன. சாத்திய கதவுகளுக்குப் பின்னால் மிகச் சில சமயம் மாத்திரமே பிரார்த்தனைகள் நடக்கின்றன.

எனிவே, நம்ம கதைக்கு வருவோம். பொறுமையாய் கவனிக்கத் தொடங்கிய சங்கரனுக்கு, அடுத்த நாளில் இருந்தே சாட்சிகள் கிடைக்க ஆரம்பித்தன. ராதாவின் அர்த்தமுள்ள புன்னகைகளும், தம்பியின் அசட்டு நடவடிக்கைகளும் அவன் கோவத்தை மெல்ல மெல்ல நெய்யூற்றி வளர்த்தன.

வேண்டுமென்றே காரம்போர்ட் விளையாடக் கூப்பிடுவான். மேசைக்கடியில் அவர்கள் கால்கள் உரசுகின்றனவா என்று பார்ப்பான். காமத்தால் கண் மறைக்கப்பட்ட அவர்கள் இருவரின் கால்களும் உரசித் தான் கொள்ளும்.

சங்கரனுக்கு என்ன செய்வதென்று தெரியாத கோவம். யாரிடம் சொல்வான்?

அவனது குழப்பங்களுக்கு ஒரு விடை கிடைத்தது. சுந்தரேசன் வடிவில். மூன்று மாதங்களுக்கு முன்னாள் அவன் கோடைக்கானல் சென்றிருந்தபோது.

முதலில் சந்தேகப்பட்டான். பின்னர் தயங்கினான். அப்புறம் பயந்தான். இறுதியில் துணிந்தான்.

இந்த ட்ரிப் கூட அவன் திட்டமிட்டுப் போட்டதுதான். உண்மையில் சுந்தரேசன் போட்ட ட்ரிப் இது.

தான் வருவதாகச் சொல்லி இறுதியில் கான்சல் செய்து, இரண்டு நாள் முன்னதாக மும்பை சென்று விட்டான். தம்பியிடம் ‘அண்ணியைக் கூட்டிகிட்டு கோடை வந்திரு. நான் மும்பையிலிருந்து வந்து ஜாயின் பண்ணிக்கறேன்’ என்று சொல்லி விட்டான்.

திடீரென்று கிடைத்த பரிசு மாதிரி அவர்கள் இருவரும் சந்தோஷித்தார்கள்.

பாவம் விட்டுவிடுவோம். கொஞ்ச நேர சந்தோஷம் தானே?

அடுத்த இரண்டு சீட்டுகளில் இருந்த நால்வரைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

சந்தானம், கோபால், ராஜன், டேவிட்.

நண்பர்கள். பார்ட்னர்கள். பார்ட்னர் என்றவுடன் ஏதோ பெரிய பிசினஸ் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். பார்ட்னர்ஸ் இன் க்ரைம்.

கடத்தல் அவர்களது தொழில். சுலபமாக பணம் கிடைக்கிறது இல்லையா?  பணத்தாசை பிடித்த அவர்களைப் போன்ற மனிதர்களுக்கு இதைவிட என்ன வேண்டும்?

போலீசிடம் சிக்காமல் இதுவரையில் பிசினஸ் செய்து விட்டார்கள். பிசினஸ் பிசினஸ் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேனே, என்ன பிசினஸ் என்றும் சொல்லி விடுகிறேன்.


அழகிய இளம் பெண்களைக் கடத்தும் பிசினஸ் தான். ...... தொடரும் 

Tuesday, August 19, 2014

கொல்வதெல்லாம் உண்மை - சிறுகதை

கொல்வதெல்லாம் உண்மை - சிறுகதை 

ராஜன் ரவியைக் கத்தியால் குத்தப் போகும் தருணத்தில் சுஜாவின் கனவு கலைந்தது.

‘அப்பப்பா! என்ன கோரம்! என்னதான் இருந்தாலும் உடன் பிறந்த தம்பியை யாராவது இப்படிக் கருணையில்லாமல் கொல்வார்களா? அப்படி என்னதான் நடந்ததோ?’ என்று வியர்வையில் குளித்திருந்த அவள் சிந்தனை ஓடியது.

கனவு சற்று விவரமாகத்தான் கண்டிருந்தாள். என்றாலும் சகோதரர்களுக்குள் என்ன பிரச்சனை என்று அவள் கனவில் வரவில்லை. அப்படியே வந்திருந்தாலும் இப்போது அவளுக்கு நினைவில்லை.

‘என்னையா ஏமாற்றப் பார்த்தாய்?’ என்று வெறித்தனமாகச் சொல்லிக்கொண்டே ராஜன் கையில் கத்தியுடன் நெருங்கியது மட்டும் புகைப்படம் போல அவள் நினைவில் பதிந்து விட்டது.

ராஜனும் ரவியும் அவள் சிநேகிதி ரமாவுடைய கணவனும் மைத்துனனும். ரவி இளையவன். அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

நல்ல குடும்பம். சகோதரர்கள் இருவரும் நல்ல வேலையில் இருந்தார்கள். சொந்த வீடு. அடையாறில். அந்தக் காலத்திலேயே அவர்கள் அப்பா சுலப தவணையில் வாங்கிக் கட்டிய வீடு. இன்றைக்கு பல கோடி பெறும். ஆனால் ராஜன் வேலை மகேந்திரா சிட்டியில் இருந்ததால் இருவரும் தாம்பரம் வாசம். ராஜன் மனைவி ரமாவும் டவுனில் வேலையாய் இருந்தாள். மின்சார வண்டியில் போய் வருவாள். அப்படித் தான் சுஜாவைப் பழக்கம்.

கனவு கலைந்ததும் எழுந்து போய் முகம் கழுவி, வாய் கொப்பளித்து, சிறிது குளிர்ந்த நீர் அருந்தினாள். மீண்டும் தூங்க முயற்சி செய்தாள். வீண் முயற்சி. தூக்கம் வரவில்லை. மணியைப் பார்த்தாள். மணி காலை நாலு! ‘ஐயோ! அதிகாலை கனவு பலிக்குமே!’ என்று ஒரு கணம் அவள் உடல் சிலிர்த்தது.

பின்னர் சிறிது நேரம் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். அப்புறம் எழுந்து சென்று தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். என்னதான் வேலையைக் கைகள் செய்தாலும், மனம் கனவையே சுற்றிச் சுற்றி வந்தது. ராமாவிடம் எப்படியாவது சொல்லி விட வேண்டும். தப்பாக எடுத்துக் கொள்வாள். இருந்தாலும் சிநேகிதத்தின் அழகு, எச்சரிக்கை செய்வது.

சுஜாவுக்கு இந்த மாதிரி விஷயங்களில் நம்பிக்கை அதிகம். எங்காவது நாய் ஊளையிட்டால், மறுநாள் அக்கம் பக்கத்தில் எங்கும் சாவு நேர்ந்திருக்கிறதா என்று கனகாரியமாக விசாரிப்பாள். குடுகுடுப்பைக்காரன் வந்தால், உடனே எழுந்து வந்து அவன் சொல்வதை எல்லாம் கவனமாகக் கேட்பாள். அவன் எதிர்பார்த்ததுக்கும் மேலேயே பணமும் உணவும் கொடுத்து அனுப்புவாள். சகுனம் பார்ப்பது, ஜோசியம், ஜாதகம், ராசிபலன்... ஒன்று விடமாட்டாள்.

அப்படிபட்டவளுக்கு இந்தமாதிரி கனவு வந்தால் என்ன விளைவு என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்!

அன்றைக்கு என்று நேரம் நகரவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த மாதிரி இருந்தது. ஒரு வழியாக மணி எட்டு அடிக்க, சுஜா தன் ஆக்டிவாவை எடுத்துக்கொண்டு ரயிலடியை நோக்கி விரைந்தாள்.

நினைத்த மாதிரியே தாம்பரம் ஸ்டேஷனில் ரமாவைப் பார்த்துவிட்டாள். விரைவு வண்டியும் வந்தது. ‘இதுல வேண்டாமடி ரமா! வேற வண்டில போலாம். உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இதுல உட்கார இடம் கிடைக்காது’ என்று சொன்னாள்.

சரியென்று ரமாவும் தலையசைக்க, அடுத்து தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சாதாரண வண்டியில் இருவரும் அமர்ந்தார்கள்.

‘சொல்லுடி, என்ன விஷயம்? ரொம்ப டல்லா இருக்கியே? உடம்பு சரியில்லையா?’ என்ற ரமாவிடம் சுஜா ஒரு குழந்தையைப் போல எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட்டாள்.

எல்லாவற்றையும் ஒருவித பிரமிப்புடன் ரமா கேட்ட ரமாவின் முகம் மாறியது.

“ ஏய்! நீ என் பிரெண்ட். அதனால விட்டுர்றேன். இதே வேற யாராவது என் புருஷனப் பத்தி இப்படிச் சொல்லிருந்தா நடக்கற கதையே வேற!”

“ நானும் பிரெண்டுங்கற முறைல தான் இதெல்லாம் சொன்னேன். உங்க குடும்பத்துல ஏதும் ப்ராப்ளம் க்ரீயேட் பண்ணனும்ங்கற எண்ணமெல்லாம் இல்ல. சரி, இத்தோட விட்ரு. ஏதோ சொல்லணும்ன்னு தோணிச்சு. சொல்லிட்டேன்!” சுஜா கோவத்துடன் எழுந்து வேறு இடத்தில் சென்று அமர்ந்தாள்.

ஆறு வருஷ நட்பு! மனசு கேக்குமா? ரமா எழுந்து வந்து சுஜா பக்கத்தில் உட்கார்ந்தாள். “ஏய், கோவிக்காதேடி! உன்னப் பத்தித் தெரியாதா? எதுன்னாலும் உடனே டென்ஷன் ஆகிற பார்ட்டி! சரி விடு, என் மேல இருக்கற அக்கறைல தான சொன்ன. நோ ப்ராப்ளம். என் வீட்டுக்காரர் கிட்ட சொல்றேன். ஆனா பாரேன்! இதக் கேட்டு அவர் பெரிசா சிரிப்பார்”

தன் டென்ஷனைக் குறைக்க ரமா முயற்சி செய்கிறாள் என்பது சுஜவுக்குப் புரிந்தது. பிறகு இருவரும் வேறு ஏதோ விஷயங்களைப் பேசியபடியே பயணம் தொடர்ந்தார்கள்.

அதற்கு அப்புறம் சுதந்திர தினம், வீக் எண்டு என்று மூன்று நாள் லீவு வந்துவிட்டதால், சுஜாவும் மறந்தே போனாள்.

லீவு முடிந்து, திங்கள்கிழமை சுஜா திரும்பவும் ரமாவைப் பார்த்தாள். எல்லா விஷயமும் நினைவுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் இவளாகவே எதுவும் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து, ரமாவே ஆரம்பித்தாள்.

“டீ! அன்னைக்கு நீ சொன்ன விஷயத்தை என் வீட்டுக்காரர் கிட்ட சொன்னேன். நான் நெனச்ச மாதிரியே வடிவேல் ஜோக் பார்த்தா மாதிரி குலுங்கக் குலுங்கச் சிரிச்சாரு.” என்று சொல்லி ரமாவும் சிரித்தாள். சுஜாவுக்கு ஒரு பாரம் இறங்கிய மாதிரி இருந்தது. தான் கண்ட கனவு பொய்யானது பற்றி ஒரு சிறிய வருத்தமும் இருந்தது.

அதற்கப்புறம் இரண்டு பேருமே இந்த விஷயத்தை மறந்தே போனார்கள். ஒரு இரண்டு வாரம் கழித்து சுஜாவுக்கு திரும்பவும் அதே கனவு வந்தது. இந்த முறை இன்னும் சற்று விவராமாக.

ராஜன் கையில் கத்தியுடன் ‘என்னையா ஏமாற்றப் பார்த்தாய்? படவா ராஸ்கல்! சொத்துக்குப் பேயா அலையுறயேடா நாயே! என்கிட்டே கேட்டுருந்தால் நானே கொடுப்பேனே! உன்னத் தம்பியாவ வளத்தேன்? பிள்ளை போலத் தானேடா வளத்தேன்? உன் கெட்டப் பழக்கங்கள அப்பாவுக்குத் தெரியாம மறச்சு வச்சது என் தப்பு. அது அவருக்குத் தெரிஞ்சு போச்சு. ஆனா நான் சொல்லல.

உயில மாத்தினது அவர் விருப்பம். அதுக்காக அவர விஷம் வச்சுக் கொன்னுட்டியே பாவி! சொத்து வேணும்னு சொல்லியிருக்கலாமே! இப்ப என்னக் கொல்லப் பாக்குறியா? உன்ன என்ன பண்ணுறேன் பாரு!’ என்றபடி ரவியை நோக்கி முன்னேறினான். ரவியின் கையில் ஒரு பத்திரம். அவன் காலருகில் அந்தக் காலக் கள்ளிப்பெட்டி.. கனவு கலைந்தது.

இந்தத் தடவை சுஜா நிஜமாகவே பயந்து விட்டாள். தான் கனவில் கண்டதுமாதிரி நிச்சயம் நடக்கப் போவதாக அவளுக்குத் தோன்றிவிட்டது. ஆனால் அவளை உறுத்தியது அந்தக் கள்ளிப்பெட்டி. எங்கேயோ பார்த்தது மாதிரி தோன்றிய அந்தப் பெட்டிக்குள் இன்னும் பல ரகசியங்கள் இருப்பதாகத் தோன்றியது.

அன்று காலை ஸ்டேஷனில் ரமா இல்லை. அவள் மொபைல் அணைக்கப்பட்டு இருந்தது. ஆபீஸ் சென்று அவள் ஆபீஸ் நம்பருக்குப் போன் செய்து கேட்டாள். ரமா ஒரு பத்து நாள் லீவு என்றார்கள். சரி, அவள் வந்தபிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள்.

இரண்டு வாரம் கழித்து ரமா வந்தாள். அவள் முகம் வாடியிருந்தது. மெதுவாக என்ன விஷயம் என்று கேட்ட சுஜா அதிர்ந்தாள். ரமாவின் மாமனார் இறந்துவிட்டாராம்!

ஏற்கனவே சோகத்தில் இருந்தவளிடம் இந்த இரண்டாம் கனவைப் பற்றிச் சொல்லவா வேண்டாமா என்று சுஜா மனதில் போராட்டம். இறுதியில் சொல்லி விடுவது என்று முடிவு செய்து சொல்லியும் விட்டாள்.

ரமா ஆச்சர்யத்துடன் இவளைப் பார்த்தாள். “ என் மாமா செத்தது விஷத்துனால தான். ஆனால் பாம்பு கடிச்சு. மேலும், நீ நினைக்கற மாதரி என் மச்சினன் ஊரிலேயே இல்ல. ட்ரைனிங்ன்னு ஒரு நாலு வாரமா பாம்பேல இருக்கான். நாங்க சொல்லித்தான் ஊருக்கே வந்தான்’ என்றாள்.

சுஜாவுக்கு மீண்டும் ஏமாற்றம். இனிமேல் இந்த மாதிரி வரும் கனவுகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.

அன்றைய தினம் எந்த வேலையும் ஓடவில்லை. மதியத்துக்கு மேல் உடம்பு சுடுவது போலத் தோன்றியது. தலை வலித்தது. அரைநாள் லீவு சொல்லிவிட்டு வீடு திரும்பினாள்.

மாடம்பாக்கத்தில் தனி வீடு. அந்த மதியத்தில் அவள் தெருவே அமைதியில் உறைந்திருந்தது. வீட்டை நெருங்கியவள் திறந்திருந்த கேட்டைப் பார்த்து வியந்தாள். வாசலில் இருந்த செருப்புகள் அவள் கணவன் வந்து விட்டதை அறிவித்தன. அந்த இன்னொரு ஜோடி யாருடையது? என்ன இந்த நேரத்தில் யாருடன் வீட்டில் இருக்கிறார்?

குழப்பத்துடன் காலிங் பெல்லை அடிக்க நினைத்தவள் கண்கள் கதவு திறந்து இருந்ததைப் பார்த்தன. மெதுவாக உள்ளே நுழைந்தவள் பெட்ரூமிலிருந்து வந்த குரல்களைக் கேட்டு அங்கே சென்றாள். அந்த ரூமுக்குள் அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது.  அவள் கணவன் (ரங்க)ராஜன் கையில் ஒரு கத்தியை வைத்துக் கொண்டு தன் தம்பி ரவி(ச்சந்திரன்)யிடம்  “‘என்னையா ஏமாற்றப் பார்த்தாய்? படவா ராஸ்கல்! சொத்துக்குப் பேயா அலையுறயேடா நாயே! என்கிட்டே கேட்டுருந்தால் நானே கொடுப்பேனே! உன்னத் தம்பியாவ வளத்தேன்? பிள்ளை போலத் தானேடா வளத்தேன்?” என்று கோவத்தில் கத்திக் கொண்டிருந்தான்.


அவள் மைத்துனன் கையில் ஒரு பத்திரம். அவர்கள் காலடியில் ஒரு கள்ளிப்பெட்டி. சுஜாவுக்குக் கனவில் வந்தக் கள்ளிப்பெட்டியை எங்கே பார்த்தோம் என்பது நினைவுக்கு வந்துவிட்டது.

Wednesday, August 13, 2014

ஞானம்


அந்தப் பழைய எட்டுக்கட்டு வீட்டின் முன் கட்டில் பகவத் கீதை சொற்பொழிவு ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது. சற்று தலையைக் குனிந்து இடித்துக் கொள்ளாமல் உள்ளே சென்றால் பெரிய கூடம். அதன்  நடுவில் தொங்கிக்கொண்டிருந்த ஊஞ்சலில் தாராளமாக இரண்டு பேர் படுத்துக்கொள்ளலாம்.  இருந்தாலும் அது காலியாகத் தான் காற்றில் லேசாக அசைந்து கொண்டிருந்தது.

லீவுக்காக வந்திருந்த சங்கீதாவின் கண்களில் அந்த ஊஞ்சல் படவில்லை. மாறாக கூடத்தின் ஒரு ஓரத்தில் ஒரு பில் பாயில் படுத்திருந்த ஞானாம்பாள் தான் பட்டாள். பெரிய பெயராக இருப்பதால் இனிமேல் ஞானம் என்று சுருக்கி விடலாம்.

ஞானம் தான் இந்தக் கதையின் கதாநாயகி. 85 வயது. முகத்தின் சுருக்கங்களை அனுபவ ரேகைகள் என்று கொண்டால், அவளை விட அனுபவஸ்தர்களைக் காண்பதரிது.

ஞானம் சங்கீதாவின் தாத்தாவின் பெரியம்மா. கொள்ளுப் பாட்டி என்று சொல்லலாம். ஆனால் அவள் ஞானத்தைப் பாட்டி என்று தான் கூப்பிடுவாள்.

பாட்டி! என்ன இங்க படுத்துண்டு இருக்க? ஊஞ்சல்ல படுத்துக்க வேண்டியதுதானே?

குரல் வந்த திசையைக் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தாள் ஞானம். பேரனின் பெண். உங்கப்பனும் என்னப் பாட்டீங்கறான் நீயும் பாட்டீங்கற. வேடிக்கை தான் போ என்று அடிக்கடிச் சொல்லிச் சிரிப்பாள்.

இல்லேடி கொழந்தே! இந்தப் பில்லு பாயுல படுக்கற சொகம் அந்த ஊஞ்சப்பலகால வருமா?

பெளராணிகர்

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேர்ஜுந
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே

(ஆனால் அர்ஜுனா! எவனொருவன் மனதினால் புலன்களை வசப்படுத்திப் பற்றில்லாதவனாக எல்லாப் புலன்களாலும் கர்மயோகத்தைக் கடைப்பிடிக்கிறானோ அவனே சிறந்தவன்.)

என்றார் கணீரென்று.

சங்கீதாவைத் தீர்க்கமாக உற்றுப் பார்த்தாள் ஞானம். இவள் வயது தான் இருக்கும். இல்லை இவளைவிட சின்னவள். பதினாலு பதினைந்து வயதிருக்குமா அப்போது? திடீரென்று கோடியாத்து சாஸ்த்ரிகள் பிள்ளை நாராயணனுக்கும் இவளுக்கும் கல்யாணம் என்றார்கள். சொப்பு வைத்து விளையாடும் வயதில் ஒரு நல்ல நாளில் இவள் கழுத்தில் நாராயணன் தாலி கட்டினனான். டேய்! கழுத்துப் பக்கம் என்னடா பண்ற? விடுறா! என்று இவள் சொல்ல, ஏய்! ஞானம்! கழுத, இனிமேல் இவன வாடா போடான்னு சொல்லக் கூடாது. வாங்கோ போங்கோன்னு தான் சொல்லணும். பேரு சொல்லிக் கூப்பிடக் கூடாது. ஏன்னா! அப்படின்னு தான் கூப்பிடனும். இனிமேல் இவன் உன்னோட ஆம்படையான். தெரிஞ்சுக்கோ என்று அவள் அம்மா அவள் காதுகளில் கிசுகிசுத்தபோது ஞானம் மிரண்டு போனாள். இவனை எதுக்கு நான் மரியாதையோட கூப்பிடணம்? என்று அவள் பிஞ்சு மனதில் எண்ண அலைகள்.

அப்புறம் அவள் வயதுக்கு வந்து இரண்டு மூன்று வருஷங்களுக்குப் பின்னால் அவளை நாராயணனின் வீட்டில் கொண்டு போய் விட்டார்கள். அப்புறம் குடும்பம் கடமைகள் என்று வருடங்கள் உருண்டோடியது. நாராயணனிடமும் அவன் பெற்றோர்களிடமும் அவன் சகோதரர்களிடமும் அவள் அன்பாகத் தான் நடந்து கொண்டாள். தன் அப்பா அம்மாவிடம் எவ்வளவு ஸ்ரத்தையோடு நடந்து கொண்டாளோ அதைவிட ஒரு பங்கு கூடுதலாகவே இவர்களிடம் பக்தி ச்ரத்தையோடு இருந்தாள். அவர்களும் இவளைத் தங்கள் மகளாகவே பாவித்தார்கள்.

முன்கட்டிலிருந்து ரேடியோ

 தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:

(ஆகவே பற்றின்றி எப்பொழும் ஆற்ற வேண்டிய கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிரு. ஏனெனில் பற்றின்றிக் கர்மங்களைச் செய்கின்ற மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.)

என்றது.

இப்படி சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று ஒரு புயல் வீசியது. இன்னதென்று அறியாத ஒரு வியாதியில் விழுந்த நாராயணன் மூன்று நாட்களாகியும் ஜுரம் குறையாமல் இறந்து போனான். அந்தத் துக்கத்தைத் தாள முடியாமல் அவள் மாமனாரும் மாமியாரும் போய்ச் சேர்ந்தார்கள்.

ஞானத்துக்கு துக்கம் அனுஷ்டிக்கக் கூட சாவகாசம் இல்லை. நாராயணனின் தம்பிகள் இருவரும் மிகவும் சிறு வயதினர். அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஞானத்தின் தலையில் விழுந்தது.

ஞானத்துக்கு என்ன தெரியும்? வீட்டு வேலைகள் செய்யத் தெரியும். நன்றாகச் சமைக்கத் தெரியும். வேறென்ன தெரியும்?

ஆனால் அவளுக்குத் தெரிந்த சமையலே அவளையும் அவளைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றியது .

சில தெரிந்தவர்களின் உதவியோடு ஞானம் சிறிய அளவில் ஊறுகாய், வடகம், அப்பளம் போன்ற பொருட்களைத் தயாரித்து அக்கம் பாக்கம் விற்க ஆரம்பித்தாள். அவற்றைத் தயாரிப்பதில் அவள் காட்டிய கவனமும் தரமும் அந்த சிறிய வியாபாரத்தைப் பெரிய அளவில் மாற்றியது.

அவள் மைத்துனர்கள் சில ஆண்டுகளில் பெரியவர்கள் ஆனார்கள். மன்னிக்குத் துணையாக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். கடவுள் அருளால் அது நன்றாக வளர்ந்தது. வீட்டில் இருந்து செய்து கொண்டிருந்த வியாபாரம் சிறிய கடை வைக்கும் அளவுக்கு வளர்ந்தது. அக்கம் பக்கம் என்று விற்றுக்கொண்டிருந்தவர்கள்  அயலூருக்குச் சென்று விற்றார்கள்.

மெது மெதுவாக பல கடைகளில் இருந்து ஹோட்டல்களில் இருந்து ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. பணமும் வந்தது. மைத்துனர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் மனைவிமாரும் குடும்ப வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். செல்வம் சேர்ந்தது. ஆளுக்கு ஒரு வீடு வாங்கிக் கொண்டார்கள். ஞானம் தான் அந்த பழைய வீட்டை விட்டு வர மறுத்து விட்டாள்.

முன் கட்டு ரேடியோ

வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா:
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:

(ஆசை, பயம், சினம் இவற்றை விட்டு என்னிடம் சரணடைந்த பலர், ஞானதவத்தால் தூய்மையடைந்து என்னிடம் நல்ல முறையில் அன்பு கொண்டுள்ளனர். என்னிடம் அவர்கள் சரணடைவதற்கேற்ப நான் பலன் அளிக்கிறேன். எவ்வழியிலும் அவர்கள் என்னையே பின்பற்றுகின்றனர்.)

என்று சொல்லிக் கொண்டிருந்தது.

இதோ நாளைக்கு ஞானத்துக்குப் பிறந்த நாள். அதை வெகு விமரிசையாகக் கொண்டாடப் போகிறார்களாம். ஞானமோ  தன் பாட்டுக்கு வளைய வந்து கொண்டிருந்தாள். அவள் மனம் எதிலும் ஈடுபடவில்லை.

விடிந்தால் கொண்டாட்டம். அதற்காகத் தான் ஊரிலிருந்து எல்லாரும் வந்திருக்கிறார்கள். ஞானத்துக்கு திடீரென்று நாராயணன் ஞாபகம் வந்தான்.

கல்யாணத்தன்று செய்தது போலவே கழுத்தருகே கிச்சு கிச்சு மூட்டினான்.
டேய் விடுறா! என்ன பண்ற? என்றாள் ஞானம்.

ரேடியோ

ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி:  ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம் ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா

என்று சொல்லிக்கொண்டிருந்தது.

என்ன பாட்டி? யாருகிட்டப் பேசிண்டு இருக்க? என்று கேட்ட சங்கீதாவுக்கு பதில் கிடைக்கவில்லை.

ஞானம் படுத்திருந்த இடத்தின் மேலே சுவற்றில் கிருஷ்ண பரமாத்மா காரணம் சொல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தார்.
  

Saturday, August 9, 2014

நீ எங்கே உன் நினைவுகள் இங்கே -1


கோடைக்கானலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அந்த டூரிஸ்ட் பஸ்ஸில் மொத்தம் இருவது பேர் இருந்தனர்.

நாலு நாள் ட்ரிப்பில் செல்லும் அவர்கள் அனைவரின் சாவும் மூன்று மாதங்களுக்கு முன்னரே கோடைக்கானலில் முடிவு செய்யப்பட்டுவிட்டது
என்னும் செய்தியை அவர்கள் அறிந்திருந்தால் யாருமே பயணப்பட்டு இருக்கமாட்டார்கள்.

விதி. வெல்ல முடியாதது.

முதல் இரண்டு சீட்டில் அமர்ந்திருந்த வெங்கட்ராமன்- சுபலட்சுமி தம்பதியினருக்கு இது தான் முதல் ஹனிமூன் என்று கூட சொல்லலாம். இருவரும் அறுபதுகளின் முடிவில் இருந்தனர். குடும்பம் குழந்தைகள் என்றே தங்கள் வாழ்க்கையைக் கழித்துவிட்ட ஏராளமான இந்தியர்களில் இவர்களும் ஒரு சிறு பாகம்.

மூன்று குழந்தைகள். மூன்று ஆண்பிள்ளைகள். மூன்றும் ஆணாகப் பிறந்து விடவே இவர்களுக்குள் ஒரு மென்மையான இறுமாப்பு இருந்தது என்னமோ உண்மை. இன்னும் அது இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வார்கள். பாவம். விதியின் வசப்பட்டவர்கள்.

முதல் பிள்ளை மனைவி பிள்ளைகளோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டான். கை நிறைய சம்பளம், வீடு வாசல் என்று அங்கு வசதியோடு இருக்கும் அவனுக்கு, சென்னையில் இவர்கள் வீட்டின் இன்றைய விலையான இரண்டு கோடி பெரிசாகத் தெரியவில்லை. எப்படியும் மூன்றில் ஒரு பாகம் தான் வரும். அதுவும் தன் கையெழுத்து இல்லாமல் மற்ற இருவருக்கும் போய்ச்சேர முடியாது என்பதால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருந்தான். அவன் மனைவி வெளிநாடு தரும் எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.

நல்ல மேற்கத்திய உடைகள், எங்கு போவதானாலும் கார், க்ளப் பார் லேடீஸ் மீட் என்று தன்னை முழுமையாக westerniseபடுத்திக் கொண்டவள். அவளால் இந்திய முறைப்படி இனிமேல் வாழ முடியாது என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அவளை விட அவள் கணவனுக்கு நன்றாகத் தெரியும்.

இதைத் தன் பெற்றோர்ல்களால் ஒப்புக் கொள்ள முடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். வீணில் இந்தியா வருவதோ, இல்லை அவர்களை அங்கே அழைத்துக் கொள்வதோ பிரச்சனைகளை அதிகம் தான் படுத்தும் என்பது நன்கு அறிந்தவன்.

அதனால் இந்தியா பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. இதில் வெங்கடராமன் தம்பதியினருக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் வெளியே சொல்லிக் கொள்வதில்லை. வாரம் ஒரு முறை ஸ்கைப்பில் பிள்ளை முகத்தைப் பார்ப்பார்கள். பேரன்கள் பேசும் ஆங்கிலம் புரியாமல் முழிப்பார்கள். அவர்கள் நாட்டுப்பெண் இந்த ஸ்கைப் மீட்டிங்குக்குக் கூட வர மாட்டாள். ஒரு முறை வந்தபோது அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டின் முன்கழுத்துப் பக்கம் கொஞ்சம் இறங்கையிருந்ததைப் பார்த்த சுபலட்சுமி ஏதோ சொல்லி விட்டாள். அதிலிருந்து அவள் இதற்குக்கூட வருவதில்லை.

அவர்கள் இராண்டாவது மகன் மும்பையில் செட்டில்டு.  அவன் மனைவி ஒரு குஜராத்தி. பெரிய நகைக்கடை முதலாளியின் மகள். ஏகப்பட்ட சொத்து. பல கோடிகள் பெரும். இவன் ஆபீஸ் போய் வரவே டிரைவருடன் ஒரு கார் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதனால் அவனும் சென்னை பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை.

ஆனால் அவன் மனைவில் முதல் மருமகள் போல மோசம் இல்லை. அவளுக்குச் சென்னை வர வேண்டும் இவர்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எல்லாம் மிகவும் ஆசை. ஆனால் அவன் கணவன் சம்மதிக்க மாட்டான். அவனுக்கும் இரண்டு குழந்தைகள். இரண்டும் பெண்கள்.

மூன்றாமவன் சந்திரன் மீனா ஜோடிதான் இந்தக் கதைக்குத் தொடர்பு கொண்டவர்கள்.

சந்திரன் ஒரு டாக்டர். சிட்டியில் ஒரு ப்ரைவேட் ஆசுபத்திரியில் வேலை செய்கிறான். அவனுக்குக் கல்யாணத்துக்குக் பெண் பார்த்தபோது அவன் பெற்றோர்கள் ரொம்பவே திண்டாடிப் போய் விட்டார்கள்.

எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு மனசுக்கு மேவவில்லை. தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்றும் அவனால்  தன் பெற்றோர்களிடம் சொல்ல முடியவில்லை. அந்த நிலையில் தான் ஒரு நாள் ப்ரோக்கர் மீனாவின் போட்டோவை எடுத்து வந்தார்.
அதைப்பார்த்த மாத்திரத்திலேயே சந்திரன் காதல் வயப்பட்டான்.

மீனா பேரழகி. பார்த்த மாத்திரத்திலேயே எந்த ஆணும் அவள் மீது காமுறுவான்.

செதுக்கி வைத்த சிலை போல இருப்பாள். அழகான முகமும், அளவான கழுத்தும் நல்ல நிறமும், மதர்த்த இளமைகளும், வளைந்த இடையும் என்று இருந்த அவளைப் பார்த்து சந்திரன் உடனே ஓகே சொல்லி விட்டான்.

மீனா வீட்டுக்காரர்கள் சற்று அவகாசம் கேட்டார்கள். பணம் புரட்ட வேண்டும் என்று சொன்னார்கள். வெங்கடராமன் தான் அதெல்லாம் ஒன்றும் பெரிதாகத் தேவையில்லை. என்ன முடியுமோ அதை செய்தால் போதும் என்று கூறி கல்யாணச் செலவிலும் பாதி தான் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்.

அப்புறம் என்ன திருமணம் விரைவில் நடந்தேறியது.

ஆனால் வீட்டின் கடைசி மருமகளாக வந்த மீனாவுக்குத் தான் நன்றி என்பது சிறிதளவும் இருக்கவில்லை. தன்னை மருமகளாக ஏற்றுக்கொண்டவர்கள் மீது அவளுக்கு ஒரு காரணம் தெரியாத காழ்ப்பு உணர்ச்சி.. எப்படியாவது அவர்களை இந்த வீட்டை விட்டுத் துரத்தி அடிக்க வேண்டும். இந்த வீட்டை தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு பேராசை தீக்கனலாக அவள் நெஞ்சில் உடலில் ஏறிந்து கொண்டிருந்தது. அதை எப்படிச் செயல் படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அவளுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது மூன்று மாதம் முன்னால் அவளும் சந்திரனும் சென்ற கோடைக்கானல் பயணமும் அங்கு அவர்கள் சந்தித்த சுந்தரேசனும் தான்.

முதலில் பயந்த சந்திரன், பிறகு தங்களுக்கு எந்தவித ஆபத்தும் வராது என்று அறிந்தபின்னால் தலையை ஆட்டி விட்டான்.

யார் அந்த சுந்தரேசன்? அப்படி என்னதான் நடந்தது அந்தப் பயணத்தில்?


தொடரும்.

Thursday, August 7, 2014

ஒரு மழை நாள்


மழை விடுவது போலத் தெரியவில்லை. இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே  குளிர்காலம். மழையினால் குளிர் அதிகமாகி விட்டது.

திரும்பவும் நான் என் எதிரிலிருந்த மேஜையில் வைக்கப் பட்டிருந்த  அந்தப்  பழைய செய்தித்தாளைப் பார்த்தேன். முதல் பக்கத்தில் இருந்து என் முகம் என்னைப் பார்த்து சிரித்தது. அப்போது தான் கடைசியாக சிரித்தது. அப்புறம் சோகமோ சோகம். கோரமோ கோரம்.  எல்லாம் என் விதி.

அப்போது தான் காலிங் பெல் ஒலித்தது.

“கதவு திறந்துதான் இருக்கிறது. உள்ளே வரலாம்”

ஒரு எச்சரிக்கையுடன் கதவைத் திறந்து கொண்டு ஒரு இளம் பெண் உள்ளே வந்தாள்.

“சாரி சார்! மழை ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சு. பிக் அப் செய்ய வரேன்னு சொன்ன ஹஸ்பண்ட் வண்டில ஏதோ ப்ராப்ளம் கொஞ்ச நேரம் ஆகும்னு போன் பண்ணிட்டார். அதான்....” என்று இழுத்தாள்.

“இதிலென்ன இருக்கு? உட்காரு” என்று  மேஜைக்கு அப்புறம் இருந்த சேரைக் காட்டினேன்.

உட்கார்ந்தவளைக் கூர்ந்து பார்த்தேன். சுமார் இருவத்தைந்து வயதிருக்கும். நல்ல நிறம். நல்ல உடல் வளம். மழையில் வேறு நனைந்து இருந்தாளா, மிகவும் கவர்ச்சியாக இருந்தாள்.

“என்ன பார்க்கறீங்க?”

“இல்லை, ஒரு தனியான ஆம்பிளை இருக்கேன். உனக்கு பயமா இல்லையா?”

“எதுக்கு பயம்? நீங்க என்ன பேயா?”

மெலிதாக சிரித்தேன். “எதுக்கு சிரிக்கிறீங்க?”

“ஒண்ணுமில்லை. உன்னப் பத்தி சொல்லு. உன் வீட்டுக்காரர் வர்ற வரைல பொழுது போகும்”

“நான் ராணி. பேர்ல மட்டுமில்லை. என் வீட்டுக்காரர் என்ன ஒரு ராணி மாதிரி தான் ட்ரீட் பண்ணுவார். நான் ஒரு ஐடி கம்பனில வொர்க் பண்ணறேன். அவர் ஒரு டாக்டர். சாதாரணமா ஆபீசில் இருந்து டிராப் உண்டு. ஆனால் இன்னைக்கு ஒரு பர்த்டே அட்டென்ட் பண்ண இந்தப் பக்கம் வந்தேன். அதுனால பிக் அப் பண்ண வீட்டுக்காரர் வர்றேன்னு சொன்னார். “என்ன பாக்கறீங்க?”

“இல்ல, ரொம்ப வேகமா பேசற”

“அதிருக்கட்டும் ஒங்களப் பத்திச் சொல்லுங்க. உங்க மனைவி, குழந்தைங்க...”

“ எனக்குக் குடும்பம் என்று எதுவும் இல்லை” என்றேன் ஒரு பெருமூச்சுடன்.

“ஏன் என்ன ஆச்சு? இன்னும் கல்யாணம் ஆகலியா?”

“ அதெல்லாம் ஆச்சு. ஆனா என் மனைவி என்னை விட்டுட்டு வேற ஒருத்தனோட போயிட்டா.”

அவள் முகம் மாறியது. ஒருவித மன்னிப்புக் கேட்கும் குரலில் “ஐயாம் வெரி சாரி” என்றாள்.

“இட்ஸ் ஓகே. அவ ஓடிப்போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”

“வேற கல்யாணம் பண்ணிக்கலையா? You are still young”

“இல்லைங்க, போற போக்குல என்ன அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொன்னுட்டாங்க.”

அவள் முகம் போன போக்கு சரியில்லை. அப்புறம் என் இதழோரம் வந்த புன்னகையைப் பார்த்து “ஒ! உங்க வாழ்க்கையைக் கொன்னுட்டாங்கன்னு சொல்ல வர்றீங்க! ஆனாலும் நீங்க ஒரு சினிமா கதாசிரியர் போல ஒரு effect கொடுத்துத் தான் பேசறீங்க. கதை எழுதலாம் நீங்க”

“நான் சாகறத்துக்கு முன்னால கதை தான் எழுத்திக்கிட்டு இருந்தேன். குழந்தைங்க கதை.”

கலகலவென்று சிரித்தாள் ராணி.

“சரி, குடிக்க ஏதாவது இருக்குமா? காப்பி, டீ?”

“நான் அதெல்லாம் குடிக்கறது இல்லை. ஒன்லி ரத்தம். வேணுமா?”

“You are really a joker! hahaha.....”

“ரத்தம் குடிக்கறது ஒரு ஜோக்கா? ஆண்டவா! நல்லா மூச்ச இழுத்து விடு. ரத்த வாடை காத்துல வரும் பாரு”

“சரி போதும் நிறுத்துங்க. ரொம்ப ஹாரர் ஆகாது”

“சரி, நீ கேட்டதுனால சொன்னேன்”

“ஓகே. நீங்க ஏன் இப்படி விரக்தியாப் பேசறீங்க? நல்லா படிச்சவர் மாதிரி தெரியுது. வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகாத, இப்படி இருட்டிப் புடுங்கித் திங்கற வீட்டுல ஏன் யாருக்காக உக்காந்துக்கிட்டு இருக்கீங்க?” என்றாள் கரிசனத்துடன்.

“நகைகள். இங்க தான் இருக்கு. நகைகள் வேணும்னா இங்க வந்து தான் ஆகணும். அவ வருவா. அவ வர்றதுக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்கேன்.”

அவள் ஏதோ சொல்ல வாய் எடுப்பதற்கு முன் அவள் செல்போன் ஒலித்தது.

எடுத்து “ஹலோ! வந்துட்டீங்களா? எங்க, தெருமுனைல தான் வெயிட் பண்றீங்களா? சரி , மழை நின்ன மாதிரி இருக்கு. நானே அங்க வந்திர்றேன்” என்று சொல்லி என்னிடம்  “Thanks for the company. Bye. Catch up with you some other time ” என்று எழுந்தாள்.

“எனக்கு பதினைந்து நாளுக்கு ஒரு தடவதான் ரத்த தாகம் எடுக்கும். இன்னைக்கு அது தீர்ந்துடுச்சி. அடுத்த முறை அந்த மாதிரி டைம்ல வந்தா எனக்கு உபயோகமா இருக்கும்” என்றேன்.

அவளுக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. “நிச்சயம் வர்றேன். அடுத்த பதினைந்தாம் தேதி definitely I’ll be here with my husband”

நான் பதிலுக்குப் புன்னகைத்தேன். “பிறகு பார்க்கலாம்” என்றேன். ராணி கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றாள். அவள் சொன்ன மாதிரி மழை நின்றிருந்தது. ஆனால் இத்தனை நேரம் அடங்கியிருந்த தாகம் திடீரென்று தலை தூக்கியது.

மீண்டும் ஒரு முறை அந்தச் செய்தித்தாளைப் பார்த்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய தினசரி. 

“கள்ளக் காதலனுடன் சேர்ந்து கட்டிய கணவனைக் கொலை செய்துவிட்டு இளம் பெண் தலைமறைவு” என்று பெரிய எழுத்துக்களில் செய்தி போட்டிருந்தது. அதன் கீழே “கொலையுண்ட கணவர் இவர்தான்” என்று போட்டு என் போட்டோ போட்டிருந்தது.

ஒரு பெருமூச்சுடன் எழுந்தேன். தரையில் கால் பாவாமல் மிதந்தபடி பின்னால் இருந்த ரூமுக்குச் சென்றேன்.

அங்கேதான் நான் ரத்தம் குடிப்பதற்காக கொன்று வைத்திருந்த பெண் சவமாகக் கிடந்தாள்.