Friday, December 19, 2025

விழுதுகள் துறந்த விருட்சம்

 விழுதுகள் துறந்த விருட்சம் 



தஞ்சாவூர், மேலவீதி தாண்டிச் செல்லும் அந்தப் பழைய காரை வீட்டின் கூடத்தில், ஊஞ்சல் சங்கிலி மட்டும் லேசாக ஆடிக்கொண்டிருந்தது. அதில் யாரும் அமரவில்லை. ஆனால், மீனாட்சிக்கு மட்டும் அதில் பத்து வயது ரகு அமர்ந்து ஆடிக்கொண்டிருப்பது போல ஒரு பிரம்மை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.


வாசலில் காய்கறி விற்கும் பாட்டி, "என்னம்மா... இன்னைக்கும் சமையல் பண்ணலையா?" என்று கேட்டுவிட்டுப் போனாள்.


மீனாட்சி பதில் சொல்லவில்லை. சமையலறையில் உலையில் அரிசியைப் போடும்போது, "அம்மா... எனக்கு சோறு குழைஞ்சு போனா பிடிக்காதும்மா... விரை விரையா இருக்கணும்" என்று ரகு சொல்லும் குரல் காதுக்குள் ஒலிக்கும். பத்து   வருடங்களாகிவிட்டன. அடுப்பில் இருக்கும் நெருப்பு கூட அணைந்துவிடும், ஆனால் பெற்ற வயிற்றுக்குள் பற்றிக்கொண்ட நெருப்பு மட்டும் அணையவே இல்லை.


"மீனாட்சி... கிளம்புறியா? பஸ்ஸுக்கு நேரமாச்சு," என்று கணவர் சோமசுந்தரம் குரல் கொடுத்தார்.


அவர் குரலில் ஒரு சோர்வு. பத்து  வருடங்களாக மகனைத் தேடி அலைந்த அலைச்சலில் அவர் கால்கள் தேய்ந்து போயிருந்தன. போலீஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷன், காசி, ராமேஸ்வரம் எனப் பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, இறுதியில் "அவன் விதி அவ்வளவுதான்" என்று ஒரு விரக்தியான அமைதிக்கு வந்துவிட்டார். ஆனால், மீனாட்சி இன்னும் அந்த நம்பிக்கைக் கயிற்றை அறுத்துவிடவில்லை.


"இதோ வரேங்க..." என்று புடவைத் தலைப்பை சரிசெய்து கொண்டு கிளம்பினாள்.


இன்று அவர்கள் செல்வது திருச்சிக்கு. காவேரி நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ஒரு ஆசிரமத்திற்கு. அங்கே புதிதாக ஒரு சுவாமிஜி பொறுப்பேற்கிறார் என்று நாளிதழ்களில் செய்தி வந்திருந்தது. அங்கு போனாலாவது மனநிம்மதி கிடைக்குமா என்ற தேடலில் தான் இந்த பயணம்.


"அந்தப் புது சுவாமிஜிக்கு வயசு ரொம்ப கம்மியாம். ஆனா கண்ணுல அப்படி ஒரு தீட்சண்யம் இருக்காம். வடக்கே இமயமலைக் குகையில  தவம் இருந்தவராம்," என்று பஸ்ஸில் பக்கத்து சீட்டுப் பெண்மணி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.


மீனாட்சி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தாள். வயல்வெளிகள் பின்னோக்கி ஓடின.


ரகு போனது ஒரு மழைக்கால இரவு. இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு, கேம்பஸ் இன்டர்வியூவுக்குப் போவான் என்று நினைத்திருந்தார்கள். அவன் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. காலையில் சென்று பார்த்தபோது, மேஜையில் ஒரு கடிதம் மட்டும் இருந்தது.


"அம்மா, அப்பா... என்னைத் தேடாதீங்க. எனக்கு இந்த வாழ்க்கை ஒரு பெரிய சிறைச்சாலை மாதிரி இருக்கு. நான் விடுதலையைத் தேடிப் போறேன். நான் உயிரோட இருப்பேன், ஆனா உங்களோட ரகுவா இருக்க மாட்டேன்."


அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு மீனாட்சி கதறிய கதறல், அந்தத் தெருவையே உலுக்கியது. அந்த நினைவுகள் வரும்போதெல்லாம் இப்போதும் அவள் நெஞ்சு விம்மும்.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி, ஆசிரமத்தை நோக்கி நடந்தார்கள். காவேரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆசிரமத்தின் நுழைவு வாயிலில் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. எங்கும் சந்தனமும், மலர்களும் கலந்த ஒரு தெய்வீக நறுமணம்.


ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். அந்தப் பெரும் கூட்டத்தில் மீனாட்சியும் சோமசுந்தரமும் ஒரு ஓரமாக, தூணின் மறைவில் நின்றார்கள்.


மேள தாளங்கள் முழங்கின. "சுவாமிஜி வருகிறார்..." என்ற அறிவிப்பு வந்ததும், அந்தப் பரந்த அரங்கம் ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு நிசப்தமானது.


தூரத்திலிருந்து காவி உடை அணிந்த ஒரு உருவம் மேடையை நோக்கி நடந்து வந்தது.


மீனாட்சி எம்பிப் பார்த்தாள். அந்த நடை... நிதானமான, ஆனால் உறுதியான அந்த நடை... அவளுக்குப் பரிச்சயமாக இருந்தது.


சுவாமிஜி மேடையில் ஏறி, பீடத்தில் அமர்ந்தார். அவர் முகத்தில் தாடி வளர்ந்திருந்தது. நெற்றியில் விபூதி பட்டை. கழுத்தில் ருத்ராட்ச மாலைகள். ஆனால், அந்த நீண்ட மூக்கு, சற்றே குவிந்த அந்த நெற்றி, இடது கன்னத்தில் மங்கலாகத் தெரியும் அந்தத் தழும்பு (சிறுவயதில் சைக்கிளில் இருந்து விழுந்து ஏற்பட்டது)...


மீனாட்சியின் கால்கள் தளர்ந்தன. அவளை அறியாமலே அவள் கைகள் நடுங்கின.


"ஏங்க..." என்று கணவரின் தோளைப் பிடித்து உலுக்கினாள். "அங்க பாருங்க..."


சோமசுந்தரம் கண்களைச் சுருக்கிப் பார்த்தார். அடுத்த கணம், அவர் கையிலிருந்த துண்டு கீழே விழுந்தது. "ரகு..." என்ற வார்த்தை அவர் தொண்டையில் சிக்கிக்கொண்டது.


பத்து வருடங்களாக எந்த முகத்தைத் தேடி ஊரெல்லாம் அலைந்தார்களோ, அந்த முகம் இப்போது உயர்ந்த பீடத்தில், உலகமே வணங்கும் இடத்தில்.


மீனாட்சிக்கு மூச்சு முட்டியது. இது கனவா நினைவா என்று தெரியவில்லை. கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் ஓடத் துடித்தாள். "டேய் ரகு... அம்மா வந்திருக்கேன்டா..." என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால், அந்தச் சூழலின் புனிதமும், சுற்றியிருந்தவர்களின் பக்தியும் அவளைக் கட்டிப் போட்டன.


அவள் கண்கள் மட்டும் இமைக்க மறந்தன. கண்ணீர் கன்னங்களில் வழிந்து கழுத்தை நனைத்தது. அது ஆனந்தக் கண்ணீரா, அல்லது இவ்வளவு நாள் பிரிந்திருந்த துயரத்தின் வெளிப்பாடா என்று அவளுக்கே தெரியவில்லை.


மேடையில் அமர்ந்திருந்த சுவாமிஜி, பக்தர்களை ஆசீர்வதிக்கும் பாவனையில் கையை உயர்த்தினார். அவர் பார்வை கூட்டத்தின் மீது மெல்லப் படர்ந்தது. திடீரென, கூட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அந்தப் பார்வை நிலைகுத்தியது.


அங்கே... நரைத்த முடியுடன், கண்களில் ஜீவன் வற்றிய நிலையில், ஆனால் பாசம் தேங்கிய பார்வையோடு... அம்மா!


சுவாமிஜியின் கை காற்றில் அப்படியே நின்றது.


இமயமலையின் பனிக்குகைகளில் குளிரைத் தாங்கிய உடல், இப்போது லேசாக வியர்த்தது. மனதை ஒருமுகப்படுத்தும் கலை (யோகம்) கற்ற அந்த மனம், ஒரு நொடி தடம் புரண்டது.


அவர் கண்முன்னே, சிறுவயதில் காய்ச்சல் வந்தபோது இரவு முழுவதும் விழித்திருந்து பணிவிடை செய்த அதே அம்மா. பள்ளிக்கூடம் விட்டு வந்தால் மடியில் படுக்க வைத்துத் தலை வருடிவிடும் அதே அம்மா.


துறவிக்குள் புதைந்து கிடந்த 'மகன்' திமிறிக்கொண்டு எழுந்தான். "அம்மா..." என்ற குரல் அவர் உள்மனதில் பெரும் கூக்குரலிட்டது. பீடத்தை விட்டு இறங்கி, ஓடிச்சென்று அந்தத் தாயின் காலில் விழுந்து, "என்னை மன்னிச்சுடும்மா..." என்று கதறிவிட வேண்டும் போல ஒரு உந்துதல் ஏற்பட்டது.


அவர் கண்கள் கலங்கின. சபையில் இருந்தவர்களுக்கு அது புரியவில்லை. "சுவாமிஜி ஏன் கண் கலங்குகிறார்? பக்தி பரவசமா?" என்று நினைத்தார்கள்.


ஆனால், சுவாமிஜிக்குள்ளே ஒரு பெரும் போர் நடந்து கொண்டிருந்தது. பாசத்திற்கும், துறவறத்திற்கும் இடையிலான போர்.


அவர் கண்களை மூடினார். ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தார்.


'ரகு இறந்துவிட்டான். நான் இப்போது ஒரு துறவி. எனக்குத் தாய், தந்தை, உறவு என்று யாரும் இல்லை. இந்த உலக உயிர்கள் அனைத்துமே என் உறவுதான். அந்தத் தாயின் தியாகம்தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. நான் இப்போது ஒரு மகனாக இறங்கிச் சென்றால், அது அவளின் தியாகத்திற்கே அவமானம்.'


வைராக்கியம் என்ற வாளினைக் கொண்டு, பாசம் என்ற கொடியை அறுத்தார். ஆனால், அன்பை அறுக்கவில்லை; அதை விஸ்வரூபமாக மாற்றினார்.


கண்களைத் திறந்தபோது, அவர் முகத்தில் இருந்த பதற்றம் மறைந்து, ஒரு தெளிந்த நீரோடையைப் போன்ற அமைதி குடிகொண்டிருந்தது.


வழிபாடு முடிந்து, பக்தர்கள் வரிசையில் சென்று பிரசாதம் பெற்றனர். சோமசுந்தரம் மீனாட்சியைத் தாங்கிப் பிடித்தபடி வரிசையில் நகர்ந்தார்.


சுவாமிஜியின் அருகே வந்ததும், சோமசுந்தரம் கைகூப்பி நின்றார். அவர் கண்களில் நீர். சுவாமிஜி அவரைப் பார்த்து லேசாகத் தலையசைத்தார். அந்தப் பார்வையில், "நான் பத்திரமாக இருக்கிறேன் அப்பா" என்ற செய்தி இருந்தது.


அடுத்து மீனாட்சி.


அவள் நிமிர்ந்து தன் மகனைப் பார்த்தாள். அவன் கண்களில் இப்போது பழைய ரகுவின் குறும்பு இல்லை. ஒரு முதிர்ச்சி, ஒரு தீர்க்கம், ஒரு கருணை இருந்தது.


சுவாமிஜி அருகில் இருந்த தட்டிலிருந்து ஒரு பெரிய ஆரஞ்சுப் பழத்தையும், ஒரு தாமரை மலரையும் எடுத்தார்.


அவள் கைகளை நோக்கி நீட்டினார்.


அப்போது அவர் வாய் முணுமுணுத்தது... மந்திரம் இல்லை. சுற்றியிருந்தவர்களுக்குக் கேட்காத மெல்லிய குரலில், "நல்லா இரும்மா..." என்று மட்டும் சொன்னார்.


அந்த இரண்டு வார்த்தைகள்... அது போதும். மீனாட்சிக்கு அதுவே மோட்சம்.


அவள் அந்தப் பிரசாதத்தை வாங்கிக்கொண்டாள். அவளுக்குள் இருந்த 'ரகுவின் அம்மா' என்ற குறுகிய அடையாளம் அழிந்து, ஒரு ஞானியின் தாய் என்ற பெருமிதம் உருவானது.


"நீ இங்க நல்லா இருக்கியே... அது போதும் எனக்கு. லோகத்துக்கே வழி காட்டுற விளக்கா நீ இருக்கணும்," என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.


அவள் அங்கிருந்து நகரும்போது, அவள் கால்களில் இருந்த சோர்வு மறைந்திருந்தது.


ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தபோது, மாலை வெயில் காவேரி ஆற்றில் தங்கச் சரிகையைப் போல மின்னிக்கொண்டிருந்தது.


சோமசுந்தரம் கேட்டார், "மனசுக்கு நிம்மதியா இருக்கா மீனாட்சி?"


மீனாட்சி வானத்தைப் பார்த்தாள். பிறகு ஓடுகின்ற நதியைப் பார்த்தாள்.


"நிம்மதியா இருக்குங்க. இத்தனை நாளா நம்ம பையன் நம்ம வீட்டுத் தோட்டத்து செடின்னு நெனச்சேன். அதான் என் கண்ணு முன்னாடியே இருக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா அவன் இப்ப பெரிய அரசமரம். அதுக்கு நான் சொந்தம் கொண்டாடக் கூடாது. அது எல்லாருக்கும் நிழல் கொடுக்கட்டும்."


அவள் குரலில் தெளிவு இருந்தது.


காவேரி ஆறு, தன் பிறப்பிடத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டாலும், கடலை நோக்கிச் செல்லும் வைராக்கியத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. மீனாட்சி அந்த நதியை வணங்கிவிட்டு, தன் சொந்த ஊர் செல்லும் பேருந்தில் ஏறினாள்.


(இது எனது சொந்த அனுபவம். எனது அண்ணா 45 வருஷங்களுக்கு முன்னர் இல்லறம் துறந்து துறவியாகி விட்டார். அவருக்கு இந்தக் கதை dedicated)


வீயார் 

Wednesday, October 8, 2025

சுருக்குப் பை

 சுருக்குப் பை 



நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்

வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது


காலையில் எழுந்தவுடன் மனைவியின் மொபைலைப் பார்த்தான் கண்ணன். வழக்கம் போல சார்ஜ் பத்துப் பர்சன்டுக்கும் கீழே. அலுத்துக்கொண்டே சார்ஜரை தேடி மின்சார இணைப்பு கொடுத்துவிட்டு தன்னுடைய மொபைலையும் சார்ஜில் போட்டான்.


மல்லிகாவின் இந்த பழக்கம் அவனுக்கு எப்போதும் கோபத்தை ஏற்படுத்தும். மொபைலை சார்ஜில் போடுவது என்றால் அப்படி ஒரு அலுப்பு அவளுக்கு! இவன் தான் பார்த்துச் செய்ய வேண்டும். எத்தனையோ முறை சொல்லிப்பார்த்துவிட்டான். ஆனால் அவள் மாறியபாடில்லை.

 

பின்னர் காலைப் பொழுது அதன் போக்கில் விரைவாகச் சென்றது. கண்ணனுக்கு ஆபீஸ் பக்கத்தில்தான். ஆனால் மல்லிகாவுக்கு பீச் வரை செல்ல வேண்டும். அதனால் அவள் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி விடுவாள். 


சமயங்களில் காலை டிபன் கூட அவளுக்கு ட்ரெயினில் தான். டிபன் பாக்ஸ் கட்டுவது கண்ணன் வேலை. மளமளவென்று அவன் தனக்கும் மனைவிக்கும் மதிய லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்தான். இரண்டு பாட்டில்களில் தண்ணீர் நிறைத்து வைத்தான். இதெல்லாம் செய்து நிமிர்ந்தபோது மணி எட்டரை. மல்லிகா ரெடியாகி விட்டாள்.


“மறக்காம மொபைல் எடுத்துக்கிட்டு போ” என்றான். சரியென்று சொல்லி மல்லிகா போனை எடுத்துக் கைப்பைக்குள் பொட்டுக் கொண்டு வெளியே இறங்கிச் சென்றாள்


அவள் சென்றபிறகு கண்ணன் குளிக்கச் சென்றான். பின்னர் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு ஆபீசுக்கு கிளம்பினான். தன் மொபைலை எடுக்கச் சென்றபோதுதான் அவன் கவனித்தான்.


மல்லிகா தன் போனை விட்டுவிட்டு அவன் போனை எடுத்துச்சென்று இருக்கிறாள்!


சரேல் என்றது கண்ணனுக்கு. என்னடா சோதனை என்று தன் நம்பருக்குக் கால் செய்தான்.


“ஆமாங்க, மறந்து போய் உங்க போனை எடுத்து வந்துட்டேன். கோவிக்காதீங்க” என்றாள் மல்லிகா.


என்ன சொல்வான் கண்ணன்? அவனுக்குக் கோபமெல்லாம் இல்லை. பயம். எங்கே அவள் தன் போனைத் திறந்து பார்த்திடுவாளோ என்று பயம். காலை வேளையில் மின்விசிறிக்குக் கீழே நிற்கும் போதும் வெள்ளமாக வியர்வை சிந்தவைக்கும் பயம்!


அவனுக்கு ஸோஷியல் மீடியாவில்  நிறைய நண்பிகள். யாரும் எங்கும் எல்லை மீறியது இல்லை என்றாலும் மல்லிகா சற்று பழமைவாதி. அவளுக்கு இது புரியாது. பிடிக்காது.


அது மட்டுமல்ல அவன் பயத்துக்குக் காரணம். பல ஆண்களைப் போல அவனுள்ளும் சற்று அதீதமான காம ஆசைகள் உண்டு. அதற்குத் தீனி போடும் வகையிலான தளங்கள் நிறைய அவன் மொபைலில் புக்மார்க் செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை மல்லிகா அதெல்லாம் பார்த்துவிட்டால்?

இடது மார்பு வலிப்பது போல உணர்ந்தான். 


சரி லைட்டாக அவளை எச்சரிக்கலாம் என்று மீண்டும் போன் செய்தான். போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக செய்தி சொன்னது.

கண்டிப்பாக மல்லிகா பார்த்திருக்க வேண்டும். கோபம் வந்திருக்கும். அதனால்தான் ஸ்விட்ச் ஆப் செய்திருக்கிறாள். கண்ணன் நிம்மதி தொலைத்தான்.


அவனுக்கு ஆபீசில் வேலை ஓடவில்லை. பலமுறை போன் செய்தான். ஸ்விட்ச் ஆப்! மல்லிகா மாலை ஏழு மணிக்குத் தான் வருவாள். அந்த நாளின் மாலை ஏழு மணியை கண்ணன் எப்படி எட்டிப்பிடித்தான் என்று அவனாலேயே விவரிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு நோயாளி போல ஆகிவிட்டான்.


ஒருவழியாக மல்லிகாவும் வந்து சேர்ந்தாள். “என்ன எவ்வளவு தடவை போன் செஞ்சேன்? ஸ்விட்ச் ஆப்ன்னு வந்துதே? என்றான் அவளைப் பார்த்து.


“அத ஏன் கேக்கறீங்க! நீங்க காலைல பேசி வச்சதும் ஸ்விட்ச் ஆப் ஆயிடுத்து. இதுக்குண்டான சார்ஜர் யாருகிட்டயும் இல்லை. அதுனால் நான் இத அப்பவே handbag ல போட்டுட்டேன். இந்தாங்க” என்று சொல்லி அவன் போனை தந்தாள்.


“ஆண்டவா! வாட் எ மிராகிள்!” என்று கண்ணன் தனக்குள் வியந்தான். தன் சார்ஜரில் போனை இணைக்கப் போகும்போது பார்த்தான். போன் ஸ்விட்ச் ஆன் ஆகியிருந்தது. சார்ஜும் முழுவதுமாக இருந்தது.


வியப்புடன் பார்க்கையில் ஒரு தெரியாத நம்பரில் இருந்து ஒரு மெசேஜ்.

திறந்து பார்த்தான். மிக நீண்ட மெசேஜ் 


“ஹலோ கண்ணா! போன உயிர் திரும்பி வந்ததா? உன் மேல் இருந்த பரிதாபத்தில் நான்தான் என் சக்தியால் அதை செயலிழக்கச் செய்தேன். என்னை உனக்கு நினைவு இருக்கிறதா? போன வாரம் நீ காலையில் நடக்கச் சென்றபோது உன் எதிரில் ஒரு நாகம் வந்தது நினைவு இருக்கிறதா? உன்னைக் கொத்துவதர்காக எழும்பிய அது சிறிது நேரம் உன்னைப் பார்த்துவிட்டு வந்த வழியே திரும்பிப் போய் விட்டது நினைவிருக்கிறதா? நான் தான் அந்த நாகம் .


உன்னை விட்டு விட்டதற்கு ஒரு காரணம் உண்டு . உன் கைககளில் இருந்து ஒரு வாசம் வந்தது. என் எதிரியின் வாசம். பிறகு உன்னைப் பின்தொடர்ந்து வந்த போது தான் தெரிந்தது அவன் உன் எதிர் வீட்டில் குடியிருக்கிறான் என்பது.  அவன் ஏன் என் எதிரி ஆனான் என்பது உனக்குத் தேவை இல்லாத விஷயம் என்றாலும் சொல்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன் அவன் வீட்டுப் பக்கம் சென்ற என் பிள்ளையை அது எதுவும் செய்யாத போதே அடித்துக் கொன்று விட்டான்.  அவனைப் பழிவாங்கத் துடித்தேன். ஆனால் அவன் ஒரு மாந்த்ரீகனைப் பிடித்து வீட்டைச் சுற்றி ஒரு சர்ப்பக் கட்டு போட்டு விட்டான். என்னால் அங்கே போக முடியாது. நாங்கள் வெறும் சர்ப்பம் இல்லை. நாகர் உரகர் என்று கேள்விப் பட்டு இருக்கிறாயா? அந்த நாகர் குலம் நாங்கள். எங்கள் குல குரு அதற்கு ஒரு வழி சொன்னார்.  அதன் படி தான் உன்னை அணுகியிருக்கிறேன். 




உன் ரகசியங்கள் உன்னோடு. ஆனால் இதற்குப் பிரதியுபகாரமாக நீயொன்று செய்ய வேண்டும். உன் அலமாரியின் இரண்டாவது தட்டில் அந்த நீல சட்டைக்குக் கீழே இரண்டு  சிறிய சுருக்குப்  பைகள்  இருக்கின்றன. அதிலே நீல நிறம் உனக்குப் பரிசு. வெள்ளை நிறப் பை எனக்கானது . அதை எடுத்துக் கொண்டு போய் உன் எதிர்வீட்டு சுப்பிரமணியின் வீட்டில் அவன் படுக்கையறை ஜன்னலுக்கு வெளியே வைத்துவிடு. என்னால் அங்கு போக முடியாத சூழ்நிலை. நீ அதை வைத்து விட்டால் நான் போய்விடுவேன். அந்தச் சர்ப்பக்கட்டு சற்று நேரம் செயலிழக்கும். மறுக்காதே! மறைத்த ரகசியங்களை பகிரங்கப்படுத்தவும் முடியும்”


இந்த மெசேஜைப் படித்த கண்ணன் ஒரு அர்ஜுன மயக்க நிலைக்கு போய் திரும்பினான்.  இதெல்லாம் உண்மையாய் இருக்குமா? யோசித்துப் பார்க்கையில் ஒரு விஷயம் ஞாபகம்  வந்தது. அந்தப் பாம்பு கடிக்க வந்த தினத்தில் அதற்க்கு சற்று முன்புதான் சுப்பிரமணியோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டு கை குலுக்கி விட்டு வாக்கிங் போனான்.  அப்போ கையில் இருந்து சுப்ரமணியின் வாசம் வந்து இருக்கும். சரிதான்.  கண்ணனுக்கு வியர்த்தது. 


சட்டென்று தன் அலமாரியைத் திறந்து நீல சட்டையைத் தூக்கிப் பார்த்தான். சொன்ன மாதிரியே இரண்டு சுருக்குப் பைகள்.  நீல நிறப் பையை எடுத்து திறந்து பார்த்தான். உள்ளே கோலிகுண்டு அளவுக்கு ஒரு நீலப் பச்சைக் கல் அவனைப் பார்த்து சிரித்தது.  அவன் உதடுகள் அவன் அறியாமலேயே ' நாகமணி நாகமணி' என்று அரற்றியது.


இரண்டாவது வெள்ளைச் சுருக்குப் பையை  கையில் எடுத்தான். உள்ளே ஏதோ மிருதுவாக துணிபோல் உணர்ந்தான். அந்தப் பையில் இருந்து பவழமல்லி அத்தர் எல்லாம் கலந்தாற்போல ஒரு வாசனை.


முடியைத் தளர்த்தி பையின் உள்ளே பார்த்தான். அழகாக மடித்து வைக்கப்பட ஒரு நாகப் பாம்பின் தோல்! மற்றும் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு விதமான பொடி இருந்தது. அந்தப் பொடியின் நடுவில் ஒரு தகடு| 


கண்ணனுக்கு சகலமும் ஒடுங்கியது. என்ன சோதனை! இந்த நாகக்கன்னி ஏன் என்னை விடாமல் துரத்துகிறாள்?


எப்படி யோசித்தும் அவனுக்கு தப்பிக்கும் வழி தோன்றவில்லை. முடிவாக அதை எடுத்துக்கொண்டு எதிர் வீட்டுக்குச் சென்றான்.


“வாங்க கண்ணன்” என்று வரவேற்ற சுப்பிரமணியிடம் “கொஞ்சம் வாழையிலை வேண்டும் நான் பறித்துக் கொள்ளவா” என்று கேட்டான்.


“இதெல்லாம் கேக்கணுமா கண்ணன்?” என்றான் சுப்பிரமணி.


கண்ணன் பின்பக்கமாக இறங்கிச்சென்று சுப்பிரமணி பார்க்காத அந்த நொடியில் தான் கொண்டுவந்த அந்த வெள்ளை சுருக்குப் பையை அவன் பெட்ரூம் ஜன்னல் வெளியே வைத்துவிட்டு வந்ததற்கு ஒரு இரண்டு வாழை இலை வெட்டிக் கொண்டு வெளிய வந்து தன் வீட்டுக்குச் சென்றான்.


அகஸ்மாத்தாக போன வாரம் தனக்கு சர்ப்ப தோஷம் என்று சுப்பிரமணி சொன்னது நினைவுக்கு வந்தது.


வீயார்