Thursday, February 14, 2019

நினைவே நம் வாழ்க்கையின் திசை மாற்றினால்...

நினைவே நம் வாழ்க்கையின் திசை மாற்றினால்...

சருகான மலர் மீண்டும் மலராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
-----  கவிஞர் கண்ணதாசன்.

மெசஞ்சரில் வந்த நோட்டிபிகேஷன் சத்தம் கவனத்தை ஈர்க்க நரேன்  (நாராயணன் என்ற பெயரை நரேன் என்று நண்பர்கள் அழைப்பார்கள். நாமும் நரேன் என்றே அழைப்போம்) தனது மொபைலை எடுத்துப் பார்த்தான்.

அவன் நினைத்தது சரிதான். சௌமியிடம் இருந்துதான் வந்திருந்தது. அவனை அறியாமல் அவன் மனம் துள்ளியது. 

' ஹாய் நரேன்! ஹேப்பி வேலன்டைன்ஸ் டே!"

' உனக்கும் சௌமி' என்று நரேனின் விரல்கள் ஆனந்தத்தில் டைப் அடித்தன.

' எனக்கு பழைய நினைவுகள் வந்திடுத்து டா... '

' ம்ம்ம்...'

' அப்புறம் என்ன ஸ்பெஷல் இன்னிக்கு?'

' ஒண்ணுமில்லை சௌமி. ஆபீஸ் போகணும்' என்று டைப் அடித்து send பண்ணியதும் தன் தவறை உணர்ந்தான் நரேன்.

'நீ இன்னும் மாறலடா ' என்ற சௌமியின் மெசேஜ் அவனை கடந்த கால நினைவுகளுக்குள் இட்டுச் சென்றது. நாமும் உடன் செல்வோம்.

மாம்பலத்தில் கிரி தெருவில் எதிரெதிர் வீடு நரேனுக்கும் சௌமிக்கும். இரண்டு குடும்பத்தாரும் நன்கு நெருங்கிப் பழகினார்கள். நரேன் அப்பா சௌமி அப்பா இரண்டு பேரும் பேங்க் மேனேஜர். அதனாலும் அவர்கள் நட்பு இறுகியது. பண்டிகைகள் வீட்டு விசேஷங்கள் எல்லாம் இன்னும் வலு சேர்த்தன அவர்கள் நட்புக்கு,

இப்படி குடும்ப நட்பாக இருந்தது இவர்கள் இருவர் இடையில் காதலாக மலர்ந்தது ஒரு முறை இரண்டு குடும்பமும் குலு மனாலி சென்றபோதுதான்.
நண்பர்களாக சென்றவர்கள் காதலர்களாக திரும்பினர். பிறகு ஒரு வருடம் போல அவர்கள் காதல் வேர்விட்டுத் துளிர்த்தது.

மறைத்தும் மறையாத காதல் அல்லவா? இருவர் வீட்டுக்கும் தெரிந்த போது இவர்கள் பயந்தார்கள். ஆனால் ஒரு feel good திரைப்படம் போல இருவர் வீட்டிலும் சம்மதம்!

அப்போது தான் நரேனுக்கு ஒரு ஐடி கம்பெனியிலும் சௌமிக்கு ஒரு வங்கியிலும் பணியானது.  அந்த வருஷத்தையோ அந்த வருஷத்தில் வந்த காதலர் தினத்தையோ இவனால் மறக்கவே முடியாமல் போனது.

சௌமி ஒரு வாரம் முன்னதாகவே சொல்லிவிட்டாள். V day அன்று லீவு போட்டுவிட்டு ஊர் சுற்ற வேண்டும், சினிமா பார்க்க வேண்டும் ஹோட்டல் போக வேண்டும் என்று. இவனும் சரி என்று சொல்லி விட்டான். சௌமி அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டாள். சரியாக பதிமூன்றாம் தேதி, நரேன் கம்பெனியில் ஒரு ப்ராஜக்டை தந்து அதை war footingல் முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். காதல் தினத்துக்கு லீவு என்று கேட்க கூசினான் நரேன். போதாததுக்கு பதிமூன்று இரவும் அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

மொத்தமாக வேலை முடிந்து கிளம்ப அவனுக்கு மறுநாள் மாலை ஏழு மணிபோல ஆனது. இடையே பல கால்கள். சௌமியிடமிருந்து. இவன் மெசேஜ் மூலம் பதில் தந்தான். எப்படியாவது வா என்றாள் சௌமி. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த நரேன் தன் மொபைலை அணைத்துவிட்டான்.

அதன் பின் மறுநாள் அவன் சௌமியை சந்திக்க அவள் வீடு சென்றதும் அங்கு நடந்ததும் வரலாறு!

காதலிக்கும் போதே என் விருப்பத்தை மதிக்காத உன்னை நானெப்படி கல்யாணம் செய்து கொள்வது? விலகிவிடலாம் என்று உறுதியாக சொல்லிவிட்டாள் சௌமி.  இரு வீட்டார் சொல்லியும், நரேன் கெஞ்சியும் ஒன்றும் பலனில்லை.

ஒரு வருஷத்துக்குள் இருவருக்கும் திருமணம் ஆனது. சௌமி வடநாடு சென்று விட்டாள். நரேன் மனைவி சென்னைதான். நரேன் தன் மனைவிக்கு தனது முன்னாள் காதல் பற்றி எல்லாம் சொல்லிவிட்டான்.  இன்று அவர்கள் சோழங்கநல்லூரில்  அவன் ஆபீஸ் அருகில் ஒரு பெரிய வீட்டில் குடியிருக்கிறார்கள்.

ஒரு ஆறு மாசம் முன்னால் ஒரு facebook க்ரூப்பில் மெம்பரான நரேனுக்காக அவன் விதி காத்திருந்தது. சௌமியின் வடிவில். அவளும் அங்கு மெம்பர்.

இவன் பதிவுகளைப் பார்த்து இவனுக்கு friend request அனுப்பினாள். இவனும் யோசிக்காமல் ஏற்றுக்கொண்டான். இதைத் தன் மனைவியிடமும் சொல்லிவிட்டான்.

முதலில் சாதாரண ஹாய் ஹலோக்கள். Harmless குட் மார்னிங்குகள் என்று இருந்தது. திடீரென்று ஒரு நாள் யு டர்ன் எடுத்தது. சௌமி கொஞ்சம் கொஞ்சமாக தன் பர்சனல் விஷயங்களை இவனுடன் பகிர்ந்தாள் .

தன் கணவனைப் பற்றி, அவன் குடிப்பழக்கத்தைப் பற்றி என்று ஆரம்பித்து வாழ்க்கையில் எதுவும் சுகமில்லை என்பது வரை பகிர்ந்துகொண்டாள். இதெல்லாமும் நரேன் தன் மனைவியடம் மறைக்கவில்லை.

ஆரம்பத்தில் guiltyயாக உணர்ந்த நரேன் நாளடைவில் அவளுக்கு ஆறுதல் சொல்லும் அளவுக்கு சென்றுவிட்டான். 

இதோ இன்று இன்னொரு மெசேஜ்! ' நான் சென்னை வந்திருக்கிறேன். முடிஞ்சா சந்திக்கலாமா?'

பின்னால் நிழலாட அவன் திடுக்கிட்டுத் திரும்பினால் அவன் மனைவி!

' யாருகிட்ட சாட்டிங்? சௌமியா?'

'ஆமாம்! சென்னை வந்திருக்கா... '

'வாவ்! ஆத்துக்குக் கூப்பிடுங்கோ'

' இல்லை அவள் என்னைத் தனியாக சந்திக்கணும்ன்னு சொல்றா.. ஏதோ முக்கியமா பேசணுமாம்.'

அவன் மனைவி மௌனமானாள். சில நிமிடங்கள் கழித்து 'நரேன்' என்று அழைத்துப் பேசினாள்.

'நரேன் எனக்கு உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு.  உங்க நல்ல மனசும் பிடிச்சிருக்கு. ஆனா நீங்க எதையும் யோசிக்காம முடிவு எடுக்கறீங்கன்னு தோணறது. காதல் அதிலும் முதல் காதல் யாராலும் மறக்க முடியாது. அந்த நினைவுகள் எப்பவும் சுகம் தருபவை. சர்க்கரை எப்ப சாப்பிட்டால்ம் இனிப்பது போல.

காதல் கல்யாணத்தில் முடிஞ்சா அது பெரிய வரம். அப்படி இல்லாதபோது நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அந்த நினைவுகள் நம் நிகழ்கால வாழ்க்கையோட கலக்காம பார்த்துக்கணும்.

இப்ப உங்களையே எடுத்துக்குங்க. You have not concealed anything from me. ஆனா சௌமியும் உங்கள மாதிரின்னு assurance கொடுக்க முடியுமா? அப்படி முடியலேனா இப்படித் தனியா சந்திக்கறது தவறு இல்லையா? அத நீங்க எடுத்துச் சொல்லணும்.

நரேன், நினைவுகள் இலகுவா இருந்தா சுகம். சிக்கல் விழுந்தா சுமை.  அதுனால பார்த்து நடந்துக்குங்க. நான் உங்க மனைவி என்பதோட உங்க வெல் விஷரும் கூட' என்று பேசி முடித்தாள்.

நரேன் ஒரு அர்ஜுன மயக்கித்தில் இருந்தான். அந்த மயக்கத்தை கலைக்கும் படியாய் ஒரு FB நோட்டிபிக்கேஷன்! ஆனால் இந்த முறை அவன் மனைவி மொபைலில் இருந்து. அதைப் பார்த்த அவன் மனைவி மெலிதாக புன்னகைத்தாள்.

'இங்க பாருங்க நரேன்! நான் என்ன சொன்னேன்? இதோ இந்த போஸ்ட் பாருங்க. இது திருவல்லிக்கேணில என் வீட்டுப் பக்கத்தில் குடியிருந்த வெங்கட்டின் போஸ்ட். எனக்கும் அவனுக்கு எங்க ஏரியா லைப்ரரி மூலம் பழக்கம். அவனும் சுஜாதா கதைகளோட பரம ரசிகன். அவன் கதை கவிதைன்னு facebookல நிறைய எழுதறான். அவனோட திருவல்லிக்கேணி தேவதைகள்ங்கற அவன் இளமை நினைவுகள் ரொம்ப பிரசித்தம். அவன் சந்திச்ச பொண்ணுகள் பத்தில்லாம் எழுதுவான். ஆனா பாருங்க, இன்னைக்கு தன் கவர் பிக்சர்ல தன் மனைவியோட ஒரு போட்டோ போட்டுருக்கான். திருவல்லிக்கேணி நினைவுகள். அவன் வாழ்க்கை நிதர்சனம். இத தான் நான் உங்ககிட்ட சொன்னேன்' என்று சொல்லி உள்ளே சென்ற வேதா என்னும் வேதவல்லி என்னும் திருவல்லிக்கேணி தேவதை.

வீயார்.