என்மனம் என்னவென்று....(சிறுகதை)
கானலை மான் நீரெனவே கண்டு செல்லல் போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பர்
--பாம்பாட்டி சித்தர்
மனுஷன் ஒரு ஆடிட் போய் வரதுக்குள்ள என்ன களேபரம் ஆபீஸ்ல! தெய்வமே!
நான் ராணியைப் பார்த்தேன். கோவத்தில் சிவந்திருந்தது அவள் கண்கள். அவள் உதடுகளின் மேற்புறத்தில் மெலிதாக வேர்த்து இருந்தது. அது அவள் உதடுகளின் அழகை மேலும் கூட்டிக் காட்டியது.
"என்ன ஆச்சு ராணி? கொஞ்சம் உட்காரு. இந்த தண்ணி குடி."
"வேணாம் சார். எனக்கு வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம். கால்கடுதாசி எழுதித் தாங்க. நான் கையெழுத்துப் போடறேன். அப்படியே போலீஸ்ல கொடுக்க ஒரு கம்ப்ளைன்ட் எழுதித் தாங்க. நாம் ஆபீஸ் கிட்ட இருக்கற ஸ்டேஷன்ல தந்திடறேன். என் வீட்டுக்காரரும் அதுதான் சொன்னார். " படபடவென்று பொரிந்து தள்ளினாள் ராணி.
ராணி எங்கள் ஆபீஸ் கடைநிலை ஊழியை. ஆபீஸ் பெருக்குவது, filing செய்வது, எங்களுக்கு டீ காப்பி போடுவது (அதற்கென்று தனி இடம் உண்டு), இதர வெளிவேலைகள் செய்வது இத்யாதி அவள் பணிகளில் அடக்கம்.
எங்கள் ஆபீஸ் ஒரு தனியார் வங்கியின் ஆடிட் கிளை. இதில் அந்த பிராஞ்ச் மேனேஜர் ராஜசேகர் , ஒரு க்ளார்க் விமல், ஒரு ஆடிட்டர் (நான்தான்) மற்றும் ராணி.
ராணியின் பிரச்சனைக்கு வருவோம். அவளது தலையாய பிரச்சனை ராஜசேகர் மற்றும் விமல்.
ராணி பிரமாதமான அழகி இல்லையென்றாலும் பெண்களே இல்லாத ஆபீசில் அவள் அவர்கள் இருவரின் கவனத்தையும் கவர்ந்ததில் வியப்பு ஏதுமில்லை. மேலும் ராஜசேகரை womaniser என்றே categorize செய்யலாம். (இதை எழுதியது வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்) அவன் மனைவி தனக்கு ஏற்ற ஜோடியில்லை என்பது அவனது எண்ணம். அதனால் அவன் கண்கள் வேலிதாண்டி மேயும். இது அவன் மனைவிக்குத் தெரியும் என்பது அரசல் புரசலான செய்தி. விமல் திருமணம் ஆகாதவன். அதுவே தனது பலம் என்று நினைப்பவன்.
இவர்களும் இருவரும் ராணியிடம் வெளிப்படையாகவே வழிவார்கள். சிறிதும் லஜ்ஜையின்றி அவர்கள் பார்வை ராணியின் அங்க லாவண்யங்களில் நின்று நிதானிக்கும். ராணி பாவம் என்ன செய்வாள்? அவளோ ஒரு ஏழை. கணவன் வேறு சற்று உடல்நலம் குறைந்தவன் என்று கேள்வி. வேலை எதற்கும் செல்லாமல் வீட்டோடு இருக்கிறான் என்று ஒரு முறை ராணியே சொல்லியிருக்கிறாள்.
அவள் fileகளைத் தரும் நேரத்தில் அவள் கைகளை ஸ்பரிசித்து வாங்குவது, இரட்டை அர்த்தத்தில் அவளிடம் பேசுவது என்பது அவர்கள் இருவருக்கும் வாடிக்கை. எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்றாலும் அதற்கான எதிர்ப்பு ராணியிடமிருந்து வந்தால்தான் பேசுவது என்னும் முடிவில் இருந்தேன்.
போனவாரம் ஆடிட் போவதற்கு முதல்நாள் நான் ராஜசேகர் கேபினுக்குள் சென்றபோது அவனுக்கும் ராணிக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. நான் போனதும் அவன் சட்டென்று அமைதியானான். ராணி அழுதவாறே வெளியே சென்றாள். எனக்கு என்ன நடந்தது என்று கேட்க ஆசையாக இருந்தாலும் அமைதியாக இருந்தேன்.
அப்புறம் இரண்டு வாரம் ஆடிட். முடிந்து இன்று வந்தால் இதோ ராணி மேலே சொன்னதைச் சொன்னாள்.
"சரி வா வெளியே சென்று ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு வரலாம்" என்று அழைத்தேன்.
நான் பேசுவதற்குத்தான் அழைக்கிறேன் என்று புரிந்து கொண்டவள் என்னுடன் வந்தாள் .
ஆபீஸ் வெளியே இருந்த கடையில் காப்பி வாங்கிக்கொண்டோம்.
" சரி சொல்லும்மா"
அவள் மிகுந்த கோபத்தில் படபடவென்று பேசினாள்.
"நீங்க போற அன்னிக்கு எனக்கு அவனுக்கும் சண்டை நடந்திச்சு இல்ல சார். அதுக்குக் காரணம் அவன் பேசின பேச்சு. அவன் பொண்டாட்டி ஊருக்குப் போறாளாம். என்னைய அவன் வீட்டுல வந்து இருக்கச் சொல்றான் ராஸ்கல். நான் மாட்டேன்னு சொன்னா ஹெட் ஆபீஸ்ல சொல்லி என்ன வேலைலேர்ந்து எடுத்துடுவானாம். அப்புறம் நான் தெருவுலதான் பிச்சை எடுக்கணமாம். அதுனால நீங்க வர்ற வரைல நானும் லீவு போட்டுட்டேன். நீங்க வந்த பிற்பாடு பேசிக்கலாம்ன்னு "
" அப்படியும் அந்தப் பொறுக்கி ரெண்டு நாள் கழிச்சு என் வீட்டுக்கே வந்துட்டான் சார். எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. ஏதோ அவன் வீடு மாதிரி ஜாலிய உள்ளாற வந்துட்டான். என்ன ராணி. ஆபீஸ் வரலியா? அப்புறம் ஹெட் ஆபீஸ் வரைல விஷயம் போயிடும்னு மெரட்டினான். அக்கம்பக்கத்தில் இருந்து ரெண்டு பேர் வந்து என்னான்னு கேட்டாங்க. அவங்களப் பார்த்ததும் பேசாம வெளிய போயிட்டான். வெளில பார்த்தா அவன் கார் நின்னுக்கிட்டு இருந்தது. காருக்குள்ள விமலும் உட்கார்ந்திருந்தான். கூட்டுக் களவாணிங்க." என்று பொரிந்தாள்.
எனக்கு திக்கென்றது. ராஜசேகர் ஏதோ வழிகிறான் என்று நினைத்தால் அத்துமீறி போகிறானே! கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"சரி வா" என்று அவளையும் அழைத்துக்கொண்டு உள்ளே போனேன். நேரே ராஜசேகர் கேபின் சென்றேன். எங்கள் இருவரையும் பார்த்த அவன் உடனேயே நிலைமையை புரிந்துகொண்டு விட்டான்.
"என்ன, சப்போர்ட்டுக்கு ஆள் கூட்டிக்கிட்டு வந்திருக்கியா? இவரால உனக்கு எந்த ஹெல்பும் செய்ய முடியாது. அடுத்த ஆடிட் போகும்போது நான் உன்ன என்ன செய்வேன் பாரு. கண்டிப்பா உன் வேலை காலி. பிச்சை எடுக்கணும். பிச்சைதான் எடுக்கணும்" என்று கொக்கரித்தான்.
அப்புறம் என்னைப் பார்த்தான். "நீங்க போங்க சார். ஆடிட்ல நீங்க செஞ்ச தில்லுமுல்லு எல்லாம் எனக்குத் தெரியும். வீணா என் வழில வராதீங்க"
நான் அவனை வெறித்துப் பார்த்தேன். பின்னர் ராணியை பரிதாபமாக பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். வெளியே வந்த என் மீது விமல் ஒரு ஏளனப் புன்னகையை வீசினான். என்னுள் ஒரு நபும்சக கோபம் எழுந்து அடங்கியது.
திடீரென்று உள்ளே கேபினில் பெரிய சத்தம். ராணிதான். "பேமானி.. பொறுக்கி... இருடா என் புருஷன் கிட்ட சொல்றேன். அவரு வந்து உன்னை என்ன செய்வார் பாரு" என்று கத்தியவாறே வெளியே வந்தாள் .
அவள் பின்னாடியே வந்த ராஜசேகர்" அந்த வியாதிக்காரன் என்னை என்னடி செஞ்சுடுவான்?" என்றான்.
ஒன்றும் சொல்லாமல் ராணி வெளியே ஓடினாள்.
அப்புறம் லஞ்ச் டைமும் வந்தது. ராணி வரவில்லை. சுமார் மூணு மணியிருக்கும். ராஜசேகர் கேபினில் இருந்து ஒரு பெரிய அலறல்.
நானும் விமலும் அலறியடித்துக்கொண்டு உள்ளே ஓடினோம். உள்ளே நாங்கள் கண்ட காட்சி எங்களை உறைய வைத்தது.
ராஜசேகர் மேஜை மீது ஒரு மிக நீளமான நாகம். ராஜநாகம். படமெடுத்து நின்றுகொண்டு இருந்தது. நாங்கள் வந்த சப்தம் கேட்டு திரும்பியது.
"விமல் என்னைக் காப்பாத்துடா .. எதுனா செய்யிடா" என்று ராஜசேகர் ஓலமிட்டான்.
கண் இமைப்பதற்குள் விமல் அருகில் சுவரில் அலங்காரத்துக்காக மாட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள்களில் இருந்து ஒன்றை உருவினான். உருவிய வேகத்திலேயே அதை அந்த நாகத்தை நோக்கி வீசினான். இதை எதிர்பாராத நாகம் சற்றே பின் வாங்கியது. ஆனால் காற்றில் பறந்துவந்த அந்த வாள் அதன் கழுத்துபகுதியைப் பதம் பார்த்துவிட்டு கீழே விழுந்தது.
நாகம் வலியில் துடித்தது. இதனிடையில் ராஜசேகர் அங்கிருந்து எழ முயற்ச்சித்தான். அந்த அசைவை உள்வாங்கிய நாகம் சட்டென்று அவன் முகத்திலேயே கொத்தியது. ராஜசேகர் வெட்டப்பட்ட மரம்போல விழுந்தான். நாகம் அருகில் திறந்திருந்த ஜன்னல் வழியே வெளியேறியது.
பிறகு நானும் விமலும் அவனை தூக்கிக்கொண்டு ஒரு ஹாஸ்பிட்டல் சென்றோம். ஆனாலும் ராஜசேகர் பலனின்றி இறந்துபோனான்.
அப்புறம் அவன் வீட்டுக்குச் சொல்லியது, அவர்கள் வந்தது என்று பலதும் நடந்துவிட்டது. ஒரு வாரமும் ஓடிவிட்டது. புது மேனேஜர் வரும்வரையில் நான் தாற்காலிக மேனேஜர் ஆனேன். விமலும் அடங்கிவிட்டான். ஆனாலும் ராணி வரவில்லை.
அன்று மாலை ஆபீஸ் விட்டு வீடு செல்லும்போது திடீரென்று ராணியைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. நடந்ததெல்லாம் அவளுக்குச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஒருவாறு அவள் வீட்டைக் கண்டுபிடித்துச் சென்று கதவைத் தட்டினேன்.
கதவை திறந்த ராணி முகத்தில் கலவையான ஒரு expression. "வாங்க சார்" என்று உள்ளே அழைத்தாள். என்னை உட்கார வைத்து உள்ளே சென்று காப்பி கொண்டு வந்தாள்.
குடித்தபடியே நான் நடந்த விஷயம் அனைத்தும் சொன்னேன். அவள் முகத்தில் ஒரு கோப உணர்ச்சி மட்டும். சற்று நேரம் கழித்து கிளம்ப எழுந்தேன்.
"அப்புறம் உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்"' என்றேன்.
சற்று நேரம் என்னைப் பார்த்தவள் "நீங்களே வந்து பாருங்க" என்று உள்ளே இருந்த பெட் ரூமுக்குள் அழைத்துச் சென்றாள்.
உள்ளே பெட்டில் அவள் புருஷன் படுத்திருந்தான். நாங்கள் வந்த சப்தம் கேட்டு கண்விழித்தவன் என்னைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தான். நான் அப்போதுதான் கவனித்தேன். அவன் கழுத்துபகுதியில் ஒரு பேண்டேஜ்.
என்னவென்று கேட்க வாய் திறந்தவன் திறந்தவாய் மூடாது உறைந்தேன். ராணியின் கணவன் என் கண் முன்னாலேயே சடசடவென்று சுருங்கி ஒரு ராஜநாகம் ஆனான்.
"அந்த விமல் பொறுக்கியையும் விடமாட்டோம் சார். ஆனா உங்களுக்கு ஒண்ணும் ஆபத்தில்லை " என்று பின்னாலிருந்து ராணியின் குரல் கேட்டது.
திரும்பினேன். அங்கே இருந்தது ஒரு பெண் நாகம். "என் பேரு நாகராணி" என்றது ராணியின் குரலில்.
வீயார்.