Friday, December 22, 2017

அந்திநேரத்து நிஜங்கள்.

அந்திநேரத்து நிஜங்கள்.

செய்ததமிழ் தனையறிந்து பதினெண் பேரைச்
செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
சதாகாலம் ஒம்சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால்
வேதாந்தச் சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்
உய்தமுடன் அவர்களைத்தான் வசமாய்க் கண்டால்
உத்தமனே சகலசித்துக் குதவி யாமே.

-சித்தர்கள் பெரிய ஞானக்கோவை ( ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் ) நிஜானந்த போதம்.

கதவு தட்டப்பட்டச் சத்தம் கேட்டு மும்முரமாக கதை எழுதிக்கொண்டு இருந்த நான் நிமிர்ந்தேன். “போய்விடு” என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். ஆனால் கதவுக்குப் பின்னால் இருந்தவர் போகவில்லை. அலுத்துக்கொண்டே எழுந்துசென்று கதவைத் திறந்தேன்.

சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர். ரொம்ப பயந்த சுபாவி போன்ற முகம்.

“யாரு வேணும்?”

“ராஜசேகரன்... ராஜ்...”

“நான்தான் ராஜ்.... நீங்க யாரு?”

“ என் பேரு சந்திரசேகரன். விழுப்புரம் பக்கத்துல ஒரு வில்லேஜ்ல பேங்க் மேனஜர்....உங்களைப் பார்க்கலாம்னு...”

“என்ன விஷயமா” என்று கேட்டேன்.

“ஒரு சொல் கொல்லும்” என்றார் மெதுவாக. அதைச் சொல்லும் போதே அவர் முகம் விகாரமாகியது. எனக்குள் சரேலென்று ஒரு குளிர்காற்று பாய்ந்தது.

சத்தியசீலன் ஐயாவும் அவர் சொல்லித்தந்த சித்தர் பாட்டும் அசந்தர்பமாக நினைவுக்கு வந்து என்னைப் பின்னோக்கி அழைத்துச் சென்றது.
நான் ராஜசேகரன். உங்களுக்கு நிச்சயமாக என்னைத் தெரிந்திருக்கும். ராஜ்என்ற பெயரில் கதைகள் எழுதி வருகிறேன். எல்லா வாராந்திரிகளிலும் மாதாந்திரிகளிலும் என் கதைகள், தொடர் கதைகள் வந்திருக்கின்றன. எந்தக் கதை எழுதினாலும் கதாநாயகி மட்டுமல்லாது, அதில் இடம்பெறும் இருபத்தி ஐந்து வயதுக்கு உட்பட்ட எந்த பெண் கதாபாத்திரமானாலும் என் வர்ணனைகளுக்குத் தப்ப மாட்டார்கள். விம்மித் தணியும் இளமைகளிலிருந்து வழிந்து இறங்கும் இடுப்பு வரை ஒரு முறை நின்று நிதானித்துத் தான் கதை நகரும். (பீ அண்ட் சி செண்டர் டிமாண்ட்!)

எல்லாருக்கும் இருமல் சளி ஜுரம் வரும். எனக்கு ரைட்டர்ஸ் ப்ளாக் வந்தது. அது என்ன வியாதி என்று தெரியாதவர்கள் கூகுளை நாடவும். அரசினை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, என் எழுத்தை நம்பி வேலையை விட்டுவிட்ட எனக்கு ரொம்பவுமே இக்கட்டான சூழ்நிலை.என்ன செய்வதென்று அறியாமல் இருந்த என்னை மேலும் இருட்டில் தள்ளினார் எழுத்தாளர் சாகர்.

555 என்னும் ஒரு சந்தேஹாஸ்பதமான ஏஜென்சியை அறிமுகப்படுத்தினார்.  எனக்குச் சகாயமாக அவர்கள் ஐந்து கதைகள் கொடுத்தனர். அதற்கு பதில் என் ரைட்டர்ஸ் ப்ளாக் விலகியதும் நான் ஐந்து கதைகள் எழுதித் தரவேண்டும் என்று நிபந்தனை. அவர்கள் கதைகளை வாங்கி என் பெயரில் போட்டு பணம் புகழ் சம்பாதித்த பிறகு என் நிபந்தனையை நான் மறக்க அவர்கள் மிரட்டலுக்கு பயந்து அடிபணிந்தேன் என்பது பழைய கதை.

அவர்களுக்கு நான் எப்படிக் கதைகள் எழுதிக் கொடுத்தேன் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. ஆனால் அதற்கப்புறம் கதை எழுதுவது என்றாலே ஒரு பயம் தொற்றிக்கொண்டது.

ஆனால் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே இருப்பது? இலியானாவின் இடுப்பைப் போல சிறுத்து வந்த பேங்க் பாலன்ஸ் வேறு என்னை மிரட்டியது. மன உளைச்சலை தவிர்க்க முகநூலே கதியென்று ஆனேன். என்னுடன் நட்பான அனைவரும் கேட்ட முதல் கேள்வி  நான் ஏன் இப்போதெல்லாம் கதைகள் எழுதுவதில்லை என்பதுதான். நான் பதில் சொல்லாமல் மழுப்பிவிடுவேன். இதேக் கேள்வியைத்தான் சத்தியசீலன் ஐயாவும் கேட்டார். ஆனால் என்னால் அவருக்குப் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சத்தியசீலன் ஐயா என் முகநூல் நண்பர். ஒரு ஆன்மீக வலைத்தளம் நடத்தி வருகிறார். வயதில் மூத்தவர். என்னிடம் தனி அன்பு கொண்டவர்.

அவரிடம் நான் என் மனக்குமுறலை கொட்டிவிட்டேன். பொறுமையுடன் கேட்ட அவர் கடைசியில் எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். குறிப்பாக சித்தர்களை நம்புவது உண்டா என்று கேட்டார்.

எனக்குச் சித்தர்கள் என்றால் நம்ம இந்திரா சௌந்திரராஜன் டிவி சீரியல்களில் வரும் சித்தர்களைத்தான் தெரியும். அவரிடம் சொன்ன போது சிரித்தார்.

பின்னர் பதினெட்டு சித்தர்கள் பற்றியும் அவர்கள் வரலாறு பற்றியும் அட்டமா சித்திகள் குண்டலினி என்று ஒரு மர்மதேச பிரயாணத்தில் என்னைக் கூட்டிப்போனார். நான் வாயடைத்துப் போனேன். பிறகு தான் மேலே சொன்ன பாடலைச் சொல்லித்தந்தார். அந்த மூல மந்திரத்தையும் சொல்லித்தந்தார்.

சித்தர்கள்  பாடி வைத்த தமிழ்ப் பாடல்களின் உண்மைப் பொருள் உணர்ந்து அறிந்து கொள்ளவும் , சித்தர்களைக் காண்பதற்கு ஒரு மூலமான மந்திரம் இதுவென்றும் சொன்னார் .சைதன்யமான இறையைப் போற்றி எந்நேரமும்  ஓம் சிங் ரங் அங் சிங் என்று ஒரு ( பூரணம் ) கோடித் தடவை வேறு சிந்தனையில்லாமல்  உருவேற்றினால், வேதாந்த சித்தர்களை வசமாய்க் காணலாம் என்றும் அவர்களை வசமாய்க் கண்டால் சகல சித்துக்களுக்கும்  உதவியாகும் என்றும் சொன்னார்.

நிச்சயம் முயன்று பார் என்று அறிவுரைச் சொன்னார். சரியென்று தலையாட்டிய நான் பிறகு அதை மறந்துபோனேன் என்பதுதான் உண்மை.

அதற்கப்புறமும் என் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பராசக்தி சிவாஜி சொன்னது போல வாழ்கையின் ஓரத்துக்கு போய்விட்டேன். அப்போதுதான் இந்த சித்தர் பாடல் நினைவுக்கு வந்தது. சரி முயன்றுதான் பார்ப்போமே என்றுதான் கணினி திறந்து அந்தக் பாடலைப் பார்த்தேன்.

அடுத்த நாளிலிருந்து அதற்கான வழியில் இறங்கினேன். கிட்டத்தட்ட ஒரு வாரம். ஒரு கோடி முறை சொல்லியும் விட்டேன். சத்தியசீலன் ஐயாவிடம் சொன்னேன். நல்லதே நடக்கும் என்றார்.

ஆனால் கலி முத்தியதோ என் விதி முற்றியதோ ஒன்றுமே நடக்கவில்லை. நான் மொத்தமாக உடைந்து போனேன். தற்கொலை நினைவு எட்டிப்பார்த்தது. அப்போது ஒரு எண்ணம். சாவது என்றுதான் முடிவாகிவிட்டதே! ஒரு முறை 555 ஏஜென்சியை தொடர்பு கொண்டால்தான் என்ன? ஒரு life கிடைக்குமே!

அந்த எண்ணம் வலுப்பெற்றதன் விளைவு ஒரு நாள் காலையில் நான் அந்த ஏஜென்சி இருக்கும் இடத்துக்குக் கிளம்பினேன். அருகில் இருந்த ஹோட்டலில் காப்பி சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று நுழைந்தேன். காப்பி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோதுதான் அவர் வந்தார்.

“இங்கே உட்காரலாமா?”

நிமிர்ந்து பார்த்தேன். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. நெற்றி நிறைய திருநீறு. கழுத்தில் ருத்திராட்ச மாலை.

“உட்காருங்க ஜி”

“எதுக்கு ஜி எல்லாம்? என் பேரு சித்தலிங்கம்”

என் பேரு ராஜ் என்று ஆரம்பித்த என்னை “எனக்குத் தெரியுமே” என்று தடுத்தார்.

ஆச்சர்யத்துடன் பார்த்த என்னை “உங்க நண்பர் சத்தியசீலன் சொன்னார்னு வச்சுக்கோங்களேன்” என்று சொல்லி சிரித்தார்.

“நான் இங்கே இருக்கேன்னு எப்படித் தெரியும்” என்று இழுத்தேன். “உலகில் எத்தனையோ அதிசயங்கள். அதிலே இதுவும் ஒண்ணுன்னு வச்சுக்கோங்க” என்றார்.

காப்பி வந்தது. அவருக்கும் ஒன்று சொன்னேன். “காப்பியா” என்று சிரித்தார். சரியென்று சொன்னார்.

“சத்தியசீலன் உங்க நிலைமை பற்றிச் சொன்னார்.” அந்த முகத்தில் ஒருசேர இருந்த அமைதியும் ஆளுமையும் என்னை அதிகம் பேச விடவில்லை. “ம்ம்” என்ற முனகல் மாத்திரமே வந்தது.


“இந்த உலகத்துல எதுவுமே முடியறது இல்லை” என்றார் பொதுவாக. பிறகு அவரே தொடர்ந்தார்.  “ எல்லா நிகழ்வுகளுக்கு முன்னாலும் ஒரு கதை இருக்கும். பின்னாலும் ஒரு கதை இருக்கும். அதை காணும் வித்தை தெரிய வேண்டும். அவ்வளவுதான்.”

“புரியலையே ஜி... இதுக்கும் என் நிலைமைக்கும் என்ன சம்பந்தம்?”

“நீங்க கதை எழுத வரலைன்னு தானே சத்தியசீலனிடம் சொன்னீங்க? அதுக்குத் தான் பதில் சொன்னேன். இப்ப பாருங்க நீங்க எழுதின கதைகளையே திரும்பவும் ஆழமாப் படிச்சீங்கன்னா உங்களுக்கு நான் சொல்ல வந்தது விளங்கும். அதிலேருந்தே இன்னும் கதைகள் பிறக்கும்”

“அதெப்படி? நான் தான் அந்தக் கதைகளை முடிச்சுட்டேனே?”

“அது நீங்க நினைக்கறது. அது வெறும் கதைன்னு நீங்க நினைக்கறதுனாலதான் இந்தப் பிரச்சினை. அதை உண்மைன்னு நினைச்சுப் பாருங்க. உங்க கதைகள்ல வர்ற கதாபாத்திரங்கள் நிஜம்னும் அவங்க வாழ்க்கை, அவங்க உலகம் நிஜம்னும் நினைச்சுப் பாருங்க. அப்ப விளங்கும்”

“அது எப்படி சாத்தியம்? அதெல்லாம் பொய்”

“அது உங்களுக்கு. சரி... நம்ம வேதாந்தம் என்ன சொல்றது? இந்த உலகம் பொய். இந்த வாழ்வே மாயம்னு சொல்றது. சரிதானே? அது இதெல்லாம் படைத்த அந்த ஆண்டவனுக்கு வேணும்னா உண்மையா இருக்கலாம். ஆனா அவன் படைத்த இந்த உலகில் வாழ்ந்துக்கிட்டு இருக்கற நமக்கு உண்மையாத்தானே தோணுது?”

“அதுனால...”

“நீ படைக்கும் கதைகளுக்கு நீதான் கடவுள். அந்தப் பாத்திரங்கள் உனக்கு வேண்டுமானால் பொய் போலத் தோன்றலாம். ஆனா நமக்கு எப்படி இந்த வாழ்க்கை உண்மைன்னு தோணுதோ, அவங்களுக்கும் அப்படித் தோணலாம் இல்லையா? நீ பார்த்தது அவங்களோட வாழ்க்கைல ஒரு பகுதி மாத்திரம்தான். அதுமட்டும் தான் அவங்க வாழ்க்கைனு நீ எப்படி முடிவு பண்ணலாம்? நம்மள மாதிரியே அவங்களுக்கும் வாழ்க்கை இருக்குன்னு நினைச்சுப் பாரு. அப்போ அவங்க வாழ்க்கைல நடந்த, நடக்கபோற இன்னும் பல சம்பவங்கள் உனக்குத் தெரியும். அதிலிருந்து நீ இன்னும் கதைகள் எழுதலாம்” என்று சொல்லி முடித்தார்.

அவர் பேச்சின் கோர்வையில் நான் ஒரு அர்ஜுன மயக்கத்துக்குப் போயிருந்தேன். அதிலிருந்து திடுக்கிட்டு விழித்தேன். “நீ நல்லா வருவ.. ஆனா ஒண்ணு. நீ எழுதின கதைகள்ல “ஒரு சொல் கொல்லும்”ன்னு ஒரு கதை இருக்கே... அத மேற்கொண்டு எழுத முயற்சி பண்ணாதே” என்றார்.

என் கதை அவருக்கு எப்படித் தெரியும் என்ற ஆச்சர்யங்களை கடந்த நிலையில் இருந்த நான் ஏன் என்று மட்டும் கேட்டேன்.

“அந்த சந்திரசேகரன் கொஞ்சம் சரியில்லை. நீ எழுதின கதைல மட்டுமே அவன் ரெண்டு கொலை பண்ணிட்டான். அப்புறம் நீ வேற கதைகள்ல முழுகிட்டதால உனக்குத் தெரியல. விழுப்புரம் மாவட்டத்துல மட்டும் அவன் அப்புறமா ஏழு கொலைகள் பண்ணிட்டான். நீ இனிமே அவனப் பத்தி எழுதினா அவன் மாட்டிக்கற மாதிரி எழுதிடுவ. அதனால அவனுக்கு உன்கிட்ட ஒரு பயம் வெறுப்பு கோபம் எல்லாம் இருக்கு. அதுனால ஜாக்கிரதை”

நான் அதிர்ச்சியில்  உறைந்தேன். “என்ன உளர்றீங்க? அது வெறும் கதை... அவன் ஒரு கற்பனைப் பாத்திரம். அவன் என்னை எப்படி கொலை செய்ய முடியும்?” என்று கேட்டேன்.

அதற்குப் பதில் சொல்லாமல் எழுந்த அவர் “ உனக்கு என் ஆசிகள்” என்று சொல்லி சட்டென்று என் நெற்றியில் தன் வலது கை கட்டைவிரலை வைத்தார்.

எனக்குச் சுற்றுப்புறம் மறந்தது. திடீரென்று ஒரு மயானத்தில் நின்றது போன்ற ஒரு தனிமை. மயங்கினேன். முகத்தில் திடீரென்று ஒரு மழை. விழித்துப் பார்த்தால் சர்வர் டம்பளர் தண்ணியுடன்.

“சார் சார் என்ன ஆச்சு உங்களுக்கு”

என் கண்கள் சுற்றும் முற்றும் தேடின. சித்தலிங்கம் அங்கே இல்லை. “எங்கே என் கூட இருந்த ஆள்?” என்றேன் சர்வரிடம்.

அவன் என்னை விசித்ரமாகப் பார்த்தான். “உங்களோட யாரும் இல்லையே சார்.. நீங்க ரெண்டு காப்பி கேட்டபோதே யோசிச்சேன்...”

எனக்குச் சட்டென்று எல்லாம் விளங்கியது போல தோன்றியது. ‘வேதாந்தச் சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய் ‘ என்று மனதுள் ஓடியது.

உடனே காப்பிக்குப் பணம் தந்துவிட்டு வீட்டை நோக்கி ஓடினேன். கதவு திறந்து கணினி திறந்து என் ப்ளாக் திறந்து நான் எழுதிய ஒரு கதையைப் படிக்க ஆரம்பித்தேன். இரண்டு முறை படித்ததும் மனதில் ஒரு மின்னல்!
என்ன அதிசயம்! சித்தலிங்கம் சொன்னது போல ஒரு கதைக்கான கரு தோன்றியது. உடனே எழுதினேன்.

அப்புறம் அதை பத்திரிகைக்கு அனுப்பியது அது பிரசுரமானதோ அதற்கு சன்மானம் வந்ததோ உங்களுக்குச் சுவாரசியப்படாது. ஆனால் அதற்குப்பின் என் மூன்று நாவல்களில் இருந்து இன்னும் மூன்று நாவல்கள் பிறந்தது அதிசயம். அதனால் எனக்குப் புகழ் பணம் கிடைத்தது ஆச்சர்யம்.

இப்படிப் போய் கொண்டிருந்த ஒரு நாளில்தான் என் மனதில் அந்த விபரீத எண்ணம் தோன்றியது. என் ப்ளாகை திறந்து நான் எழுதிய ஒரு சொல் கொல்லும் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். கதையை மூன்று நான்கு முறை படித்ததும் ஒரு மின்னல். எனக்குள் ஒரு பயம் மெதுவாக எட்டிப்பார்த்தது. அதை கவனிக்காமல் நான் எழுத ஆரம்பித்தேன். காதுக்குள் “ஜாக்கிரதை” என்றார் சித்தலிங்கம். நான் பொருட்படுத்தவில்லை.

அப்போதுதான் கதவு தட்டப்பட்டது. கதவு தட்டப்பட்டச் சத்தம் கேட்டு மும்முரமாக கதை எழுதிக்கொண்டு இருந்த நான் நிமிர்ந்தேன். “போய்விடு” என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். ஆனால் கதவுக்குப் பின்னால் இருந்தவர் போகவில்லை. அலுத்துக்கொண்டே எழுந்துசென்று கதவைத் திறந்தேன்.

சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர். ரொம்ப பயந்த சுபாவி போன்ற முகம்.

“யாரு வேணும்?”

“ராஜசேகரன்... ராஜ்...”

“நான்தான் ராஜ்.... நீங்க யாரு?”

“ என் பேரு சந்திரசேகரன். விழுப்புரம் பக்கத்துல ஒரு வில்லேஜ்ல பேங்க் மேனஜர்....உங்களைப் பார்க்கலாம்னு...”

“என்ன விஷயமா” என்று கேட்டேன்.

“ஒரு சொல் கொல்லும்” என்றார் மெதுவாக. அதைச் சொல்லும் போதே அவர் முகம் விகாரமாகியது. எனக்குள் சரேலென்று ஒரு குளிர்காற்று பாய்ந்தது.

வீயார்



Thursday, March 2, 2017

எழுதாத காதல் கடிதம்.


அன்புள்ள சாரு,

நான் இதுவரை யாருக்குமே காதல் கடிதம் எழுதியதில்லை. ஒரே ஒரு கடிதம் தவிர. எழுதத்தெரியாது என்பதல்ல. ஒருவேளை ஏடாகூடமாக ஏதாவது எழுதிவிட்டால்? அந்த பயம்தான். அதனால் தான் இப்பக்கூட நான் காகிதத்தில் எழுதாமல் மனதுக்குள்ளே எழுதிக்கொள்கிறேன்.

வடகோவையில் நாங்கள் குடியிருந்த திருவேங்கடம் தெருவில் எங்கள் வீட்டுக்கு எதிர்புறம் இருந்த ஸ்டோர்ஸ் குடியிருப்பில் உங்கள் குடும்பம் குடிவந்தபோது உனக்கு சுமார் பதினைந்து  வயதிருக்குமா? மெலிதான உடல்வாகுடன் நல்ல கலராக இருந்த உன்னைப் பார்த்ததும் எனது பதினேழு வயது மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.

அப்புறம் மெதுமெதுவாக உன்னுடன் பழக ஆரம்பித்தது, ஒவ்வொருநாளும் உன்னைப் பார்ப்பதற்காக தவமிருந்தது, உன்னைக் கண்டால் சந்தோஷித்துப் பொங்கியது என்று அல்மோஸ்ட் இந்தக் கடிதத்தைப் படிப்பவர்களில் பலரும் தத்தம் காதலில் செய்திருப்பார்கள். ஆனால் அந்த சீனுவை ஸ்கூலை விட்டு வெளியேற நான் செய்த சதி போல சிலரே செய்திருப்பார்கள்.

சீனுவை நினைவு இருக்கிறதா சாரு? நல்ல சிவப்பா களையா சின்ன வயசு கமல் மாதிரி இருப்பானே அவன்தான்.  அவனுக்கு உன்மேல் காதல் எதுவும் இல்லை என்பது எனக்குத் தெரியும். ( ஒரு தடவை அவன்கிட்டவே கேட்டிருக்கேன்). ஆனால் நீ அவனை பார்த்தாலே சிரித்துத் சிரித்துப் பேசியது என்னைப் பாடாய் படுத்தியது. அது என்ன, சிவப்பா இருந்தா அழகா? நான் கொஞ்சம் கருப்புத்தான். ஆனா நானும் களையாத்தானே இருக்கேன்? எங்களை எல்லாம் பார்த்தால் காதல் வராதா?

உன்னுடைய இந்த பிஹேவியர் என்னோட படிப்ப பாதிச்சுது. போர்ட் எக்ஸாம் உன்னாலயோ சீனுவாலேயோ பாழாறத நான் விரும்பல. ரொம்பவே யோசிச்சேன். அப்பத்தான் அந்த ஐடியா வந்தது. சீனுவோட கையெழுத்து ரொம்ப சுலபமா காப்பியடிக்கக் கூடியதா இருந்தது கொஞ்சம் உதவியா இருந்தது. சீனு எழுதற மாதிரியே ஒரு லெட்டர். அது லெட்டர் கூட இல்லை.ஒரு வசன கவிதை. உன்னைப் பத்தி. உன் இளமை அழகைப் பத்தி எழுதி அவன் உனக்குக் கொடுத்த ஒரு நோட்ஸ் புத்தகத்துல ஒளிச்சு வெச்சுட்டேன்.

அப்புறம் நீ அழுதுகிட்டே அத உங்க அப்பாகிட்ட காமிச்சதும் அத அவர் விவஸ்தையே இல்லாம நம்ம ஸ்கூல் பிரின்ஸிகிட்ட காமிச்சதும், அவர் சீனுவோட அம்மா அப்பாவைக் கூப்பிட்டு நடந்ததெல்லாம் சொல்லி அவனுக்கு டிசி கொடுத்து அனுப்பிச்சதும்தான் அந்தத் தெருவுக்கேத் தெரியுமே!

அன்னிக்கு சீனுவோட அப்பா அவன பெல்டால விளாசினப்ப எனக்கு உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஒரு எதிரி ஒழிஞ்சான்னு. நான் பைத்தியம்னு நீ நினைக்காதே சாரு. காதல்ல எல்லாமே நியாயம்தான்.

அந்த நியாயம்தான் உன்னோட அத்தை பையன் சேகரோட காலை உடைக்கிறதுக்கு எனக்கு தெம்பும் அமைதியும் தந்தது.

ஆனா ஒண்ணு அவன் கால ஒடச்சப்போ எனக்கு ரொம்பவுமே பாவமாத்தான் இருந்துது. சீனு கேஸ் மாதிரி இல்ல. அப்ப நீ காலேஜ் ஜாயின் பண்ணியிருந்த. உங்க அப்பாவுக்கு திடீர்னு ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக். நான் கூட லீவு போட்டுட்டு ஹாஸ்பிடல் வந்திருந்தேனே! ஆனா அது உங்க அப்பாவுக்காக இல்ல. உன்கூட, உன் பக்கத்துல இருக்கலாமேன்னு தான்.

ஆனா அந்த ஆசையிலேயும் மண் விழுந்தது. உங்க சொந்த ஊரிலேர்ந்து சேகரும் அவன் அம்மாவும் உன் அப்பாவப் பார்க்க வந்திருந்தாங்க. உங்க அத்தைக்கு உங்க அப்பா மேல ரொம்பத்தான் பாசம். அதுனால அவரப் பாத்துக்க சேகர உங்க வீட்டிலேயே விட்டுட்டுப் போறேன்னு சொன்னாங்க.

அத்தோட விட்டாங்களா? அது சேகரோட கடமையா. நாளைக்கு சாருவக் கட்டிக்கப் போறவன் அப்படி இப்படின்னு உன் அப்பா மனசக் கலச்சாங்க. ஏற்கனவே படுத்தப் படுக்கையா இருந்த உங்க அப்பா ‘சேகர் என் பொண்ணக் கட்டிப்பானாடி?” என்று உணர்ச்சிவசப்பட்டு கிட்டத்தட்ட கல்யாணத்துக்கு நாள் குறிக்கிற லெவலுக்கு போனார்.

எனக்குப் பயமா போயிடிச்சு. ரொம்பவே யோசிச்சுப் பாத்தப்ப சேகர ‘கவனிக்கறதத்’ தவிர வேற வழியில்லைன்னு தோணிச்சு.

உனக்குத்தான் தெரியுமே, நம்ம திருவேங்கடம் ரோடு எண்டுல இருந்த ரயில் பாதையோரமா எப்பவும் இருட்டா இருக்கும். சேகர எப்படியோ கன்வின்ஸ் செஞ்சு அங்க கூட்டிக்கிட்டு போனேன். ‘பயமாயிருக்கு வெங்கட்’ என்றான் இருட்டைப் பார்த்து.

‘சேகர்! எனக்கு உன்கிட்ட பர்சனல் விரோதம் எதுவும் இல்லை. ஆனா சாரு என்னவள். உன்கிட்ட man-to-man பேசினாலும் நீ கேக்க மாட்ட. ஏன்னா சாருவோட இளமையும் அழகும் அப்படி. மேலும், எல்லார் முன்னாடியும் ரசாபாசமாகிடும். அதனால எனக்கு வேற வழி தெரியல்ல. மன்னிச்சுக்கோ’ என்று சொல்லி அவன் எதிர்பார்க்கும் முன்னமே அவனக் கீழே தள்ளினேன். அவன் நெஞ்சுல கால அழுத்தி வச்சு, மத்தியான்னமே அங்க ஒளிச்சு வச்சிருந்த இரும்புக் கழிய எடுத்து ஒரு விதமான குறியோட அவன் முட்டில அடிச்சேன். அவன் முட்டி ஒடஞ்ச சத்தம் இன்னும் என் காதுல இருக்கு.

சேகர் ஜன்ம ஜன்மாந்திர பயத்த அந்த ஒரு சில நிமிஷங்கள்ல பட்டான். அவன் வாயத் தொறந்து ஏதோ சொல்ல நெனச்சான். வெறும் காத்து சத்தம் தான் வந்துது. நான் நெஞ்சுல வச்ச கால எடுத்து அவன் முகத்துல குத்துமதிப்பா அவன் வாய ஒரு உதைவிட்டேன். மினிமம் ரெண்டு பல்லு ஒடஞ்சுது.  “இப்பவே ஊரப் பாக்க ஓடிடு. நாளைக்கு இங்க இருந்தீன்னா உனக்குப் பாடைதான். இந்தக் ஊரு போக பணம்’ என்று அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டு அங்கிருந்து போயிட்டேன்.

மறுநாள் சேகர் இல்லை. ஒரு விதமான அலாதி நிம்மதியோட உன்னோட பழக ஆரம்பிச்சேன். என்னோட தியாகங்கள் புரியாம நீ பட்டும் படாமதான் பழகினாய்.  அப்புறம் எனக்குச் சென்னையில் வேலை கிடைத்து நான் அங்கிருந்து வந்திட்டேன்.  எனக்கு உள்ளூர பயம்தான். எங்க நம்மள விட்டு விலகிடுவாளோன்னு. சரி எப்படியும் கெஞ்சியாவது கோவை மாற்றல் வாங்கிட வேணுமின்னு துடிச்சேன்.  அதுவும் வந்துது. ஒரு பத்து நாளுக்குள்ள ஜாயின் பண்ணனும்

அப்பத்தான் ஒரு இடி விழுந்துது. நான் ஒருத்தன் உனக்காகக் காத்திருக்கும் போது வேற இடத்துல உனக்குக் கல்யாணம் பண்ணி வக்கிறதுல உங்க அப்பனுக்கு என்னடி அவ்ளோ கொலவெறி? அதுலேயும் “வெங்கட், சாருவுக்குப் பாத்திருக்கிற மாப்பிள்ளை சென்னைல தான் வேலையாயிருக்கான். கொஞ்சம் முடிஞ்சா அவனப் பத்தி விசாரியேன்’ என்று ஒரு கடிதம் வேறு எழுதினான் உங்கப்பன். எனக்கு அன்னிக்கு வந்த கோவம் சொல்லி முடியாது.

கோவம் வந்தா ஐடியாவும் வரும்தானே? வந்துது. கல்யாண ஜாதகம் கருமாதி ஜாதகமானது. அவன் ரூமிலேயே வச்சு அவன் கதைய முடிச்சப்பத்தான் தோணிச்சு, கொலை பண்றதுலேயும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது.

இப்பக்கூடப் பாரு. ஜாயின் பண்ண நாள் நெருங்குதுன்னு கோயம்புத்தூர் கிளம்பிட்டேன். வேலைல ஜாயின் செஞ்சதுக்கு அப்புறம் முதல் வேலை உங்கப்பனப் பாத்து உன்னப் பொண்ணு கேக்கறது. சரின்னுதான் சொல்லுவான். சொல்ல வப்பேன். எனக்கு உங்கப்பனப் பத்தியோ அம்மாவப் பத்தியோ கவல கிடையாது. உன்னப் பத்தித்தான் கவல. எங்கே நீ வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு.

எதுக்கும் இருக்கட்டும்னு நான் கஷ்டப்பட்டு இருட்டுச் சந்துல எல்லாம் அலஞ்சு திரிஞ்சு வாங்கி வச்ச சயனைடுக் குடுவை பத்திரமா இருக்கான்னு சூட்கேசுள்ள கைவிட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.


அது பத்திரமாத் தான் இருந்துது. ஆனா உங்க வீட்டுல யார் உயிரு பத்திரமா இருக்கும்ன்னுதான் தெரில.