Friday, August 29, 2014

பஸ்ஸில் ஒரு குற்றம்.


பஸ் தேனாம்பேட்டையை நெருங்கும் போது நிறைந்து விட்டது. சரியாக நிற்கக் கூட இடமில்லை. ஒருத்தர் மூச்சுக்காற்று மற்றவர் மேல் படுமளவுக்கு நெருக்கம்.

எனக்கு என் பர்ஸைப் பற்றி கவலை. பத்தாவது முறையாகப் பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். பத்திராமாய் இருந்தது.

நீங்கள் சென்னைவாசி என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். தேனாம்பேட்டை அருகில் பிக் பாக்கெட் ஆவது தினசரி நடக்கும் ஒரு சம்பவம். அது என்னவோ தெரியவில்லை. எல்லா பிக் பாக்கெட்டுகளுக்கும் அது ஒரு சுவர்க்கம். அந்தவழியாகப் போகும் எல்லா பஸ்களிலும் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பது ஒரு காரணமோ என்னவோ! இருக்கலாம்.

டிவிஎஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை முடித்தப் பிறகு தான் பாக்கி வேலையெல்லாம். இப்படி என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்த போதுதான்
என் கண்கள் அவன் மீது விழுந்தன.

முப்பதுகளின் முடிவில் இருப்பான். நல்ல கலர். டீசெண்டாக டிரஸ் செய்திருந்தான். தோளில் ஒரு பேக். ஆபீஸ் போகிறான் போலும். பாவம் ஆள் வளமாகத் தான் இருக்கிறான். ஏன் ஒரு டூ வீலர் வைத்துக்கொள்ளவில்லை என்று யோசனை ஓடியது.

அதற்குப் பதில் சொல்வது போல அவனது அடுத்த நடவடிக்கை இருந்தது. தன் பக்கத்தில் நின்றிருந்த ஒரு நடுத்தர வயது மனிதரின் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்தான்! பாவி! பிக் பாக்கெட்டா இவன்? அதிலிருந்த பணத்தை எடுத்து விட்டு அதை யாரும் அறியாவண்ணம் கீழே நழுவ விட்டான். அப்புறம் அந்தப் பணத்தை யாருக்கோ பாஸ் செய்தான். யாருக்குச் செய்தான் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. பாஸ் செய்துவிட்டுத் திரும்பியவன் என்னைப் பார்த்து விட்டான்.

தெய்வமே! கண்ணில் ஒரு கோபத்தோடு என்னைப் பார்த்தான். பின்னர் ஏதோ முடிவு செய்தவன் போல என்னை நோக்கி வர முயன்றான். கூட்டம் அதிகம் என்பதால் அவ்வளவு சுலபமாக வர முடியவில்லை.

நெருக்கித் தள்ளிக் கொண்டு அவன் வர வர நான் ஒவ்வொரு அடியாக பின்னோக்கி நகர்ந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் போக முடியவில்லை.

அவன் என்னை நெருங்கி விட்டான். எனக்கும் அவனுக்கும் இடையில் ஒரு ஆள் மட்டும் தான்.

அங்கிருந்து என்னைப் பார்த்தான். நான் அவன் பார்வையைத் தவிர்த்தேன். “.... பொளந்துடுவேன்” என்று அவன் உதடுகள் அசைந்தது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. தலையைத் திருப்பிக் கொண்டேன். சரி நாம் அந்தப் பக்கம் பார்த்தால் இவனால் ஆபத்து இல்லை என்று போய்விடுவான் என்று நினைத்தேன். ஒரு இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் பார்த்தால் அவன் அங்கே இல்லை.

அப்போது தான் என் பின்னால் முதுகில் ஏதோ குத்துவது போல் இருந்தது. திரும்பிப் பார்க்க முயன்றபோது “ டேய்! திரும்பினா போட்டுத் தள்ளிருவேன்! கம்முனு ஒன் பர்ஸ தா. இல்லேனா இந்தக் கத்திய சொருவிடுவேன்” என்று ஒரு குரல் கேட்டது.

ஐயோ! என் பின்னாலேயே வந்துவிட்டானா? பயத்தில் முகத்தில் வேர்வை பெருக்கெடுத்தது.

“மாட்டேன்” என்றேன்.

“சாவு கிராக்கி! செத்துருவே” என்றான்.

கொஞ்சம் யோசித்தபோது ப்ளேடால் என் கையில் சிறிது போல கீறினான். ரத்தம் ஒரு கோடாக வந்தது. இனிமேல் யோசித்தால் நல்லதில்லை என்று அவனுக்கு என் பர்ஸை எடுத்துக் கொடுத்தேன்.

அதைக் கையில் வாங்கிய அவன் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, என்னைத் தள்ளி வழி ஏற்படுத்திக்கொண்டு வாசல் அருகில் சென்றான். பஸ் ஆனந்த் சிக்னலில் நின்றது. அதைப் பயன்படுத்திக்கொண்டு நிறைய பேர் இறங்கினார்கள். அவர்களோடு இவனும் இறங்கி மாயமானான்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் டிவிஎஸ் ஸ்டாப். நான் இறங்கினேன். என்னோடு இன்னும் பலரும் இறங்கினார்கள். கடைசியாக ஒரு பெண், இறங்கினாள். இறங்கியவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். என்னைக் கண்டதும் என் அருகில் வந்தாள். புன்னகைத்தாள்.

“என்ன மாமா? ஒன் டம்மி பர்ஸ லவட்டிட்டானா? இது என்ன கைல ரத்தம்?” என்று கைப் பிடித்துப் பார்த்தாள்.

“ஒண்ணும் பெரிசா இல்ல சரோ! ஆமாம், ஏதும் தேறிச்சா?”

“அவன் ஜோடி கிட்டேர்ந்து நான் அடிச்சிட்டேன். பத்து ரூவா தேறும்” என்று சிரித்தாள்.

“சரோவா கொக்கா?” என்ற என்னைப் பார்த்து செக்சியான குரலில், “இந்தப் பேச்செல்லாம் வேணாம். வாய் நமநமங்குது ஒரு பில்டரு குடு” என்று சொல்லி, சுவாதீனத்துடன் என் ஷர்ட் பாக்கெட்டில் கை விட்டாள்.  

No comments: