Sunday, January 4, 2026

உன்னை அறிந்தால்

 உன்னை அறிந்தால்


சமையலறையில் ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரின் சத்தம், அந்த ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதின் அமைதியை ஒரு சீரான தாளத்துடன் கிழித்துக் கொண்டிருந்தது.


பிரியா தேங்காயைத் துருவிக் கொண்டிருந்தாள். நாற்பத்திரண்டு வயதான அவளுக்கு, தன்  வாழ்க்கையும் அந்த கிரைண்டரை போலவே தோன்றியது. ஒரே வட்டத்தில் சுழலும் வாழ்க்கை. அதன் ‘சுவிட்ச்’ அவள் கையில் இல்லை.


ஹாலில் ரவி ஹிந்து பேப்பரை விரித்து வைத்துக் கொண்டிருந்தான். அவன் அருகே காபி இருந்தது. சரியாக அறுபத்தி ஐந்து டிகிரி சூடு. அதிகம் சுடவும் கூடாது, ஆறிப்போகவும் கூடாது. இது அவனது சாம்ராஜ்யம். அவன் நினைத்தால்தான் அந்தப் பக்கம் திரும்ப முடியும்.


"ரவி..." கையை புடவைத் தலைப்பில் துடைத்துக்கொண்டே ஹால் வாசலுக்கு வந்தாள் பிரியா. 


"சுமதி போன் பண்ணினாள். அடையார் சிக்னல் கிட்ட ஒரு இடம் காலியா இருக்காம். நாம் பேசிக்கொண்டிருந்தோமே அந்த புட்டிக் (Boutique) ஆரம்பிக்க... ஓனர் அட்வான்ஸ் தொகையை குறைச்சிருக்காராம்."


ரவி பேப்பரிலிருந்து தலையை நிமிர்த்தவில்லை. பங்குச்சந்தை நிலவரத்தை படித்து முடித்துவிட்டு, ஒரு மிடறு காபியை குடித்தான். அந்த மௌனம் பிரியாவுக்குப் பழகிப்போன ஒன்று.


"பிரியா," அவனது குரலில் ஒரு நிதானம் இருந்தது. எல்லாம் தெரிந்த ஒரு பெரியவர், விவரம் அறியாத குழந்தைக்குச் சொல்லும் தொனி அது. "நாம இதை ஏற்கனவே பேசிட்டோம். அடையார் ரொம்ப தூரம். டிராபிக் பத்தி உனக்குத் தெரியாதா? அதுவுமில்லாம அடுத்த மாசம் அம்மாவுக்கு 

மூட்டு ஆபரேஷன் இருக்கு. வீட்ட யாரு கவனிச்சுப்பா? பிசினஸ்ங்கிறது பொழுதுபோக்கு இல்ல. அதுக்கு இருபத்தி நாலு மணிநேர உழைப்பு தேவை. உன்னால முடியாது."


பிரியாவின் நெஞ்சில் அந்தப் பழைய பாரம் ஏறியது. அது கோபம் மட்டும் அல்ல; விசித்திரமான ஒரு ஆறுதலும் கலந்த உணர்வு.


"என்னால சமாளிக்க முடியும் ரவி. சுமதி ஈவினிங் ஷிப்ட் பார்த்துப்பா. நான் ஃபேஷன் டிசைனிங் படிச்சுட்டு சும்மா இருக்கேன். எனக்கு மூச்சுத் திணறற மாதிரி இருக்கு ரவி," அவள் குரல் தழுதழுத்தது.


ரவி பெருமூச்சு விட்டான். பேப்பரை மடித்து டீப்பாய் மீது வைத்தான். "மூச்சுத் திணறுதா? டிரைவர், வேலைக்காரி, மயிலாப்பூர்ல சொந்த வீடு... உனக்கு டிராபிக்ல கஷ்டப்பட வேண்டாம், வாடகைக்கு அலைய வேண்டாம்னுதான் நான் பனிரெண்டு மணிநேரம் உழைக்கிறேன். எல்லாம் உன் நல்லதுக்குத்தான் பிரியா. ஏன் உனக்கு இது புரியல?"


பிரியா சமையலறைக்குத் திரும்பினாள். அவள் கண்கள் லங்கியிருந்தன. ஆனால் மனதின் ஒரு ஓரத்தில், ஒரு விசித்திரமான திருப்தி இருந்தது. "நான் முயற்சி செய்தேன், ஆனால் அவர் தடுத்துவிட்டார்" என்கிற ஒரு கவசத்தை அவள் மாட்டிக்கொண்டாள்.


கிரைண்டரின் சத்தத்தோடு போட்டியிடும் வகையில் தனக்குள் முணுமுணுத்தாள். "இவர் மட்டும் இல்லையென்றால்... இவருடைய இந்த பிடிவாதம் மட்டும் இல்லையென்றால், நான் இந்நேரம் ஒரு பெரிய ஃபேஷன் டிசைனராக ஆகியிருப்பேன். என் சிறகுகளை இவர்தான் வெட்டுகிறார்."


கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அந்த வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதை இது. இதில் ரவி வில்லன், அவள் தியாகி. அந்த வேடம் அவளுக்குப் பிடித்திருந்தது.



மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு செவ்வாய்க்கிழமை அந்த மாற்றம் நிகழ்ந்தது.


வழக்கத்திற்கு மாறாக ரவி மதியமே வீடு திரும்பினான். காபி கேட்கவில்லை. சோபாவில் அமர்ந்து டையை தளர்த்திக்கொண்டான். அவன் முகத்தில் இதுவரை பிரியா பார்த்திராத ஒரு சோர்வு இருந்தது. அதிகாரத்தின் சோர்வு அல்ல, இருப்பின் சோர்வு.


"நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்," என்றான் ரவி, சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி.


கரண்டி பிரியாவின் கையிலிருந்து நழுவியது. "என்னது? திடீரென்று?"


"ஆபீஸில் லேசான நெஞ்சுவலி வந்தது. ஸ்ட்ரெஸ் தான் காரணம்னு டாக்டர் சொல்லிட்டார். இப்படியே போனா இன்னும் அஞ்சு வருஷத்துல நான் காலி. நமக்குத் தேவையான சேவிங்ஸ் இருக்கு. அது போதும்." அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் இருந்த அந்த அதிகாரம் மறைந்து, ஒரு நிம்மதி குடிகொண்டிருந்தது.


"இப்போ என்ன செய்யப் போறீங்க?" பிரியா திகைப்புடன் கேட்டாள்.


ரவி புன்னகைத்தான். "நான் ஓய்வெடுக்கப் போகிறேன். இத்தனை வருஷம் ஓடினது போதும். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றப் போகிறேன். அப்புறம் நீ..." அவன் டைனிங் டேபிளில் தூசி படிந்திருந்த அவளது ஸ்கெட்ச் நோட்டுகளைக் காட்டினான். "நீ அந்த புட்டிக்கை ஆரம்பி. 

நாளைக்கே அடையார் போ. அட்வான்ஸ் கொடுத்துடு."


அந்த அறையின் காற்று மாறியது. இத்தனை வருடங்களாகத் தன்னை அழுத்தி வைத்திருந்ததாக பிரியா நினைத்த அந்தப் பாரம், திடீரென மறைந்துவிட்டது.


"உண்மையாவா?"


"உண்மையாகத்தான். இத்தனை நாள் என் பயத்தினால் உன்னைத் தடுத்துட்டேன். இனி எனக்கு அந்த அதிகாரம் வேண்டாம். நீ சுதந்திரப் பறவை. போ... ஜெயித்து வா."


கூண்டுத் திறக்கப்பட்டது. காவல் காத்துக்கொண்டிருந்த காவலாளியும் விலகிவிட்டான்.


மறுநாள் காலை.


பிரியா பட்டுப்புடவை கட்டிக்கொண்டு காரில் ஏறினாள். அடையார் சிக்னல் நெருங்க நெருங்க அவளுக்குள் உதறல் எடுத்தது. வெளியே வெயில் கொளுத்தியது. இரைச்சலான சாலைகள். இதுவரை இந்த உலகத்தை காரின் கண்ணாடியின் வழியாக மட்டுமே பார்த்துப் பழகியவள் அவள்.


திடீரென்று ஒரு  எண்ணம் அவளைத் தாக்கியது.


*யாராவது என் டிசைன்களை வாங்குவார்களா? சுமதி என்னை ஏமாற்றிவிட்டால்? எனக்குக் கணக்கு வழக்கோ, வரியை பற்றியோ எதுவுமே தெரியாதே! இவ்வளவு நாள் ரவிதான் எல்லாவற்றையும் 

பார்த்துக்கொண்டார். ஒருவேளை நான் பணத்தை இழந்தால்? என் தோல்வியைக் கண்டு உலகம் சிரிக்காதா? ரவி என்ன நினைப்பார்?*


அவள் நெஞ்சு படபடத்தது. ரவியிடம் சண்டை போடும்போது கூட இப்படித் துடித்ததில்லை. அந்தச் சண்டைகளில் ஒரு பாதுகாப்பு இருந்தது. "அவர் தடுக்கிறார், அதனால் நான் செய்யவில்லை" என்று சொல்வது எவ்வளவு வசதியாக இருந்தது! இத்தனை காலமும் தன் திறமையை ஒரு கற்பனை வானத்தில் பறக்கவிட்டிருந்தாள். அங்கே அவள் ஒரு வெற்றியாளர்—

ஏனென்றால் அந்தத் திறமை ஒருபோதும் பரீட்சிக்கப்படவில்லை.


*ஆனால் இப்போது? தடுப்பதற்கு யாரும் இல்லையே! அந்தப் பெரிய பூட்டு இப்போது திறந்திருக்கிறது. ஒருவேளை நான் வெளியே போய் சிறகுகளை விரிக்கும்போது, என்னால் பறக்க முடியாமல் 

போனால்? விழுந்து அடிபட்டால், பழிபோட ரவி இல்லையே! என் தோல்விக்கு நானே பொறுப்பாகி விடுவேனே! அந்தப் பாரத்தை விட, இந்தச் சிறையே மேல் என்று தோன்றுகிறதே...*


"மேடம், அடையார் வந்தாச்சு," டிரைவர் சொன்னார்.பிரியா வெளியே பார்த்தாள். அந்தக் கடைத் தெரியத் தொடங்கியது.


"வண்டியைத் திருப்புங்க," பிரியா உரத்தக் குரலில் சொன்னாள்.


"மேடம்?"


"வண்டியைத் திருப்புங்கன்னு சொன்னேன்! முக்கியமான டாகுமெண்ட்ஸை மறந்துட்டேன். அதுவுமில்லாம தலை வலிக்குது. வீட்டுக்குப் போங்க."



வீட்டிற்குள் நுழைந்தபோது, ரவி பால்கனியில் துளசிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான்.


"அட, இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? கையெழுத்து போட்டாச்சா?"


பிரியா சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள். அவளுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அவசரமாக ஒரு காரணத்தைத் தேடினாள்.


"அந்த இடம் போயிடுச்சாம் ரவி," அவள் பொய் சொன்னாள். குரலில் நடுக்கம் இருந்தது. "அதுவுமில்லாம... எனக்கு யோசனையா இருக்கு. உங்களுக்கு உடம்பு சரியில்லாதப்போ நான் பாட்டுக்கு பிசினஸ்னு வெளிய சுத்த முடியுமா? உங்களை யார் பார்த்துப்பா? அது சுயநலம்."


ரவி அவளை உற்றுப் பார்த்தான். கையில் இருந்த பூவாளியைக் கீழே வைத்தான். ஹாலுக்கு வந்து அவளுக்கு எதிரே அமர்ந்தான்.


அவன் முகத்தில் கோபமில்லை. ஆனால், ஒரு மெல்லிய சோகம் இருந்தது.


"பிரியா," அவன் மெதுவாகச் சொன்னான். "நான் நல்லா இருக்கேன். எனக்காக நீ வீட்ல இருக்க வேண்டாம்."


"இல்ல ரவி, அந்த டிராபிக்... என்னால தனியா..."


"நிறுத்து," ரவி இடைமறித்தான். அவன் குரல் மென்மையாக இருந்தாலும் உறுதியாக இருந்தது. 


"நீ டிராஃபிக்கை பார்த்து பயப்படல பிரியா. நீ தோற்றுப் போவேன்னு பயப்படுற."


அங்கு நிலவிய அமைதி, கிரைண்டர் சத்தத்தை விடப் பயங்கரமாக இருந்தது.


"இருபது வருஷமா, உன் கனவு நிறைவேறாததுக்கு என்னைக் காரணம் காட்டிட்டு இருந்த. நானும் 'நான் தான் இந்த வீட்டின் தலைவன்'ங்கிற மிதப்புல உன்னைத் தடுத்துக்கிட்டே இருந்தேன். அது எனக்கும் வசதியா இருந்தது, உனக்கும் வசதியா இருந்தது. நீ செய்யாத காரியங்களுக்கு என்னைக் காரணம் காட்டினாய். நான், என் அதிகாரத்தைக் காட்ட 

உன்னைப் பயன்படுத்தினேன்."


பிரியா தலை குனிந்தாள். கண்கள் கலங்கின. தான் கட்டி வைத்திருந்த பிம்பம் உடைவதை அவளால் தாங்க முடியவில்லை.


"ஆனா இனிமே அந்த விளையாட்டு வேண்டாம்," ரவி தொடர்ந்தான். "நீ அந்த பிசினஸை ஆரம்பிக்கலன்னா, அதுக்குக் காரணம் உன் பயம் தானே தவிர, என் கண்டிப்பு கிடையாது. உன் தோல்விக்கோ வெற்றிக்கோ இனி நீதான் பொறுப்பு. அந்தச் சுமையை இனிமேல் நான் சுமக்க விரும்பல."


பிரியா நடுங்கும் குரலில் கேட்டாள். "எனக்குத் தெரியல ரவி... என்னால முடியுமான்னு தெரியல. நான் இதுவரைக்கும் தனியா எதையும் செஞ்சதில்ல."


"எனக்குப் புரியுது," ரவி அவள் கையைப் பற்றினான். "இது பயமாத்தான் இருக்கும். சில சமயம் தோல்வியும் வரலாம். நஷ்டம் வரலாம். ஆனா பரவாயில்லை. நிழல்லயே சண்டை போட்டு ஜெயிக்கிறத விட, வெயில்ல நின்னு தோற்றுப் போறது எவ்வளவோ மேல்."


அவன் கையை அழுத்தியது ஒரு கணவன் என்பதாக அல்ல, ஒரு தோழனாக.


"நாளைக்கு வேற கடை பார்க்கலாம். சின்னதா ஆரம்பி. ஆனா, எனக்காகன்னு சொல்லி வீட்ல உக்காராதே."


பிரியா நிமிர்ந்து பார்த்தாள். ரவியின் கண்களில் இப்போது அதிகாரம் இல்லை. ஒரு தோழனின் நம்பிக்கை இருந்தது. இத்தனை வருடம் தான் ஒளிந்து கொண்டிருந்த அந்தப் பாதுகாப்பான குகை, உண்மையில் ஒரு சிறைச்சாலை என்பதை உணர்ந்தாள். ஆனால் சாவியை ரவி அவளிடமே கொடுத்துவிட்டான்.


"நாளைக்கு... மயிலாப்பூரிலேயே ஒரு இடம் பார்க்கலாம்," என்றாள் பிரியா மெல்லிய குரலில்.


ரவி புன்னகைத்துக்கொண்டே எழுந்து சமையலறைக்குச் சென்றான். "சரி, இன்னைக்கு காபி நான் போடறேன். எத்தனை டிகிரி சூடு வேணும்?"


சமையலறையிலிருந்து சிரிப்பொலி மெலிதாகக் கேட்டது. கிரைண்டர் ஓடவில்லை. ஆனால் வாழ்க்கை, இப்போதுதான் நகரத் தொடங்கியிருந்தது.


வீயார் 

No comments: