Sunday, February 16, 2014

டோலி


டோலியா? என்னடா வம்பு இது? இந்தமாதிரி தான் மாதா தரிசனம் பண்ண முடியும்னு தெரிஞ்சிருந்தா பேசாமா சென்னை திரும்பிப் போயிருக்கலாமே? இந்த தர்மசங்கடத்திலிருந்து தப்பித்திருக்கலாமே? என்று என் மனம் சொன்னது. இரண்டு நாட்கள் முன்னர் நடந்த சம்பவம் மனதில் ஊஞ்சலாடியது.

கரோல் பாக் வரை ஒரு வேலையாக மனைவி  சுஜாதாவுடன் சென்றேன். நல்ல வெய்யில். எல்லாம் எங்கள் தலையில். ஒரு கட்டத்தில் வெப்பம் தாளாது மயங்கி கிழே விழுந்து விட்டேன். நினைவு தப்பி விட்டது. (இதெல்லாம் அப்புறம் சுஜா சொன்னது). போதாதற்கு  தலையில் ஒரு மாங்காய் அளவுக்கு வீக்கம். மிகுந்த தைரியசாலியான சுஜாவையே உலுக்கி வைத்து விட்டது. உடனே என் மன்னி, மற்றும் என் அண்ணன் மகன் துணையுடன் என்னை ஒரு ஆசுபத்திரியில் சேர்த்தாள். தில்லியில் என்னுடன் பணியாற்றிய சக ஊழியர் என் உடன் பிறவா சகோதரன் பவன் குமார் கூடவே இருந்ததது  சுஜாவுக்கு சற்று தைரியமாக இருந்தது. அன்றிரவு ஜம்மு போக வேண்டிய பயணம் தப்பியது. ஆறு மாத கனவாக இருந்த வைஷ்ணோ தேவி பயணம் கனவாகவே இருந்து விடுமா? அன்னையிடமிருந்து அழைப்பு வரவில்லையா? மனம் கதறியது. குழம்பியது. கண்ணீர் பெருகியது.

CT ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன் முடிவு வருவதற்குள் என் மீது அன்பு வைத்த நெஞ்சங்கள் நூறு முறை செத்து பிழைத்தன. என் உடன் பிறவா சகோதரி லக்ஷ்மி (அவர்கள் குடும்பமும் ஜம்மு வந்திருந்தது) ரிப்போர்ட் ஒன்றுமில்லை என்று வருவதற்காக.(தன் உடல் உபாதைகளை மறந்து) பனிரெண்டு கிலோ மீட்டரும் நடந்தே வருவதாக வேண்டி கொண்டாள். என் மைத்துனர்கள் இருவரின் கண்ணீர் கதறல்கள் என் நெஞ்சை அறுத்தன. என் மன்னி மற்றும் என் அண்ணன் மகன் முகமும பயத்தில் உறைந்திருந்தது. அனைவரின் அன்பும் அன்னையின் அழைப்பும் சேர்ந்து ரிப்போர்ட் ஒன்றுமில்லை என்று வந்தது. நான் புதியதாக பிறந்தது போல் உணர்ந்தேன். உடனடியாக மன்னி உதவியுடன் தில்லியிலிருந்து ஜம்மு விமானத்தில் பதிவு செய்து மறு நாளே ஜம்மு போய் சேர்ந்தேன். அங்கு என் உடன் பிறவா சகோதரி லக்ஷ்மி, சுஜாவின் அக்கா அவள் கணவர் மற்றும் அவர்கள் குழந்தைகளின் அன்பு மழையில் நனைந்தேன்.  அன்று ஓய்வு எடுத்து மறு நாள் கட்டரா போய் சேர்ந்தோம். குதிரை சவாரியை மருத்துவர் வேண்டாம் என்று சொல்லி இருந்ததாலும், நடப்பதற்கு ஆயாசமாக இருந்ததாலும், எனக்கு ஒரு டோலியை ஏற்பாடும் செய்தார்கள். ஆறு கிலோமீட்டர் வரை நான்கு பேர் என்னை தூக்கிச் செல்வார்களாம். அப்போது தான் டோலியா? என்னடா வம்பு இது? இந்தமாதிரி தான் மாதா தரிசனம் பண்ண முடியும்னு தெரிஞ்சிருந்தா பேசாமா சென்னை திரும்பிப் போயிருக்கலாமே? இந்த தர்மசங்கடத்திலிருந்து தப்பித்திருக்கலாமே? என்று என் மனம் சொன்னது.

வேறு வழியில்லாமல் டோலியில் அமர்ந்து பயணம் துவங்கினேன். ‘ஜெய் மாதா தீ ‘ என்ற சப்தம் அந்த மலையையே நிறைத்தாலும் என் மனம் என்னமோ கனத்தது. மனிதன் மனிதனை சுமப்பதா? என்ன அநியாயம்? முள் மேல் அமர்ந்தது போல உணர்தேன் நெளிந்தேன் . என் சுமை அங்கும் இங்கும் நகர்வது உணர்ந்து முன்னால் இருந்த இருவரில் ஒருவர் ‘என்ன ஆச்சு பாபுஜி ? (ஹிந்தியில் தான்) என்று கேட்க, நான் என் மனக்குமுறலைச் சொன்னேன்.

டோலியை சற்று தூரம் சென்று பின்னர் இறக்கி வைத்தார்கள். முகத்தில் வழிந்த வியர்வையை மேல் துண்டால் துடைத்துக் கொண்டுவிட்டு என்னைப்பார்த்து அவர் சொன்னார் “ பாபுஜி, என் குடும்பம் பெருசு. எனக்கே மூன்று குழந்தைகள். இதில் போன மாதம் என் தம்பி ஒரு விபத்தில் இறந்து போக, அவன் குடும்ப பராமரிப்பும் என் கடமையானது. அவன் மனைவி, மற்றும் அவன் இரு குழந்தைகளும் என் குடும்பத்துடன் தான் வசிக்கிறார்கள். என்னைப் போலவே மற்ற பேர்களுக்கும் அவரர் பிரச்சனைகள். இத்தனை சுமைகளை சுமக்கும் எங்களுக்கு உங்கள் சுமை ஒரு சுமையே இல்லை.  உங்களைப் போன்றவர்களை அண்டியே எங்கள் வாழ்க்கை ஓடுகிறது. இதைப் பற்றியெல்லாம் யோசித்துக் குழம்பாமல் தயவு செய்து வசதியாக உட்கார்ந்து வாருங்கள்” என்று சொன்னார்.

அவர் சொன்னதை கேட்டு நான் பிரமித்தேன். “ ஜெய் மாதா தீ” என்று என்னையும் அறியாமல் என் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன. தெளிந்த மனதுடன் டோலியில் ஏறி உட்கார்ந்தேன். மனம் லேசாகி இருந்தது. டோலியை தூக்கிய பின் அவர் ஒரு முறை சடக்கென்று என்னை திரும்பிப் பார்த்தார். ஆச்சரியமாக.

லேசானாது என் மனசா? இல்லை என் உடலா?

“ஜெய் மாதா தீ”




2 comments:

silverfox said...

I like this story from a spiritual point of view. Real nice!

Sandyshank said...

ஜய் மாதா தி உங்களை போலவே நானும் நினைத்தேன் ஆனால் நாங்கள் குதிரை சவாரி சேய்தோம்.