Wednesday, August 13, 2014

ஞானம்


அந்தப் பழைய எட்டுக்கட்டு வீட்டின் முன் கட்டில் பகவத் கீதை சொற்பொழிவு ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது. சற்று தலையைக் குனிந்து இடித்துக் கொள்ளாமல் உள்ளே சென்றால் பெரிய கூடம். அதன்  நடுவில் தொங்கிக்கொண்டிருந்த ஊஞ்சலில் தாராளமாக இரண்டு பேர் படுத்துக்கொள்ளலாம்.  இருந்தாலும் அது காலியாகத் தான் காற்றில் லேசாக அசைந்து கொண்டிருந்தது.

லீவுக்காக வந்திருந்த சங்கீதாவின் கண்களில் அந்த ஊஞ்சல் படவில்லை. மாறாக கூடத்தின் ஒரு ஓரத்தில் ஒரு பில் பாயில் படுத்திருந்த ஞானாம்பாள் தான் பட்டாள். பெரிய பெயராக இருப்பதால் இனிமேல் ஞானம் என்று சுருக்கி விடலாம்.

ஞானம் தான் இந்தக் கதையின் கதாநாயகி. 85 வயது. முகத்தின் சுருக்கங்களை அனுபவ ரேகைகள் என்று கொண்டால், அவளை விட அனுபவஸ்தர்களைக் காண்பதரிது.

ஞானம் சங்கீதாவின் தாத்தாவின் பெரியம்மா. கொள்ளுப் பாட்டி என்று சொல்லலாம். ஆனால் அவள் ஞானத்தைப் பாட்டி என்று தான் கூப்பிடுவாள்.

பாட்டி! என்ன இங்க படுத்துண்டு இருக்க? ஊஞ்சல்ல படுத்துக்க வேண்டியதுதானே?

குரல் வந்த திசையைக் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தாள் ஞானம். பேரனின் பெண். உங்கப்பனும் என்னப் பாட்டீங்கறான் நீயும் பாட்டீங்கற. வேடிக்கை தான் போ என்று அடிக்கடிச் சொல்லிச் சிரிப்பாள்.

இல்லேடி கொழந்தே! இந்தப் பில்லு பாயுல படுக்கற சொகம் அந்த ஊஞ்சப்பலகால வருமா?

பெளராணிகர்

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேர்ஜுந
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே

(ஆனால் அர்ஜுனா! எவனொருவன் மனதினால் புலன்களை வசப்படுத்திப் பற்றில்லாதவனாக எல்லாப் புலன்களாலும் கர்மயோகத்தைக் கடைப்பிடிக்கிறானோ அவனே சிறந்தவன்.)

என்றார் கணீரென்று.

சங்கீதாவைத் தீர்க்கமாக உற்றுப் பார்த்தாள் ஞானம். இவள் வயது தான் இருக்கும். இல்லை இவளைவிட சின்னவள். பதினாலு பதினைந்து வயதிருக்குமா அப்போது? திடீரென்று கோடியாத்து சாஸ்த்ரிகள் பிள்ளை நாராயணனுக்கும் இவளுக்கும் கல்யாணம் என்றார்கள். சொப்பு வைத்து விளையாடும் வயதில் ஒரு நல்ல நாளில் இவள் கழுத்தில் நாராயணன் தாலி கட்டினனான். டேய்! கழுத்துப் பக்கம் என்னடா பண்ற? விடுறா! என்று இவள் சொல்ல, ஏய்! ஞானம்! கழுத, இனிமேல் இவன வாடா போடான்னு சொல்லக் கூடாது. வாங்கோ போங்கோன்னு தான் சொல்லணும். பேரு சொல்லிக் கூப்பிடக் கூடாது. ஏன்னா! அப்படின்னு தான் கூப்பிடனும். இனிமேல் இவன் உன்னோட ஆம்படையான். தெரிஞ்சுக்கோ என்று அவள் அம்மா அவள் காதுகளில் கிசுகிசுத்தபோது ஞானம் மிரண்டு போனாள். இவனை எதுக்கு நான் மரியாதையோட கூப்பிடணம்? என்று அவள் பிஞ்சு மனதில் எண்ண அலைகள்.

அப்புறம் அவள் வயதுக்கு வந்து இரண்டு மூன்று வருஷங்களுக்குப் பின்னால் அவளை நாராயணனின் வீட்டில் கொண்டு போய் விட்டார்கள். அப்புறம் குடும்பம் கடமைகள் என்று வருடங்கள் உருண்டோடியது. நாராயணனிடமும் அவன் பெற்றோர்களிடமும் அவன் சகோதரர்களிடமும் அவள் அன்பாகத் தான் நடந்து கொண்டாள். தன் அப்பா அம்மாவிடம் எவ்வளவு ஸ்ரத்தையோடு நடந்து கொண்டாளோ அதைவிட ஒரு பங்கு கூடுதலாகவே இவர்களிடம் பக்தி ச்ரத்தையோடு இருந்தாள். அவர்களும் இவளைத் தங்கள் மகளாகவே பாவித்தார்கள்.

முன்கட்டிலிருந்து ரேடியோ

 தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:

(ஆகவே பற்றின்றி எப்பொழும் ஆற்ற வேண்டிய கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிரு. ஏனெனில் பற்றின்றிக் கர்மங்களைச் செய்கின்ற மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.)

என்றது.

இப்படி சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று ஒரு புயல் வீசியது. இன்னதென்று அறியாத ஒரு வியாதியில் விழுந்த நாராயணன் மூன்று நாட்களாகியும் ஜுரம் குறையாமல் இறந்து போனான். அந்தத் துக்கத்தைத் தாள முடியாமல் அவள் மாமனாரும் மாமியாரும் போய்ச் சேர்ந்தார்கள்.

ஞானத்துக்கு துக்கம் அனுஷ்டிக்கக் கூட சாவகாசம் இல்லை. நாராயணனின் தம்பிகள் இருவரும் மிகவும் சிறு வயதினர். அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஞானத்தின் தலையில் விழுந்தது.

ஞானத்துக்கு என்ன தெரியும்? வீட்டு வேலைகள் செய்யத் தெரியும். நன்றாகச் சமைக்கத் தெரியும். வேறென்ன தெரியும்?

ஆனால் அவளுக்குத் தெரிந்த சமையலே அவளையும் அவளைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றியது .

சில தெரிந்தவர்களின் உதவியோடு ஞானம் சிறிய அளவில் ஊறுகாய், வடகம், அப்பளம் போன்ற பொருட்களைத் தயாரித்து அக்கம் பாக்கம் விற்க ஆரம்பித்தாள். அவற்றைத் தயாரிப்பதில் அவள் காட்டிய கவனமும் தரமும் அந்த சிறிய வியாபாரத்தைப் பெரிய அளவில் மாற்றியது.

அவள் மைத்துனர்கள் சில ஆண்டுகளில் பெரியவர்கள் ஆனார்கள். மன்னிக்குத் துணையாக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். கடவுள் அருளால் அது நன்றாக வளர்ந்தது. வீட்டில் இருந்து செய்து கொண்டிருந்த வியாபாரம் சிறிய கடை வைக்கும் அளவுக்கு வளர்ந்தது. அக்கம் பக்கம் என்று விற்றுக்கொண்டிருந்தவர்கள்  அயலூருக்குச் சென்று விற்றார்கள்.

மெது மெதுவாக பல கடைகளில் இருந்து ஹோட்டல்களில் இருந்து ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. பணமும் வந்தது. மைத்துனர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் மனைவிமாரும் குடும்ப வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். செல்வம் சேர்ந்தது. ஆளுக்கு ஒரு வீடு வாங்கிக் கொண்டார்கள். ஞானம் தான் அந்த பழைய வீட்டை விட்டு வர மறுத்து விட்டாள்.

முன் கட்டு ரேடியோ

வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா:
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:

(ஆசை, பயம், சினம் இவற்றை விட்டு என்னிடம் சரணடைந்த பலர், ஞானதவத்தால் தூய்மையடைந்து என்னிடம் நல்ல முறையில் அன்பு கொண்டுள்ளனர். என்னிடம் அவர்கள் சரணடைவதற்கேற்ப நான் பலன் அளிக்கிறேன். எவ்வழியிலும் அவர்கள் என்னையே பின்பற்றுகின்றனர்.)

என்று சொல்லிக் கொண்டிருந்தது.

இதோ நாளைக்கு ஞானத்துக்குப் பிறந்த நாள். அதை வெகு விமரிசையாகக் கொண்டாடப் போகிறார்களாம். ஞானமோ  தன் பாட்டுக்கு வளைய வந்து கொண்டிருந்தாள். அவள் மனம் எதிலும் ஈடுபடவில்லை.

விடிந்தால் கொண்டாட்டம். அதற்காகத் தான் ஊரிலிருந்து எல்லாரும் வந்திருக்கிறார்கள். ஞானத்துக்கு திடீரென்று நாராயணன் ஞாபகம் வந்தான்.

கல்யாணத்தன்று செய்தது போலவே கழுத்தருகே கிச்சு கிச்சு மூட்டினான்.
டேய் விடுறா! என்ன பண்ற? என்றாள் ஞானம்.

ரேடியோ

ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி:  ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம் ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா

என்று சொல்லிக்கொண்டிருந்தது.

என்ன பாட்டி? யாருகிட்டப் பேசிண்டு இருக்க? என்று கேட்ட சங்கீதாவுக்கு பதில் கிடைக்கவில்லை.

ஞானம் படுத்திருந்த இடத்தின் மேலே சுவற்றில் கிருஷ்ண பரமாத்மா காரணம் சொல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தார்.
  

1 comment:

பாலா திரு said...

சுகம் எதையும் அறியாத ஞானம் (ஞானம் என்றே சொல்லுகிறேன்) தன் வாழ்க்கை முழுவதும் மற்றவர்களுக்காக அரபணித்த அழகு தெய்வம். பாட்டி என்று கூப்பிட மனமில்லாமல் ஞானத்திற்கு ஒரு அழகு என்னும் ஒரு பேதை.கணகளில் கண்ணீர் கசிந்தது. நன்றாக சித்தரிக்கப் பட்ட சிறு கதை.ஞானம் ஒரு தியாகத் திலகம்.