Never apologize for showing feeling. When you do so, you apologize for the truth.
Wednesday, April 23, 2014
மன்னிக்க வேண்டுகிறேன்’
சுஜாதாவுக்கு ஒரே வெறுப்பாய் இருந்தது. இவ்வளவு அழகான பெயருள்ள தனக்கு ‘வெங்கடேசன்’ என்ற பெயரில் கணவனா? காதலுக்குத் தான் கண்ணில்லை என்பார்கள் கடவுளுக்குக் கூடவா கண்ணில்லை?
பெயரையாவது மன்னிக்கலாம். ஆனால் அன்பு என்கிற பெயரில் அவன் நடவடிக்கைகள் அவளை மூச்சுத் திணற வைத்தன. எப்பொழுதும் அவள் பின்னாலேயே குழைந்து கொண்டு வருவது... ப்ப்ப்பா என்று திரைப்படத்தில் சொல்வது போல் கத்திச் சொல்லவேண்டும் போலிருக்கும்.
மேலும் அவன் புரோகிதத் தொழில் செய்பவனாதளால் அவன் குடுமி வைத்திருப்பான். பஞ்சகச்சம் வேஷ்டி தான் கட்டுவான். அதுவும் அவளுக்குப் பிடிக்காது. எப்போதும் ஹோமப் புகையுடன் காலம் கழிப்பவனாதலால் அவன் உடலில் இருந்து ஒரு பெர்மனென்ட் ஹோம வாசனை (?) அடித்துக் கொண்டிருக்கும். அதுவும் பிடிக்காது.
ஆனால் இன்று அவள் சந்தோஷமாக இருக்கிறாள். ஒரு பதினைந்து நாள் தன் அம்மா வீட்டுக்குப் போகிறாள். அவள் தங்கைக்குக் கல்யாணம். ஆனால் தங்கைக்கு வரப்போகிற கணவன். வெங்கடேசன் போல் புரோகிதனல்ல, ஒரு கம்பனியில் வேலை செய்கிறான். தங்கை தானே பார்த்துக் கொண்ட வரன்.
கொஞ்ச நாள் தன் கவலை மறந்து இருக்கலாம் என்று நினைத்தாள். அவளை ஊருக்குக் கொண்டு விட வெங்கடேசனும் வருகிறான். வந்து உடனே திரும்பி விடுவான். பின் கல்யாணத்துக்கு முதல் நாள் தான் வருவான்.
இரண்டு வாரம் ஜாலியாக இருக்கலாம். பிடிச்ச சீரியல் பார்க்கலாம். சிநேகிதிகளுடன் சினிமா போகலாம்.
இப்படி யோசித்துக்கொண்டிருந்த சுஜாவின் என்ன ஓட்டத்தை வெங்கடேசன் கலைத்தான். ‘சுஜா, குடிக்க பவண்டோ வாங்கிண்டு வந்திருக்கேன். இந்தா’ என்றான். சுஜாவுக்குள் ஒரு எரிமலை வெடித்தது. வாங்கினது தான் வாங்கினான், ஒரு பெப்சி வாங்கியிருக்கலாமே! பவண்டோவாம்!
‘வேண்டாம்’ என்று வெடுக்கென்று சொல்லி ஜன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தாள். அவள் கோவத்தின் காரணம் அறியாத வெங்கடேசன் அவளையே பரிதாபமாக பார்த்தான்.
ஜன்னல் வெளியே பார்த்துக்கொண்டிருந்த சுஜாவின் கவனத்தை அந்த ஸ்டாண்டில் சற்று தள்ளி நின்று நின்று கொண்டிருத்த ஒரு கணவன் மனைவி கவர்ந்தார்கள்.
அந்தப் பெண் ரொம்ப சாதரணமாக இருந்தாள். அவள் கணவன்! ஆஹா, உயரமாக, மாநிறத்தில் கவர்ச்சியாக இருந்தான். அவன் உடையிலும் முகத்தில் ஒரு ஆளுமை தெரிந்தது. எதையும் சாதித்துக் கொள்பவன் போலத் தெரிந்தான்.
அவன் மனைவி அவனுக்கு ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்துத் தந்து கொண்டிருந்தாள். அதை அவன் மென்று அதன் கொட்டையை அலட்சியமாகத் துப்பிக்கொண்டிருந்தான். கடைசியாக ஒரு சுளை அவன் கையில் அந்தப் பெண் கொடுத்தாள். அதைக் கையில் சற்று அழுத்தமாக அவன் பிடித்து வாங்கியதால் அந்தச் சுளை பிரிந்து அவன் கையெங்கும் அதன் ரசம் வழிந்தது. நிதானமாக அதையும் சாப்பிட்டான்.
அவன் கையில் வழிந்த ரசத்தைக் அலம்ப, அந்தப் பெண் ஒரு பாட்டில் தண்ணீர் கையில் தயாராக வைத்திருந்தாள். (ஆளுமை!) அதைச் சற்றும் மதிக்காமல் அவன் தன் ஈரமான கையை தன் மனைவியின் தோள்பட்டைப் பக்கம் ரவிக்கையில் வைத்து அழுந்தித் துடைத்தான். ஒரு கணம் ஏதோ சொல்ல வாயெடுத்த அந்தப் பெண் மவுனமானாள். அந்தத் தூரத்திலிருந்தும் அவள் கண்கள் பனித்தது சுஜாவுக்குத் தெரிந்தது.
அந்தக் காட்சியின் தீவிரம் தாக்க, ஜன்னல் பக்கமிருந்து இந்தப் பக்கம் தன் முகத்தைத் திருப்பியவள் அதிர்ந்தாள். வெங்கடேசன் பவண்டோ பாட்டிலை கையில் ஏந்தியபடி இன்னமும் அவளைப் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒரு கணம் யோசித்த அவள், அந்த பாட்டிலை வாங்கி தன் பக்கம் வைத்தாள். பின்னர் அவன் கைகளுக்குள் தன் கையை நுழைத்துக் கோர்த்து அப்படியே அவன் தோள் மீது தலை சாய்த்துக் கொண்டு அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
பஸ் ஸ்டாண்ட் டீக்கடையிலிருந்து ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று சுசீலாவும் சவுந்திரராஜனும் பாடிக்கொண்டிருந்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment