Tuesday, March 18, 2014

விமலா - ஆனால் வயது அதிகம்.


திருவல்லிக்கேணியில் இருவது வருஷம் முன்னால் நான் காதலித்த   விமலாவைப்  புதுதில்லி விமான நிலையத்தில் அவள் புருஷனோடு சந்திப்பேன் என்று நினைக்கவில்லை.

நான் காதலித்த விமலா  என்று சொன்னதும் ஏதோ நாங்கள் இருவரும் காதலர்கள் என்று நினைத்து விடாதீர்கள். என்னது ஒருதலை ராகம்.

விமலா  நல்ல அழகி. நல்ல கலர். உயரம். பாவாடை தாவணியை செக்சியாகக் கட்டத் தெரிந்த ஒரே ஒருவள் அவள்தான். அவளிடம் பேசும் ஆண்கள் தலை குனிந்து பேசுவதற்கு அவள் லோ ஹிப் ஒரு முக்கிய காரணம்.

எனக்கு எதிர் வீடு தான். நல்ல பழக்கம். என்னை ‘கண்ணா’ என்று பெயர் சொல்லிக் கூப்பிடுவாள். என் பெயரை ரசித்து சுவைத்து அவள் சொல்வதைக் கேட்கும்போது உடம்பை என்னமோ பண்ணும்.

நாங்கள் இரண்டும் குடும்பங்களும் ஒன்றாக சினிமாவுக்கு போவோம் மாதம் ஒரு முறை. அந்த சமயங்களில் எனக்கு அவள் அருகில் உட்கார சான்ஸ் கிடைக்கும்.  அப்படிப்பட்ட ஒரு இருட்டான சான்ஸின் போது முதல் தடவை அவள் கைகளைத் தொட்டேன். முதலில் ஒன்றும் சொல்லாமல் இருந்தவள் பின்னர் ‘த்சூ’ என்று கையைத் தட்டி விட்டாள். அதற்கப்புறம் பார்த்த படங்களின்போது என்னருகில் உட்காருவதைத் தவிர்த்து விட்டாள்.

அப்புறமும் பல சமயங்களில் புதிராகவே இருந்தாள். அவளுக்கு என்னைப் பிடித்ததா இல்லையா என்றே புரியவில்லை. சரி என்ன ஆனாலும் அவளைக் கேட்டு விடுவது என்று முடிவு செய்தேன்.

ஒரு நாள் நாங்கள் இருவரும் பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றோம். நரசிம்மர் சன்னதியில் தரிசனம் பண்ணிக்கொண்டு அப்படியே வலப்பக்கம் வந்து பிராகாரத்தில் உட்கார்ந்தோம். எதிரே குழலூதும் கிருஷ்ணன் சிலை. நல்ல ரொமாண்டிக் சூழ்நிலை தான்.

எது எதையோ பேச ஆரம்பித்து கடைசியில் ஒரு மாதிரி அவளிடம் கேட்டே விட்டேன்.

ஒரு சிறிய அமைதி. எனக்கு பயமாகப் போயிற்று.

“விமலா ! எதுவா இருந்தாலும் சொல்லு. உன் பதில் என்னவா இருந்தாலும் நாம நண்பர்கள்தான்”

“கண்ணா! (எப்போதும் போல உடம்பை என்னமோ செய்தது!) நீ ஒரு முட்டாள். உன் வயசென்ன என் வயசென்ன? நான் உன்ன விட நாலு வயசு பெரியவ. இதெல்லாம் நடக்காத ஒண்ணு. போகாத ஊருக்கு வழி தேடாதே”

“வயசு ஒரு விஷயமா? நான் உன்ன விட ஹைட்டா இருக்கேன். வெயிட்டும் ஜாஸ்தி!”

“ஒளறாதே! சரி, வா வீட்டுக்குப் போகலாம், நேரமாச்சு” என்று எழுந்தவள் அதற்கப்புறம் என்னுடன் பேசுவதையே தவிர்த்தாள். நாளடைவில் நின்றே போச்சு.

அதற்கப்புறம் படிப்பு வேலை கல்யாணம் என்று பிரிந்தவர் இன்று தற்செயலாக தில்லி விமான நிலையத்தில்!

“ஹாய்!  நான் விமலா ! ஞாபகம் இருக்கா?”

“ம்ம்ம். எப்படி இருக்கே? நான் என் மனைவிய ரிசீவ் பண்ண வந்திருக்கேன். நாங்க தில்லில தான் இருக்கோம்.  ஜி கே II.”

“நாங்க குர்கான்வுல இருக்கோம். எங்க சன்ன ரிசீவ் பண்ண வந்திருக்கோம்” என்று சொல்லி “ஏங்க, இங்க வாங்களேன். மீட் மை சைல்ட்ஹுட்  ஃரெண்ட்  கண்ணன்” என்று தன் கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

“ஹாய்” என்று கை குடுத்தவனிடம் “இவனுக்கு மட்டும் ஒரு நாலு வயசு கூட இருந்திருந்தா இவனத் தான் கல்யாணம் செஞ்சிருப்பேன்” என்று சொல்லி விமலா  சிரித்தாள்.

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. என் முகம் போன போக்கைக் கவனித்த அவள் கணவன் “டேக் இட் ஈஸி பாஸ்!” என்றான். பின்னர் என் அருகில் வந்து “கொஞ்சம் பலமா முயற்சி பண்ணியிருந்தியானா சக்சஸ் ஆயிருக்கும்” என்றான்.

எனக்குப் புரியவில்லை.

அதற்குள் பிரயாணிகள் வெளியே வரத் துவங்கியிருந்தனர். என் மனைவியும் அவர்கள் மகனும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் வெளியே வந்தனர்.

அவர்கள் இது தான் எங்கள் மகன் என்று அந்த இளைஞனை அறிமுகம் செய்தார்கள்.

‘ஹாய் அங்கிள்! ஐ யாம் கண்ணன்” என்றான் அவன்.

எனக்குப் புரிந்தது.

"என்ன கண்ணா! உன் wife-a எங்களுக்கு introduce செஞ்சு வக்க மாட்டியா?" என்று விமலா கேட்டாள். நான் எந்த ஒரு பதிலும் சொல்லுவதற்கு முன்னரே என் மனைவி தானே அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

"Hi! Pleased to meet  you. I am Vimala".

2 comments:

Unknown said...

Niceeeee story.. Nalla but guess panna mudivu.. All d best..

ASTRO REMEDY-VENKAT ANANTHARAM said...

Yadhartham....