Wednesday, March 12, 2014

சுமை


சாருலதாவுக்கு அப்பா அம்மா மேல ரொம்ப கோவம்.

அது என்ன எப்போ பார்த்தாலும் கல்யாணப் பேச்சு? அதுவும் வீட்டுக்கு யாரும் வந்துவிட்டால் அவங்களுக்குக் கொண்டாட்டம்தான். சப்போர்ட்டுக்கு ஆள் கிடைச்சுடுமே!

நகரின் பிரபல மருத்துவமனையில் ஒரு டாக்டர் அவள். எலும்பு முறிவு ஸ்பெஷலிஸ்ட். அந்த எண்ணம் துளி கூட இல்லாமல் தன் பெற்றோர் தன்னை இன்னும் சின்னக்குழந்தை போல நடத்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

காலைல கூட இந்தப் பேச்சு. போன மாசம் நடந்த சொந்தக்காரர் கல்யாணத்தில் இவளைப் பார்த்த ஒரு பையனுக்கு இவளை ரொம்ப பிடித்துவிட்டதாம். கல்யாணம் பண்ணினால் இவளைத் தான் பண்ணுவேன் என்று பிடிவாதமாம். அவன் அப்பா அம்மா மூலம் செய்தி வந்தது,

நல்ல வசதியான குடும்பம். பையனும் பார்க்க நல்ல களை. கலர். இவள் பெற்றோருக்கு ரொம்பவே பிடித்திப் போயிற்று. ஒரு வாரமாகவே இவளை நச்சரித்து வருகின்றனர். இவளும் பிடி கொடுக்காமல் நழுவி வந்தாள்.
இன்று காலையில் மாட்டிக்கொண்டாள்.

கல்யாணப்பேச்சைக் கேட்டதும் சாரு கடுப்பானாள். அவள் முகம் போன விதம் கண்டு அவள் அம்மா ரொம்ப கோவமாக “ இப்ப என்னதான் சொல்ற நீ? கல்யாணம் பண்ணிக்க இஷ்டமா இல்லையா? இல்லை உன் மனசுல வேற யாரும் இருக்காங்களா? இருந்த சொல்லிரு. நல்லா இடமா இருந்தா அதையே முடிச்சிரலாம்” என்றாள்.

“ அப்படீல்லாம் ஒண்ணும் இல்லேமா! எனக்கு கல்யாணம் வேண்டாம். அவ்ளோதான்”

“அதுதான் ஏன்னு கேக்கறேன்?” என்ற அம்மாவிடம் சாரு பொரிந்து தள்ளி விட்டாள்.

“ என்ன எப்போப் பாரு கல்யாணம் கல்யாணம்? அதுனால என்ன யூஸ்? ஆணுக்குப் பொண்ண அடிமையாக்கறதத் தவிர அது என்ன சாதிக்கும்? போறாததுக்கு குழந்தை பெத்துக்கற அவஸ்தை வேற! இந்த கடவுள் கூட ஆம்பிளைங்க பக்கம். சுகமெல்லாம் அவங்களுக்கு. கஷ்டமெல்லாம் நமக்கு. ரொம்ப பார்ஷியல். இந்த சுமை சுமக்கற வேலையெல்லாம் எனக்கு செட் ஆகாது”

அவள் பெற்றோர் என்ன பதில் சொல்வதென்று தெரியாது திகைத்து நின்றனர்.

கோவத்தில் காலை டிபன் கூடச் சாப்பிடமால் ஹாச்பிடலுக்குத் கிளம்பிச் சென்றாள். போய்ச் சேர்ந்த உடனேயே ஒரு எமர்ஜென்சி கேஸ்.

கார் பார்க்கிங் பில்லர் விழுந்ததில் தோளில் பலமாக அடிபட்டுக் கொண்ட ஒரு இளைஞன், மற்றும் அதே விபத்தில் அடிபட்டுக்கொண்ட ஒரு வயதானவர்.

வயதானவருக்கு பெரிய அடியொன்றும் இல்லை. சின்ன காயம் தான். ஆனால் அந்த இளைஞனுக்கு நல்ல அடி. அந்தப் பில்லரின் முழு பாரமும் அவன் தோளில் விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில் ஒரு இடத்தில் அதிக முறிவு. கட்டுப்போட்டாலும் குறைந்தது இரண்டு மாதமாவது ஆகும் கூடி வருவதற்கு. அவனுக்கு எல்லா சிகிச்சையும் முடித்தாள்.

பின்னர் தன் வழக்கமான ரவுண்ட்சுக்கு போனாள். சுமார் ஒரு இரண்டு மணி நேரம் கழித்து அவனைப் பார்க்கப் போனாள். மயக்கமருந்திலிருந்து சற்று விடுபட்டிருந்தான். இவளைப் பார்த்ததும் சிநேகமாக சிரித்தான்.

“என்ன சார்! ஹீரோவாமே நீங்க? பெரியவர் சொன்னார். அவர் மேல விழ இருந்த பில்லர நீங்க தாங்கிக்கிட்டீங்களாமே! ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு” என்றாள்.

“ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை டாக்டர். அவர் வயசானவர். அந்த வெயிட் அவரால நிச்சயமா தாங்கியிருக்க முடியாது. என்னால முடியும். யாரால பாரம் தாங்க முடியுமோ, யாருக்கு அந்த உடல் அல்லது மன வலிமை இருக்குதோ, அவங்க பாரத்தத் தாங்கறது தானே முறை? அதுதானே இயற்கை நியதி?” என்றவனின் சொற்கள் அவளுக்கு எதையோ புரிய வைத்தது.

“எனக்கு கல்யாணத்துக்குச் சம்மதம்” என்று மகளிடமிருந்து போன் வந்ததிலிருந்து சாருவின் அப்பா அம்மாவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.



2 comments:

Unknown said...

இதில் சுமைதாங்கி யார்?சாருவா?அவளைப் பெற்றவர்களா?
visali sriram.

Unknown said...

இதில் சுமைதாங்கி யார்?சாருவா?அவளைப் பெற்றவர்களா?
visali sriram.