Wednesday, July 30, 2014

கொல்லத் திறந்தது கதவு


உன்கிட்ட அவன் மயங்குவான்டி மாலினி, அது தான் அவனுக்கு அழிவுன்னு என் புருஷன் சொன்னார். அது எப்படி அவ்வளவு துல்லியமா அவரால உங்கள ஜட்ஜ் செய்ய முடிஞ்சுது?

மாலினியின் குரலில் தெரிந்தது ஆச்சர்யமா இல்லை ஏளனமா என்று என்னால் ஜட்ஜ் செய்ய முடியவில்லை. ஆனால் நான் ரொம்ப சாமர்த்தியசாலி என்று நினைத்து போட்ட ப்ளான் வேஸ்ட் என்பது மாத்திரம் தெரிந்து விட்டது.

மாலினி என் மைத்துனி. என் மனைவியின் தங்கை. ரொம்ப அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் சிலபல குற்றங்களைச் செய்யத் தூண்டும் உடல்வாகு. அவளது வளைவான இடையில் என் விழிகள் செய்யும் பயணம் என் மனைவி அறிவாள். ஏன் மாலினி கூட ஓரிரு முறை கவனித்து இருக்கிறாள் என்று நினைக்கிறேன். ஆனால் சந்திரனுக்கும் தெரியும் என்பது கொஞ்சம் சர்ப்ரைஸ் தான்.

ஆனால் இனிமேல் அவனுக்குத் தெரிந்து என்ன தெரியா விட்டால் என்ன? அவன் தான் செத்துப் போய்விட்டானே!

கண்ணாடியைப் பார்த்தேன். கண்ணாடியில் இருந்து என்னை சந்திரன் பார்த்தான். அதாவது சந்திரன் உருவில் இருந்த நான். ஆனால் அந்த முகத்தில் ஒரு குழப்பம்.

‘என்னடா இது புதுக்குழப்பம் என்று நீங்கள் கேட்பதற்கு முன் உங்களை சற்று திருவண்ணாமலை வரை கூட்டிச் செல்லலாம் என்று இருக்கிறேன். அதுவும் ஒரு பத்து மாதம் முன்னால். 

ஒரு பில்டிங் காண்ட்ராக்ட் விஷயமாக நான் அங்கு சென்றிருந்தேன். சர்கார் கட்டும் ஒரு பெரிய ஹவுசிங் ப்ராஜக்ட். சர்கார் என்றாலே தரம் குறைந்த சிமண்டும் நிறைய லாபமும் என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் ஒரு சரியான இந்தியப் பிரஜை. இந்த மாதிரி ஏற்கனவே இரண்டு ப்ராஜக்ட் செய்து தான் நகரின் முக்கியப் புள்ளிகளில் ஒருவனாக உயர்ந்திருக்கிறேன்.

ப்ராஜக்ட் சைட் சென்று பார்த்து விட்டு திரும்பி வந்து கோவிலில் தரிசனம் செய்து விட்டு நான் தங்கி இருந்த லாட்ஜுக்கு வந்தேன். சிறிது நேரம் ஒய்வு எடுத்து விட்டு சாப்பிட சுமார் எட்டு மணிக்கு ஹோட்டலுக்குச் சென்றேன். டின்னருக்குப் பின்னர் ஒரு புகை இழுத்துவிட்டு வரலாம் என்று சற்று ஒதுக்குப்புறமான இடத்துக்குச் சென்றேன்.

ஆனந்தமாக புகையை இழுத்து வெளியே விடும் போது சரேலென்று இருட்டிலிருந்து ஒரு உருவம் வெளியே வந்தது.

திடுக்கிட்டு கத்த நினைத்த நான் அது ஒரு சாமியார் என்று தெரிந்து அமைதியானேன்.

“என்ன பயந்துட்டியா?”

“ ஆமாம் சாமி., யாருதான் பயப்படமாட்டாங்க? இருட்டில என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?”

“ அதெல்லாம் போகட்டும். சாப்பாடு வாங்கிக் கொடுப்பியா?”

‘வாங்க’ என்று சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு போய் ஹோட்டலில் சாப்பிட வைத்தேன்.

இரண்டு செட் பூரிக் கிழங்கு சாப்பிட்ட சாமி, கையை தன் வேட்டியிலேயேத் துடைத்துக்கொண்டு வெளியே போனார். பின் தொடர்ந்து போன என்னைப் பார்த்து “சாமிக்கு சந்தோஷம்! என்ன வேணும்?”

முதலில் தயங்கிய நான் “ ஒரு காண்ட்ராக்ட் விஷயமா வந்தேன். வேலை சக்ஸஸ் ஆகணும்னு ஆசிர்வார்தம் குடுங்க” என்றேன்.

என்னைக் கூர்ந்து பார்த்த சாமி, தன் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு முடிச்சுப் பையைத் திறந்து கையை உள்ளே விட்டு ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்தார். அதற்குள் இரண்டு மாத்திரை மாதிரி இருந்தது அதன் transparent மூடி வழியாகத் தெரிந்தது.

“இத வச்சுக்கோ. நீ நெனச்சது நடக்கும். நீ புத்திசாலி” என்றார்.

“இத என்ன பண்ணணும் சாமி?”

“இத சாப்பிட்டா ஒரு இரண்டு மணி நேரம் வரைல நீ உன் உடம்ப விட்டு வெளிய வரலாம். எங்க வேணா போகலாம் சுத்தலாம். வேகம் தூரம் தடையெல்லாம் இருக்காது. எதுவும் உன்னத் தடுக்காது. உனக்குப் பிரியம்னா பர காயப் பிரவேசம் கூடப் பண்ணலாம். ஆனால் இரண்டு மணி நேரத்துக்குள்ள உன் உடம்புக்குள்ள வந்திடணும். நீ புத்திசாலி. பாத்து நடந்துக்கோ” என்று சொல்லித் திரும்பவும் இருட்டில் மறைந்தார்.
கொஞ்ச நேரம் வரை ஸ்தம்பித்து நின்றேன். கனவா நனவா என்று புரியாத கயிற்றரவு நிலை.

அப்புறம் அடுத்த நாள் சென்னை வந்தது ப்ராஜக்ட் டெண்டரில் மூழ்கியது என்று கிட்டத்தட்ட அந்த சாமியாரை மறந்தே விட்டேன். டெண்டர் சப்மிஷன் நாள் நெருங்கியது. அதற்கு ஒரு நாள் முன்னர் சுந்தரமூர்த்தியிடம் இருந்து போன் வந்தது.

சுந்தரமூர்த்தி சாகர் கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பார்க்கிறான். அது என் எதிரி கம்பெனி. அந்த திருவண்ணாமலை ப்ராஜக்டில் ஒன்று அவன் அல்லது நான் என்ற நிலை. எப்படியாவது அவன் டெண்டர் கொட்டேஷன் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக அவனிடம் வேலை பார்த்த சுந்தரமூர்த்தியை கரெக்ட் செய்தி வைத்திருந்தேன். இதோ அவனிடம் இருந்து தான் போன். வேலை முடிந்துவிட்டது போல.

“என்னய்யா, முடிஞ்சுதா வேலை?”

“ இல்ல சார்! இந்த வாட்டி சாகர் யாரையும் கிட்ட சேக்கல. அவரும் அவர் தம்பியுமா இன்னிக்கி ராத்திரி தனியா உக்காந்து வேலைய முடிக்கப்போறாங்க. அதச் சொல்லத்தான் போன் செஞ்சேன்.”

நான் அதிர்ந்து போனேன். என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என்று மூளையின் செல்கள் துரித வேகத்தில் வேலை செய்யத் துவங்கின. எப்படி ஏன் என்று சொல்ல முடியாத ஒரு தருணத்தில் எனக்கு திருவண்ணாமலையின் சாமியாரும் அவர் தந்த மாத்திரையும் நினைவுக்கு வந்தன.

ஒரு மின்னல்! ஒரு புன்சிரிப்பு.

சரியாக இரவு பத்து மணிக்கு என் ஆபீசில் யாரும் இல்லாத வேளையில், கதவைச் சாத்திவிட்டு என் கேபினில் சென்றேன். அந்த பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்து அதில் இருந்த ஒரு மாத்திரை எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டேன்.

சற்றே இனித்தது. முழுவதும் கரைந்து உள்ளே சென்றது. சிறிது நேரத்தில் ஒரு வித மயக்கத்தில் என் சேரில் விழுந்தேன். அப்புறம் திடீரென்று என் கண்கள் திறந்தன. என் ஆபீஸ் தெரிந்தது. சேரில் விழுந்திருந்த என் உடம்பு தெரிந்தது. ஆஆ.. சொன்னபடி ஆயிற்றே! நான் என் உடலில் இருந்து வெளியே வந்து விட்டேன். கனமே இல்லாதது போல ஒரு உணர்வு. காற்றில் பறப்பது போல ஓர் உணர்வு. சரி இனிமேலும் நேரம் வீணடிப்பது சரியில்லை என்று ஜன்னலைத் திறந்து வெளியில் வெட்ட வெளியில் கால் வைத்தேன். விழவில்லை. மாறாக உடம்பில் ஒரு தெம்பு வந்தது. வெகு வேகமாக நடக்கலாம் போலத் தோன்றியது. சட்டென்று சாகர் கன்ஸ்ட்ரக்ஷன் ஆபீஸ் இருந்த இடத்துக்கு வானத்திலேயே வேகமாக நடந்து சென்றேன்.

நினைத்தது போலவே ஆபீஸ் மூடியிருந்தது. உள்ளிருந்து வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. கதவைத் திறக்காமலே அதன் ஊடாக உள்ளே சென்றேன். சாகர் கேபினில் இருந்து தான் வெளிச்சம். கதவின் ஊடாக உள்ளே சென்றேன். சாகரும் அவன் தம்பியும் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.

அருகில் இருந்த லேப்டாப்பில் அந்த டெண்டர் டாக்குமெண்ட் திறந்திருந்தது. நான் எல்லா விவரங்களையும் பார்த்தேன். கடைசியில் அவர்கள் கோட் செய்திருந்த project costஐயும் பார்த்தேன். சிறிது நேரம் அங்கே நின்றேன். இருவரும் அந்த டாக்குமெண்ட் மீண்டும் ஒரு முறை படித்தார்கள். பின்னர் சாகர் கையெழுத்திட்டான். அதை ஒரு கவரில் வைத்து மூடினார்கள்.

“டேய், நீ நாள காலம்பற திருவண்ணாமலை போயி குடுத்துட்டு வந்திடு” என்றான் சாகர் தம்பியிடம். அவனும் தலையசைத்தான்.

பின்னர் இருவரும் தங்கள் பைகளை எடுத்துக் கொண்டு ( அந்தக் கவரையும் தான்) லைட் அணைத்து விட்டு, வெளியே வந்தார்கள்.

வெளியே வந்தவர்கள் வாட்ச்மேனிடம் ஆபீஸ் பூட்டச் சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றார்கள்.

நான் பின்னர் என் ஆபீஸ் திரும்பினேன். சேரில் இருந்த என் உடல் அருகில் சென்றேன். திடீரென்று ஒரு வெளிச்சம். கண்ணைக் கட்டியது. அது விலகி கண் திறந்து பார்த்தால் நான் என் உடலுக்குள்.

அப்புறம் அந்த டெண்டர் தயாரித்தது, சாகர் கன்ஸ்ட்ரக்ஷன் விட குறைந்த cost கோட் செய்தது, அந்த ப்ராஜக்ட் எனக்கே கிடைத்தது, அதனால் எனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் லாபம் மற்றும் நல்ல பெயர், இத்யாதி இத்யாதி உங்களுக்கு அவ்வளவு இன்ட்ரஸ்டிங்காக இருக்காது. அதனால் மாலினி மேட்டருக்கு வருகிறேன்.

மாலினி என் மைத்துனி என்று ஏற்கனவே சொன்னேன். அவளை அடைய என் ஒவ்வொரு அணுவும் துடித்ததைச் சொன்னேனா? இல்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.


நான் பல பெண்களைப் பார்த்துவிட்டேன். என் இளமையில் இருந்து இந்த ஐம்பது வயது வரை. இருந்தாலும் மாலினி ஒரு விதமாக என்னை தொந்திரவு செய்தாள். ஆனால் அவளை அடையும் வழி தான் தெரியவில்லை.

அவளோ சந்திரனோ பணத்துக்கு மசிபவர்கள் அல்ல. மேலும் நெருங்கிய உறவு வேறே. சற்று கவனத்துடன் நடந்து கொள்ளவில்லை என்றால் பெயர் கெட்டுப்போகும்.

அப்போது தான் அந்த சந்தர்ப்பம் வந்தது. இதை சந்தர்ப்பம் என்று சொன்ன என்னை நீங்கள் செருப்பால் அடிப்பீர்கள் என்று தெரியும். இருந்தாலும் சொல்லித்தானே ஆக வேண்டும்?

ஒரு நாள் காலையில் மாலினியிடமிருந்து போன். “மாமா” என்று கதறினாள். “உடனே வாங்க”. 

“போயி பாத்துட்டு வாங்க. நான் கொஞ்சம் கழிச்சு பெரிய கார்ல வந்துடறேன்” என்றால் பூஜையில் இருந்த மனைவி.

சந்திரன் வீட்டுக்குப் போனால், அங்கே ஒரு விபரீதம். சந்திரன் இறந்து கொண்டிருந்தான்.

என்னவென்று தெரியவில்லையாம். திடீரென்று மூச்சு அடைப்பது போல் இருந்ததாம். அப்புறம் சிறிது சிறிதாக அடங்க ஆரம்பித்து விட்டானாம். இது தான் நீ எதிர்பார்த்த சந்தர்ப்பம் என்று என்று என் காமம் காதில் ஓதியது. நான் மாலினியிடம் வெளியே போகச் சொன்னேன். அங்கே இருந்த பாத் ரூமுக்குள் சென்றேன். பாக்கட்டில் பத்திரமாக வைத்திருந்த அந்த மாத்திரையை எடுத்து விழுங்கினேன்.

வசதியாக பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டேன். அப்புறம் எல்லாம் முன் சொன்ன படியே நடந்தது. ஒரு வித்தியாசம். நான் சந்திரன் உடலுக்குள் நுழைந்தேன். எழுந்தேன். “மாலினி” என்று சந்திரன் குரலில் கூப்பிட்டேன். 

உள்ளே நுழைந்தவள் சொன்ன வார்த்தைகளைத்தான் முதலில் கொடுத்து இருக்கிறேன்.

“என்னடி சொல்லுகிறாய்?”

“நீங்க என் மாமாங்கறது தெரியும். மாத்திரை சாப்பிட்டுக் கூடு விட்டு கூடு பாஞ்சிருக்கீங்கன்னு தெரியும்.” என்று சொல்லிச் சிரித்தாள்.

“பாவி! எப்படித் தெரியும்?”

“அது மட்டுமில்ல மாமா! இப்ப நீங்க சாகப்போறீங்கன்னும் தெரியும். இன்னும் கொஞ்ச நாள்ல என் அக்காவும் சாகப்போறாங்கறதும் தெரியும். அப்புறம் நானும் என் புருஷனும் உங்க சொத்த அனுபவிச்சுக்கிட்டு வாழப்போறோம். அதுவும் தெரியும்.

முக்கியமா அதுக்கு முன்னால இந்த பாத்ரூம் கதவு திறக்கபோவுது. அதிலிருந்து உங்க உருவத்துல என் புருஷன் வெளில வரப் போறார். அப்புறம் உங்களுக்கு தி எண்டு தான்” என்று சொல்லிச் சிரித்தாள் மாலினி. 

அவள் சொல்லியது போலவேக் கொல்லத் திறந்தது கதவு.

நான். அதாவது என் உருவில் இருந்த சந்திரன்.

“என்ன சகல! இப்புடி விழுந்திட்டியே! அந்த சாமியார் நான் சொல்லித் தான் உன்கிட்ட வந்தார். இதோ என் கையில இருக்கற இந்த விஷம் கூட அவர் கொடுத்ததுதான். டாக்டர் பார்த்தாக்கூட ஹார்ட் அட்டாக்னு தான் சொல்லுவாராம். பாத்துடுவோமே!” என்று சொல்லியபடி என்னை நெருங்கினான்.

என் கண்கள் கடைசியாக ஒரு முறை மாலினியின் இடையில் பயணம் செய்தது.

1 comment:

பாலா திரு said...

Excellent. Thriller again. End is superb. Keduvan kedu ninaippaan.